Home இலங்கை டெனீஸ்வரனின் அமைச்சுப்பதவி குறித்து ஆராய மாகாண சபை விசேடமாக கூடுகிறது..

டெனீஸ்வரனின் அமைச்சுப்பதவி குறித்து ஆராய மாகாண சபை விசேடமாக கூடுகிறது..

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வட மாகாண போக்குவரத்து, மீன்பிடி அமைச்சராக டெனீஸ்வரன், சட்டப்படி வடக்கு மாகாண அமைச்சரவையில் தொடர்ந்து நீடிக்கிறார் என மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய கட்டளையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராயும் மாகாண சபை சிறப்பு அமர்வு வரும் 16ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.

வடக்கு மாகாண சபையின் 19 உறுப்பினர்கள் எழுத்துமூலம் கோரியதற்கு அமைவாக அவைத்தலைவரால் இதற்கான அறிவிப்பு சபையில் இன்று விடுக்கப்பட்டது.

தம்மை முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதவியில் இருந்து நீக்கியது செல்லுபடியற்றது என்று அறிவிக்கக் கோரி, வட மாகாண அமைச்சராக இருந்த டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த நீதியரசர்கள் விக்ரமசிங்க, ஜனக டி சில்வா ஆகியோரைக் கொண்ட அமர்வு -கடந்த மாதம் வழங்கிய இடைக்கால உத்தரவில், டெனீஸ்வரனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உத்தரவு செல்லுபடியற்றது என்றும், அவர் தொடர்ந்தும் அமைச்சராகவே இருப்பதாக கருதப்படுகிறார் என்றும் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, உங்களுடன், அமைச்சர்கள் வாரியத்தில் உள்ள அமைச்சர்கள் ஐவரும் யார் என்று எழுத்து மூலம் அறிவிக்குமாறு வட மாகாண ஆளுனர் றெஜினோல்ட் குரே, முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.

இதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் இன்னமும் பதிலளிக்கவில்லை. எனினும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு எதிராக, முதலமைச்சர் தரப்பில் மனுவொன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வடக்கு மாகாண சபையின் அமர்வு கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இன்று இடம்பெற்றது.இதன்போது மாகாண போக்குவரத்து அமைச்சு மீது மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவை முன்னிலைப்படுத்தி ஒழுங்கு பிரச்சனையினை வடமாகாணசபை ஆளும் தரப்பு உறுப்பினர் கேசவன் சயந்தன் எழுப்பினார்.

மாகாணத்திற்கு ஐந்து அமைச்சர்களே இருக்கலாம் என்ற அரசியலமைப்பின் பிரகாரம் மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பை வடமாகாண முதலமைச்சர் நடைமுறைப்படுத்துவதுடன் ப.டெனீஸ்வரனுக்கு அமைச்சருக்குரிய ஆசனத்தை வழங்குவதுடன் அவரை தொடர்ந்து அமைச்சராக பதவி வகிக்க முதலமைச்சர் ஆவன செய்யவேண்டும் என உறுப்பினர் சயந்தன் தனது உரையினை முன்வைத்தார்.

இதற்கு பதிலளித்த வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன், ‘இவ்விடயம் தொடர்பில் நான் உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளேன். நீதிமன்ற நடவடிக்கையில் குறித்த விடயம் இருப்பதால் தீர்ப்பு வந்தபின்னரே இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கமுடியும்’ என்று தெரிவித்தார். இதையடுத்து இவ்விடயம் தொடர்பில் காரசாரமான விவாதங்கள் உறுப்பினர்களிற்கிடையில் இடம்பெற்றது.

இந்த விவகாரம் தொடர்பில் ஆராய சிறப்பு அமர்வை நடத்தவேண்டும் என்று கோரி 19 உறுப்பினர்கள் கையொப்பமிட்ட மனு அவைத் தலைவரிடம் கையளிக்கப்பட்டது.

அதனை ஏற்றுக்கொண்ட அவைத்தலைவர் சிறப்பு அமர்வை வரும் 16ஆம் திகதி திங்கட்கிழமை நடத்த அனுமதியளித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More