Home இலங்கை KP – புலிகள் – சமாதானப் பேச்சுவார்த்தை – பட்டாயாவை நினைவுபடுத்தும் சம்பந்தன் – தாய் பிரதமர் சந்திப்பு….

KP – புலிகள் – சமாதானப் பேச்சுவார்த்தை – பட்டாயாவை நினைவுபடுத்தும் சம்பந்தன் – தாய் பிரதமர் சந்திப்பு….

by admin


இலங்கை சென்றுள்ள தாய்லாந்துப் பிரதமர், எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனை, கொழும்பில் இன்று (13.07.18) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலுள்ள நீண்டகால உறவை எடுத்துக்காட்டிய சம்பந்தன், கடந்த காலங்களில், தாய்லாந்து அடைந்துள்ள முன்னேற்றங்களுக்கு, தனது பாராட்டுதல்களைத் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக, இலங்கை பாரிய முன்னேற்றங்களை அடைய முடியவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர், எழுபது ஆண்டுகள் கடந்தும், இன்னமும் தேசிய பிரச்சினை தீர்க்கப்படாமல் இருப்பது குறித்தும் குறிப்பிட்டார்.

சமகால அரசாங்கம், இது தொடர்பில் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்திய சம்பந்தன், சுய கெளரவம் மற்றும் சமத்துவ அடிப்படையிலான ஒரு புதிய அரசியல் யாப்பினூடாக, சமாதானமான ஒரு தீர்வையே தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் கூறினார்.

மேலும், அத்தகைய ஒரு அரசியல் அதிகாரப் பகிர்வைக் கொண்டு வருவதற்கு, அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கான ஒத்துழைப்பை வழங்க தயார் எனவும் கூறியுள்ளார்.

பாரிய முதலீடுகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் காணப்படும் தேவைகளை வலியுறுத்திய அதேவேளை, தாய்லாந்தின் தனியார் முதலீட்டாளர்களை, வடக்கு, கிழக்கில் முதலீடுகளை மேற்கொள்ளும் நோக்கில் ஊக்கப்படுத்த வேண்டுமெனவும் தாய் பிரதமரிடம் கோரியுள்ளார்.

தாய்லாந்து முதலீட்டாளர்களினால், வடக்கில் நிறுவப்படவுள்ள சீனித்தொழிற்சாலை தொடர்பான முன்னேற்பாடுகளை வரவேற்ற சம்பந்தன், இந்த வகையிலான முதலீடுகள், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இப்பிரதேசங்களுக்கு அதிகமாகக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த தாய்லாந்துப் பிரதமர், நிச்சயமாக, தாய்லாந்துத் தனியார் முதலீட்டாளர்களை, இலங்கையில் முதலீடுகளைச் செய்வதற்கு ஊக்கப்படுத்துவதாக உறுதியளித்த அதேவேளை, எதிர்காலத்தில், இந்த முதலீடுகள் நடைமுறைக்கு வருவதை உறுதி செய்து, அவற்றுக்கு ஆதரவு நல்குமாறு, எதிர்க்கட்சித் தலைவரிடம் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை இலங்கை இனப்பிரச்சனையில் முக்கிய பங்கு வகித்த, இலங்கை அரசாங்கத்திற்கும், புலிகளுக்கும் இடையிலான 6 கட்டப் பேச்சுவார்த்தையில் முதலாவது உட்பட 2 கட்ட சமாதானப் பேச்சுக்கள் தாய்லாந்தில் இடம்பெற்றமையும், புலிகளுக்கான ஆதரவான செயற்பாடுகள் அங்கு இடம்பெற்றமையும், புலிகளின் முன்னாள் அனைத்துலகப் பொறுப்பாளர், KP என்ற குமரன் பத்மநாதன் உலாவித்திரிந்த இடம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More