Home இலங்கை சட்டவிரோத இல்மனைட் அகழ்வு -வளங்கள் சூறையாடப்படுகின்றது -விசேட செயலணி…..

சட்டவிரோத இல்மனைட் அகழ்வு -வளங்கள் சூறையாடப்படுகின்றது -விசேட செயலணி…..

by admin

ஓரே பார்வையில் வட மாகாண சபை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

சட்டவிரோத இல்மனைட் அகழ்வு..

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் கடற்கரையில் இல்மனைட் அகழ்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டிய வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இதனால் ஏற்படப் போகும் அபாயங்கள் குறித்தும் விளக்கி இதனைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் இன்றைய அமர்வில் வலியுறுத்தியுள்ளார். வடக்கு மாகாண சபை அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் சபா மண்டபத்தில் சபைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.

இதன் போது முக்கியத்துவம் வாய்ந்த பிரேரனையாக மேற்படி பிரேரனையைக் கொண்டு வந்து உரையாற்றுகையிலையே ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்..

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்கள் தொடர்ச்சியாக ஆக்கிரமிக்கப்பட்டும் அபகரிக்கப்பட்டும் வருகின்ற அதே வேளையில் வளங்களும் சூறையாடப்பட்டு வருகின்றது. இத்தகைய பிரச்சனைகள் தொடர்பில் பல தடவைகள் இந்தச் சபையிலும் எடுத்துக் கூறியிருக்கின்றேன். அதே போன்றே தற்போது கொக்குளாய் கடற்கரையோரத்தில் இல்லைமனைட் அகழுவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அவ்வாறு கடற்கரையில் இதனை அகழுவதால் அங்கு கடல் நீர் உட்புகும் அபாயம் இருக்கின்றது. ஏனெனில் அங்கு சாதாரண கடற்கொந்தழிப்பு ஏற்பட்டாலே கடல் நீர் குடிமனைகளுக்குள் உட்புகும். இந்நிலையில் தற்போது அந்தக் கடற்கரையில் இல்மனைட்டையும் அகழ்வதால் அங்கு பெரிய ஆபத்தே ஏற்படுவதற்கு வாய்ப்பிருக்கின்றது.

ஆகவே இதனைச் சம்மந்தப்பட்ட தரப்பினர்கள் தடுத்து நிறுத்த வேண்டியது அவசியம். குறிப்பாக மத்திய அரசாங்கம் இதற்கான அனுமதிகளை வழங்கினாலும் மாகாண அரசாங்கம் இதனைத் தடுத்து நிறுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

இதன் போது கருத்து வெளியிட்ட அவைத் தலைவர் சிவஞானம் வடக்கு மாகாண சபையின் வளம் வெளியே செல்வதற்கு இடமளிக்க முடியாது. அவ்வாறு எடுத்துச் செல்வதும் பொருத்தமான செயற்பாடு அல்ல. ஆகவே மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் இந்த விடயங்கள் தொடர்பில் உறுப்பினர்கள் வலியுறுத்த வேண்டும். மேலும் எமது மாகாணத்தின் ஆக்கிரமிப்பு அபகரிப்பு, சுரண்டல்கள்,சூறையாடுதல் என்பன குறித்து ஐனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வருவோம் என்றார்.

வளங்கள் சூறையாடப்படுகின்றது…

தமிழர் தாயகப் பகுதியில் 2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் பாதுகாக்கப்பட்ட இந்த மண் 2009 ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஆக்கிரமிக்கப்பட்டும் அபகரிக்கப்பட்டும், சூறையாடப்பட்டு வருகின்றது. இவ்வாறான நிலைமைகள் எமது சமூகத்திற்கு பலத்த பாதிப்புக்களையே ஏற்படுத்தும். ஆகவே இதனைத் தடுத்து நிறுத்துகின்ற நடவடிக்கைளைகளை ஒன்றிணைந்து எமேற்கொள்ள வேண்டியது அவசியம். என வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் சபா குகதாஸ் இன்று இடம்பெற்ற வடக்கு மாகாண சபையின் அமர்வில் கலந்து கொண்டு பேசுகையில் தெரிவித்துள்ளார். இதன் போது அவர் மேலும் தெரிவித்தாவது

வடக்கு மாகாணத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் நிலமும், வளமும் பாதுகாக்கப்பட்டே வந்தது. ஆனால் 2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் மிக வேகமாக ஆக்கிரமிக்கப்பட்டும் சுரண்டப்பட்டும் வருகின்றது. இதிலும் குறிப்பாக இந்த நாட்டின் சுற்றுச் சூழல் அமைச்சராக இருக்கின்ற ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன சொல்லுக்குச் சொல் வரிக்கு வரி என சுற்றுச் சூழல் பாதுகாப்பு தொடர்பில் பேசி வருகின்றார்.

ஆனால் அதற்கு மாறாக வடக்கில் திட்டமிட்டு வளங்கள் சூறையாடப்பட்டு வருகின்றதுடன் சுற்றுச் சூழலும், பாதிக்கப்பட்டு வருகின்றது. இவை எல்லாம் திட்டமிட்ட வகையிலே செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலைமைகள் தொடர்ந்தால் வடக்கு மாகாணம் விரைவில் பாலைவனமாக மாறும் நிலையே ஏற்படும். எனவே இந்த நிலைமைகள் ஏற்படாத வகையில் வளங்களைப் பாதுகாக்கின்ற அனைத்து நடவடிக்கைகளையும் நாம் அனைவரும் இணைந்து முன்னெடுக்க வேண்டும் என்றார்.

விசேட செயலணி…

வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் காணி ஆக்கிரமிப்புக்கள் என்பன தொடர்பில் உருவாக்கப்பட்ட செயலணியினால் இந்த விடயங்கள் குறித்து ஐனாதிபதி பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டு தொடர் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபை அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலக சபா மண்டபத்தில் நடைபெற்ற போது கருத்து வெளியிடுகையிலையே சிவஞானம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறுகின்ற சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பில் மாகாண சபையில் சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து மாகாண அவைத் தலைவர் தலைமையிலான மாகாண சபையினர் அண்மையில் முல்லைத்தவிற்கு விஐயம் செய்து நிலைமைகளைப் பார்வையிட்டதுடன் போராட்டமொன்றையும் மேற்கொண்டிருந்தனர்.

இதன் பின்னர் மாகாண சபையினரும் பாராளுமன்ற உறுப்பினர்களும் சந்தித்துக் கலந்துரையாடுவதெனத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய வடக்கில் இடம்பெறுகின்ற சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பில் மாகாண சபையினருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று அண்மையில் நடைபெற்றிருந்தது.

இதன் போது விசேட செயலணியொன்றும் அமைக்கப்பட்டிருந்தது. அதற்கமைய அச் செயலனி தனது நடவக்கைகளை மேற்கொண்டும் வருகின்றது. இந் நிலையியே முல்லைத்தீவு உட்பட வடக்கில் மேற்கொள்ளப்படுகின்ற குடியேற்றங்கள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஐனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றது.

அத்தோடு மேலும் முன்னெடுக்க வேண்டிய தொடர் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் இதற்கு தொடர்ந்தும் சகலரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் சிவஞானம் கேட்டுக் கொண்டார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More