Home இலங்கை உலக வனப் பாதுகாப்பு குழுவின் 24வது கூட்டத்தொடரில் ஜனாதிபதி ஆற்றிய உரை :

உலக வனப் பாதுகாப்பு குழுவின் 24வது கூட்டத்தொடரில் ஜனாதிபதி ஆற்றிய உரை :

by admin

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் அவர்களே,ஐக்கிய நாடுகள் சபை

மேன்மைதங்கியவர்களே,

அதிதிகளே,

அவையோரே,

உலக வனப் பாதுகாப்பு குழுவின் 24வது கூட்டத்தொடரின் ஆரம்ப அமர்வில் உரை நிகழ்த்த என்னை அழைத்தமைக்காக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய தாபனத்தின் பணிப்பாளர் நாயகத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன். இதை இலங்கைக்கும் தனிப்பட்ட முறையில் எனக்கும் வழங்கப்பட்ட பெரும் கௌரவமாகவே நான் கருதுகின்றேன்.

விவசாயத்துறை அமைச்சர் என்ற வகையிலும் அதன் பின்னர் தற்போது சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சர் என்ற வகையிலும் எனக்கு உணவு மற்றும் விவசாய தாபனத்துடன் நெருங்கிய தொடர்புகள் இருந்து வருகின்றன. இன்று நான் இந்த மதிப்பிற்குரிய சபையில் நாட்டின் தலைவர் என்ற வகையிலேயே உரையாற்றும் சந்தர்ப்பத்தை பெற்றிருக்கின்றேன்.

எமது நாட்டில் வறிய விவசாய சமூகங்களுக்கு பாரிய இழப்புகளை ஏற்படுத்திய வெள்ளம், வரட்சி மற்றும் மண் சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களின்போது எனது நாட்டுக்கும் மக்களுக்கும் உணவு மற்றும் ஏனைய அவசர உதவிகளை வழங்கியமைக்காக நான் உலக உணவு மற்றும் சுகாதார தாபனத்திற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

மேன்மைதங்கியவர்களே,

இந்த கூட்டத்தொடரின் விடயதானத்திற்கு வருவோமேயானால், எமது நாட்டில் பெரும்பான்மையான மக்கள் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு விவசாயத்திலேயே தங்கியிருக்கின்றனர். சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 50 வீதத்திற்கும் மேற்பட்ட பகுதிகள் வனப் பிரதேசங்களாகவே இருந்து வந்துள்ளன. தற்போது நாட்டின் மொத்த வன அடர்த்தியானது நாட்டின் மொத்த நிலப்பிரதேசத்தில் 29.7% வீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பேண்தகு அபிவிருத்தி இலக்கினை அடைந்துகொள்வதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையான நில ஆட்சியை மேம்படுத்துவதற்கு சிறந்த நடைமுறைகளை பின்பற்றி, இலங்கை அதன் தற்போதைய வனப் பிரதேசத்தை பாதுகாப்பதுடன் அதனை 32 வீதமாக அதிகரிப்பதற்கு மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட விவசாயம் மற்றும் பாரிய விவசாய குடியேற்றங்களின் பயன்பாட்டிற்காக காடுகள்  அழிக்கப்பட்டதன் காரணமாக எனது நாட்டின் வனப் பிரதேசத்தில் 50% வீதத்திற்கு மேல் இழக்க நேர்ந்திருக்கின்றது.

காடழிப்பு நாட்டின் பல்வேறு பகுதிகளில் மோசமான சூழல் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றது. அது மழை வீழ்ச்சியின் போக்கிலும் மண்ணரிப்பு, விவசாய உற்பத்திகளின் அழிவு போன்ற பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றது.

