முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு சேறுபூசுவதற்காக போலியான தகவல்களை நாட்டு மக்களுக்கு தெரிவித்து வருகின்ற, எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக வரக்கூடிய, நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிடம் பகிரங்கமாக மன்னிப்புக்கேட்க வேண்டுமென ஒன்றிணைந்த எதிரணி வலியுறுத்தியுள்ளது.
புஞ்சி பொரளையில் உள்ள வஜிராஷ்ரம பௌத்த மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், பந்துல குணவர்தன,
நாட்டின் முக்கியமான அமைச்சுப் பதவியில் தான் இருப்பதை மறந்துவிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மீது சேறுபூச வேண்டுமென்பதற்காக போலியான தகவல்களை வெளியிட்டுவருதால் நாட்டுக்கு சர்வதேச ரீதியில் அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கடந்த ஆட்சிக் காலத்தில் எரிபொருள் பீப்பாய் ஒன்றின் விலை, 40 டொலர்களாக இருந்தபோதிலும், ஒரு லீற்றர் பெற்றோலை 122 ரூபாவுக்கே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கியதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர அப்பட்டமான பொய் ஒன்றை கூறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எரிபொருள் பீப்பாய் ஒன்றின் விலை 40 டொலர்களாக, 2008 ஆம் ஆண்டே இருந்தாக தெரிவித்திருக்கும் அவரது கருத்து முற்றிலும் தவறானது. உலக வரலாற்றில் எரிபொருள் பீப்பாய் ஒன்றின் விலை அதிகரித்துக் காணப்பட்ட ஆண்டாக 2008 ஆம் ஆண்டு காணப்படுகின்றது. அப்போது, எரிபொருள் பீப்பாய் ஒன்றின் விலை, 146 டொலர்களாக காணப்பட்டது என்றார்.
நிதியமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிடும் காலத்தில் எரிபொருள் பீப்பாய் ஒன்றின் விலை, 97 டொலர்களாக இருந்தபோதிலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ 120 ரூபாய்க்கே ஒரு லீற்றர் பெற்றோலை வழங்குவதற்கு பணித்திருந்தார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆகவே, றோட்டரி மற்றும் லயன்ஸ் கழகங்களில் உள்ளவர்களுக்கும் போதைப்பொருள் கடத்தலில் தொடர்பிருப்பதாக கூறியிருந்த கருத்துக்கு நிதியமைச்சர் மங்கள சமரவீர பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளதுபோல் இக்கருத்து தொடர்பிலும் அவர், பகிரங்கமாக மன்னிப்புக்கேட்க வேண்டுமெனவும், நாடாளுமன்ற உறுப்பினர், பந்துல குணவர்தன வலியுறுத்தினார்.
Add Comment