Home இலங்கை ஆசிரியர் வளபங்கீடு – இடமாற்றக் கொள்கையை உரிய முறையில் பேண வேண்டும்…

ஆசிரியர் வளபங்கீடு – இடமாற்றக் கொள்கையை உரிய முறையில் பேண வேண்டும்…

by admin
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

வடக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வளப் பங்கீடு தொடர்பான பிரச்சனையைத் தீர்ப்பதற்கு மாகாண சபையால் உருவாக்கப்பட்டிருக்கின்ற இடமாற்றக் கொள்கையை உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டுமென சபையின் முன்னாள் கல்வி அமைச்சரான த.குருகுலராசா தெரிவித்துள்ளார்.

மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தின் கல்வி வலயங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும் அதனால் மாணவர்கள் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கி வருவதாகவும் இன்றைய  சபை அமர்வின் போது உறுப்பினர்களான து.ரவிகரன் மற்றும் ஆ.புவனேஸ்வரன் ஆகியோர் தெரிவித்திருந்தனர்.

ஆகவே இதற்கு அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரிய உறுப்பினர்கள் முல்லைத்தீவு மாவட்டம் தொடர்பில் அமைச்சர் அலட்சியப் போக்கை கடைப்பிடிக்காமால் விரைந்து செயற்பட வேண்டுமென்றும் குறிப்பிட்டனர்.

இதற்குப் பதிலளித்த கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் பதவியேற்றது முதல் தன்னாலான அனைத்து நடவடிக்கைகளையும் தாம் வேறுபாடின்றி மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இதன் போது பேசிய முன்னாள் கல்வி அமைச்சரான குருகுலராசா வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டம் உள்ளிட்ட வன்னிப் பகுதியின் பல வலயங்களிலும் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட பல பிரச்சனைகள் காணப்படுகின்றன. அந்தப் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்க வேண்டியதும் மிக மிக அவசியமான செயற்பாடுகாள இருக்கின்றன. குறிப்பாக வடக்கு மாகாண சபையால் தயாரிக்கப்பட்டிருக்கின்ற இடமாற்றக் கொள்கைளை அமைச்சு ஏன் சரியாக நடைமுறைப்படுத்தவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

ஏனெனில் அந்த இடமாற்றக் கொள்கையை உரிய முறையில் நடைமுறைப்படுத்தியிருந்தால் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் ஆசிரியர் வளப் பங்கீடுகள் உள்ளிட்ட பல பிரச்சனைகள் தீர்த்து வைக்கப்பட்டிருக்கும். ஆகவே இனியும் காலம் தாழ்த்தாது அந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்துகின்ற செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமென்றார்.

இதற்குப் பதிலளித்த  கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் இடமாற்றக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதற்கமைய புதிதாக நியமிக்கப்படுகின்றவர்களுக்கு அந்தக் கொள்கையை முழுமையாக நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.

மேலும் இந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கும் ஆசிரியர் பிரச்சனைகள் ஏற்படாமல் இருப்பதற்கும் அந்தப் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்வதற்கும் அதிகாரிகள் உள்ளிட்ட சகல தரப்பினர்களும் ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More