மனிதனின் அடிப்படைத் தேவைகளான உணவு, சக்தி வளம் மற்றும் உறைவிடம் உள்ளிட்ட பல்வேறு சமூக, பொருளாதார நன்மைகளை காடுகள் பெற்றுத் தருகின்றன. இந்த பல்வேறு வகையான தேவைகளை அடைந்துகொள்வதற்கு உதவுகின்ற உற்பத்திகள் மற்றும் சேவைகளை நிலையாக பேணுவதற்கு காடுகள் பேண்தகு அடிப்படையில் முகாமைத்துவம் செய்யப்படல் வேண்டும்.

மீள்காடாக்கல் வன திணைக்களத்தின் பொறுப்பாக இருப்பினும் ஏனைய பல அரசாங்க அமைச்சுகள் உள்ளூராட்சி நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களுடன் இணைந்து 2020 ஆம் ஆண்டளவில் நாட்டில் ஐந்து மில்லியன் மரங்களை நடுவதற்கான ஒரு திட்டத்தை நாம் ஆரம்பித்திருக்கின்றோம்.

தற்போது இலங்கையில் சுமார் 4.3 மில்லியன் பிள்ளைகள் பாடசாலை செல்கின்றனர். அரசாங்கத்தின் அனுசரணையின் கீழ் பாடசாலை பிள்ளைகள் அவர்களது வீட்டுத் தோட்டங்கள், பாடசாலை வளாகங்கள் மற்றும் ஏனைய இடங்களில் குறைந்தது ஒரு மரக் கன்றையேனும் நட்டுவதற்கு ஊக்குவிக்கின்ற நிகழ்ச்சித்திட்டமொன்றையும் நாம் ஆரம்பித்துள்ளோம். அதற்கான நிதியுதவிகளை வழங்குவதன் மூலம் நாம் இந்த மரம் வளர்க்கும் திட்டத்தை ஊக்குவிக்கின்றோம். அதற்கான நிதி ஒதுக்கீடுகளை அவர்களது தனிப்பட்ட பெயர்களில் செய்ய இருக்கின்றோம். மரங்களை நடுவதன் மூலம் பிள்ளைகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் வருமானம்  கிடைக்கப் பெறலாம் என்ற வகையில் அவர்ளை நாம் இதற்கு இணங்கச் செய்வோம். இது பிள்ளைகள் இயற்கையை பேணிப் பாதுகாக்க வேண்டியது அவர்களது கடமை என்பதை விளங்கிக்கொள்வதற்கு ஊக்கமளிப்பதாக அமையும்.

சூழலையும் நீர் நிலைகளையும் பாதுகாக்கும் வகையில், கடல்மட்டத்திலிருந்து 5,000 அடி உயர நிலப்பகுதியில் இருக்கின்ற மரங்களை வெட்டுவதை எமது அரசாங்கம் தடை செய்துள்ளது.

பாரிய அல்லது நடுத்தர அளவிலான கருத்திட்டங்கள் அவற்றின் பணிகள் ஆரம்பிக்கப்பட முன்னர் சூழல் பற்றிய தாக்க மதிப்பீட்டை மேற்கொள்ள வேண்டும்.

பூகோள வனத்துறையின் முன்னேற்றத்திற்கான தீர்மானங்களை மேற்கொள்ளவும் அது தொடர்பான அறிவை பகிர்ந்துகொள்ளவும், கலந்துரையாடல், விவாதங்கள் ஆகியவற்றை மேற்கொள்ளவும் வனப்பாதுகாப்பு தொடர்பான இந்த மாநாடு ஒரு சிறந்த தளமாகும். இனி வருகின்ற நிகழ்ச்சி நிரல் விரிவானதாகவும் சவால் மிக்கதாகவுமே அமையும்.

மேன்மைதங்கியவர்களே, இந்த உரையை நிறைவு செய்வதற்கு முன்னால் எனக்கும் எனது தூதுக்குழுவிற்கும் வழங்கிய பெருவரவேற்பு மற்றும் உபசரிப்புக்காக உலக உணவு மற்றும் விவசாய நிறுவனத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

நன்றி.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More