Home இலங்கை மன்னாரில் 16 ஆவது நாளாகவும் மனித எலும்புகள் அகழ்வு பணிகள் – மாலை கலந்துரையாடல்

மன்னாரில் 16 ஆவது நாளாகவும் மனித எலும்புகள் அகழ்வு பணிகள் – மாலை கலந்துரையாடல்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புகள் அகழ்வு பணிகள் இன்று செவ்வாய்க்கிழமை (19) 16 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா இடமாற்றம் பெற்று மல்லாகம் நீதி மன்றத்திற்குச் சென்றுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்திற்கு புதிய நீதிபதியாக ஹெப்பட்டிக்கொல்லாவ மாவட்ட நீதிபதி ரி.ஜெ.பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 14 ஆம் திகதி வியாழக்கிழமை இடை நிறுத்தப்பட்ட அகழ்வு பணிகள் நேற்று திங்கட்கிழமை (18) காலை ; 15 ஆவது நாளாகவும் முன்னெடுத்துச் செல்லப்பட்டது. மன்னார் மாவட்ட புதிய நீதவான் ரி.ஜெ.பிரபாகரன் நேற்று மாலை குறித்த பகுதிக்குச் சென்று அகழ்வுப்பணிகளை பார்வையிட்டார்.

இந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை(19) காலை 7 மணியளவில் விசேட சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையில் 16 ஆவது நாளாகவும் அகழ்வுப்பணிகள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது.

விசேட சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையில் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவாவின் குழுவினரும் இணைந்து அகழ்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுடன் இணைந்து விசேட தடவியல் நிபுணத்துவ காவல்துறையினர் மற்றும் அழைக்கப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள்; என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

தொடர்ச்சியாக அகழ்வு பணிகளின் போது மனித எச்சங்கள் மீட்கப்பட்டு வருகின்றது.இன்று செவ்வாய்க்கிழமை (19) மாலை குறித்த அகழ்வுபணிகள் தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்று இடம் பெறவுள்ளதோடு இவ் அகழ்வு பணிக்காக மேலதிக உத்தியோகத்தர்கள் அழைக்கப்பட்டு அகழ்வு பணியில் இணைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More