Home இலங்கை மட்டக்களப்பில் அடிகாயங்களுடன் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பில் அடிகாயங்களுடன் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

by admin


மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட மாவடிமுன்மாரி, விடுதிக்கல் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை காலை அடிகாயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குழந்தைவேல் குருசாந்தராஜா (40வயது) என்பவரே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் உயிரிழந்த நபரின் மனைவியின் முதலாவது கணவனின் பிள்ளைகளை கைதுசெய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கொக்கட்டிச்சோலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முன்னாள் கணவரின் பிள்ளைகள் அநுராதபுரத்தில் இருந்துவந்த நிலையில் அவர்களில் இரண்டு ஆண் பிள்ளைகள் அங்கிருந்து வந்து இவருடன் வசித்து வந்தாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

மனைவி அநுராதபுரத்தில் உள்ள தனது பெண் பிள்ளைக்கு பிரசவத்திற்காக சென்றிருந்த நிலையில் உயிரிழந்த நபர் மற்றும் அவரது மூன்று பிள்ளைகளுடன், மனைவியின் மூத்த கணவனின் இரண்டு ஆண் பிள்ளைகளும் இருந்துவந்ததாக அயலவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை உயிரிழந்த நபர் மதுபோதையில் பிள்ளைகளுடன் சண்டையிட்ட நிலையில் மாலை அங்கிருந்த ஐந்து பிள்ளைகளும் அநுராதபுரத்திற்கு சென்றுவிட்டனர். இது தொடர்பில் உயிரிழந்தவரின் மனைவியால் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையில் இன்று வெள்ளிக்கிழமை காலை வீட்டுக்கு சென்று பார்த்தபோது குறித்த நபர் அடிகாயங்களுடன் சடலமாக காணப்பட்டதையடுத்து கொக்கட்டிச்சோலை காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டது.

அங்குவந்த கொக்கட்டிச்சோலை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டதுடன் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடயவியல் பிரிவு பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினரும் குற்றத்தடயங்கள் குறித்த விசாரணைகளை மேற்கொண்டனர்.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்துடன், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பணிப்புரை விடுத்தார்.

சடலத்தில் அடிகாயங்களும் வெட்டுக்காயங்களும் காணப்படுவதுடன் அருகில் இருந்து இரும்பு பொல் ஒன்றையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் குறித்த நபரின் மனைவியின் முதல் கணவனின் பிள்ளைகள் இருவர் மீது சந்தேகம் நிலவுவதன் காரணமாக அநுராதபுரத்தில் உள்ள அவர்களை கைதுசெய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More