Home இலங்கை சிறுப்பிட்டி இளைஞர்கள் படுகொலை – இராணுவத்தை காப்பாற்றும் பிரயத்தனத்தில் சட்டத்தரணிகள்…

சிறுப்பிட்டி இளைஞர்கள் படுகொலை – இராணுவத்தை காப்பாற்றும் பிரயத்தனத்தில் சட்டத்தரணிகள்…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

சிறுப்பிட்டி இளைஞர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கிலிருந்து இராணுவத்தினரைக் காப்பாற்றுவதில் அவர்கள் தரப்பு சட்டத்தரணிகள் நேற்றைய தினம் வியாழக்கிழமை கடும் பிரயத்தனத்தை யாழ்ப்பாணம் நீதிமன்றில் வெளிப்படுத்தினர்.

யாழ்ப்பாணம் சிறுப்பிட்டிப் பகுதியில் இளைஞர்கள் இருவர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தினரின் வழக்கு நேற்றைய தினம் யாழ்ப்பாண நீதிமன்றில் நீதிவான் சி.சதீஸ்தரன் முன்னிலையில் சுருக்கமுறையற்ற விசாரணைக்காக வந்தது. இதன்போது மன்றில் சந்தேகநபர்களான 5 இராணுவத்தினரும் முன்னிலையாகினர். வழக்கின் 3ஆவது சந்தேகநபரான இராணுவச் சிப்பாய் உயிரிழந்துவிட்டார்.

வழக்குத் தொடுனர் தரப்பில் சட்ட மா அதிபர் சார்பில் அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் முன்னிலையானார். இராணுவத்தினர் சார்பில் தென்னிலங்கை சட்டத்தரணிகள் முன்னிலையாகினர்.

“இராணுவத்தினருக்கு எதிரான சாட்சிகள் காவற்துறை வழங்கிய வாக்குமூலங்களின் உண்மைப் பிரதிகள் இல்லை. அவற்றின் நிழல் பிரதிகளை வைத்து வழக்கை நடத்த முடியாது. அதனால் இந்த வழக்கிலிருந்து இராணுவத்தினர் ஐவரையும் விடுவிக்கவேண்டும்” என சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றில் ஆட்சேபனை வெளியிட்டார்.

“சாட்சி ஒருவர் இல்லாத போதுதான் அவர் வழங்கிய காவற்துறை வாக்குமூலத்தின் உண்மைப் பிரதி இருக்கவேண்டும். ஆனால் இந்த வழக்கில் சாட்சிகள் மன்றில் தோன்றி சாட்சியமளிப்பதால், அவர்களின் காவற்துறை வாக்குமூலத்தின் நிழல் பிரதியை முன்வைத்தால் போதும்” என்று அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் மன்றுரைத்தார்.

இரு தரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான், வழக்கை நிழல் பிரதியுடன் தொடர்வது தொடர்பில் எதிரிகள் தரப்பால் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனை குறித்த மன்றின் கட்டளை வரும் 26ஆம் திகதி வழங்கப்படும் என்று தெரிவித்தார். அதனால் வழக்கு வரும் 26ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இராணுவத்தினருக்கு எதிரான சாட்சிகள், அச்சுவேலி காவற்துறை நிலையத்தில் வழங்கிய வாக்குமூலம் அடங்கிய வழக்கு கோவை காவற்துறையினரால் தீயிட்டு அழிக்கப்பட்டது என்ற சர்ச்சை அந்தக் காலப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் இராணுவத்தினரின் தரப்பு இந்த விடயத்தை துரும்பாக எடுத்துள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னணி

1997ஆம் ஆண்டு ஒக்டோபர் 28ஆம் திகதி இளைஞர்கள் இருவர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டனர். இதனுடன் தொடர்புபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட 16 இராணுவத்தினரை அச்சுவேலி காவற்துறையினர் கைது செய்தனர்.

எனினும் 1998 ஆம் ஆண்டு நீதிவான் நீதிமன்றம் குறித்த நபர்களுக்கு பிணை வழங்கியது. இதனைத்தொடர்ந்து கிடப்பில் போடப்பட்ட வழக்கு 2016ஆம் சட்டமா அதிபரால் விசாரணைக்கு கொண்டுவரப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட 16 இராணுவத்தினரில் இருவர் போரில் உயிரிழந்தனர். இந்த நிலையில் 14 இராணுவத்தினர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

எனினும் அவர்களில் 9 பேரை வழக்கிலிருந்து விடுவிக்க சட்டமா அதிபர் அறிவுறுத்தல் வழங்கினார். ஏனைய 5 சந்தேகநபர்களுக்கும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் பிணை வழங்கியது.

இந்தச் சம்பவம் தொடர்பில் 1997ஆம் ஆண்டே விசாரணைகளை மேற்கொண்டிருந்த இராணுவப் பொலிஸார், கொல்லப்பட்ட இளைஞர்களில் ஒருவரின் சங்கிலி மற்றும் கைக்கடிகாரம் என்பவற்றை முகாமுக்குள் இருந்து மீட்டிருந்தனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More