Home இலங்கை கடந்த காலத்தின் கண்ணீரைத் துடைப்பதிலும், பிரகாசமான எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்வதிலும் மகிழ்ச்சி..

கடந்த காலத்தின் கண்ணீரைத் துடைப்பதிலும், பிரகாசமான எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்வதிலும் மகிழ்ச்சி..

by admin

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி…

இந்திய உயர் ஸ்தானிகராலயம் கொழும்பு  – ஊடக அறிக்கை

இந்திய நன்கொடை உதவியின் கீழ் இலவச 1990 ‘சுவசெரிய’ அவசரநிலை நோயாளர் காவு வண்டிச் சேவையின் நாடு முழுவதற்கும் விரிபுபடுத்தும் அங்குரார்ப்பணம்
21 ஜூலை 2018 அன்று யாழ்ப்பாணத்தில் 1990 ‘சுவசெரிய’ இலவச அவசரநிலை நோயாளர் காவுவண்டிச் சேவையின் நாடு முழுவதற்குமான அங்குரார்ப்பணத்திற்காக இந்தியப் பிரதம மந்திரி மேதகு திரு. நரேந்திர மோடி புது டெல்கியிலிருந்து இலங்கைப் பிரதம மந்திரி திரு. ரணில் விக்கிரமசிங்க அவர்களுடன் ஒரு நேரலைக் காணொலிக் கலந்துரையாடல் மூலமாக இணைந்து கொண்டார். இலங்கையின் பல அமைச்சர்கள் மற்றும் ஏனைய பிரமுகர்கள் இந்த வைபவத்தில் கலந்து சிறப்பித்தனர். இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் திரு தரண்ஜித் சிங் சந்து அவர்களும் இவ்வைபவத்தில் கலந்து கொண்டார்.

வைபவத்தில் பேசும் பொழுது, கடந்த வருடம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த வேளையில், நாடு முழுவதற்குமாக நோயாளர் காவு வண்டிச் சேவையை விரிவுபடுத்துவதற்கு தான் கொடுத்திருந்த வாக்குறுதி, தற்போது நிறைவேற்றப்பட்டமை குறித்து இந்தியப் பிரதம மந்திரி நரேந்திர மோடி தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார். இந்தியா மற்றும் இலங்கைக்கிடையிலான பங்குடமை அபிவிருத்தியில் இந்த நிகழ்வு மற்றுமொரு பெரும் சாதனையைக் குறிக்கின்றது என அவர் குறிப்பிட்டார். இலங்கை வெறுமனே ஓர் அயல் நாடாக அன்றி தெற்காசியா மற்றும் இந்திய சமுத்திரக் குடும்பத்தில் மிகவும் விசேடமான மற்றும் நம்பகமான ஒரு பங்காளர் என்பதையும் அவர் கீழ்க் கோடிட்டுக் காட்டினார்.


வட மாகாணத்திலிருந்து நாடு முழுவதற்குமான சேவையின் விரிவாக்கத்தைக் குறிப்பிடுகையில், கடந்த காலத்தின் கண்ணீரைத் துடைப்பதிலும் மற்றும் ஒரு பிரகாசமான எதிர்காலத்திற்கு அழைத்துச் செல்வதிலும் இலங்கையுடன் இணைந்து பணியாற்றுவதில் இந்தியா மகிழ்ச்சி அடைகின்றது என அவர் கூறினார். இந்தச் சேவையின் விரிவாக்கத்துடன் உள்ளூர்த் திறன்கள் மற்றும் இலங்கையில் உள்ளுர் வேலைவாய்ப்புகள் என்பன ஓர் ஊக்குவிப்பைப் பெறும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பிரதம மந்திரி நரேந்திர மோடி, இலங்கைக்கான அவரது கடந்த இரண்டு விஜயங்களையும் ஆசையுடன் நினைவு கூர்ந்தார். நல்லது மற்றும் கெட்டது ஆகிய இரு சந்தர்ப்பங்களிலும், இலங்கைக்கு முதலில் பதிலிறுப்பவராக இந்தியா இருந்ததுடன் அவ்வாறே என்றும் தொடர்ந்தும் இருக்குமென்பதை அவர் சுட்டிக் காட்டினார். இலங்கைப் பிரஜைகள் அனைவரினதும் அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதில் இலங்கை ஜனாதிபதி மேதகு மைத்திரிபால சிரிசேனா மற்றும் பிரதம மந்திரி கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களின் முயற்சிகளையும் பிரதம மந்திரி மோடி பாராட்டினார்.

யாழ்ப்பாண மாணவர் காங்கிரசின் அழைப்பின் பேரில் 1927 இல் மகாத்மா காந்தி இலங்கைக்கு விஜயம் செய்த போது கூறியதை பிரதம மந்திரி நினைவு கூர்ந்தார் – ‘இலங்கை முழுவதற்குமாக யாழ்ப்பாணத்திற்காக நான் விடுக்கும் செய்தி என்னவெனில்: பார்வையிலிருந்து, மனதிலிலிருந்து விலகுவதற்கு அனுமதியாதீர்’. அதே செய்தியையே தானும் இன்று கொண்டிருப்பதாக பிரதம மந்திரி மோடி கூறினார். ஒருவரோடு ஒருவர்தொடர்பிலிருப்பதற்கும் அதன் மூலம் ஒருவருக்கொருவர் சிறந்த முறையில் அறிந்து கொண்டு நெருங்கிய நண்பர்களாக வருவதற்கும் இந்தியா மற்றும் இலங்கையிலுள்ள மக்களை அவர் வலியுறுத்தினார். புது டெல்கிக்கு விஜயம் செய்து அதன் தன்மைகளை அனுபவம் கொள்வதற்கு இலங்கை மக்களை அவர் ஊக்கப்படுத்தினார்.

பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க இந்த தாராளமான உதவிக்கு இந்திய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்ததுடன், இந்திய – இலங்கை இரு தரப்பு உறவில் இதுவொரு முக்கியமான மைல்கல்லென அவர் குறிப்பிட்டார்.பிரதம மந்திரி நரேந்திர மோடி மற்றும் பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க ஆகிய இருவரும் இணைந்து முதலாவது நோயாளர் காவு வண்டிகள் இரண்டிற்கு கொடியசைத்து சேவையை ஆரம்பித்து வைத்தனர்.

அவசரநிலை நோயாளர் காவுவண்டிச் சேவை ருளுகூ 7.5 மில்லியன் இந்திய நன்கொடையின் கீழ் முதன் முதலில் 2016 இல் இலங்கையின் மேல் மற்றும் தென் மாகாணங்களில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இந்த நன்கொடை 88 நோயாளர் காவுவண்டிகளின் கொள்வனவு, ஒரு வருடத்திற்கு சேவைக்கான செயற்பாட்டுச் செலவுகள் மற்றும் அவசர நிலை பதிலிறுப்பு நிலையம் ஒன்றை ஸ்தாபித்தல் என்பவற்றை உள்ளடக்கியிருந்தது இந்தச் சேவை இப்பொழுது எஞ்சிய ஏழு மாகாணங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு மேலதிக ருளுகூ15.02 நன்கொடையுடன், ஏழு மாகாணங்களிற்குமாக 209 நோயாளர் காவு வண்டிகளின் கிரயம், பயிற்சிச் செலவுகள் மற்றும் செயற்பாட்டுச் செலவுகளையும் உள்ளடக்குகிறது.

இலங்கையின் எந்த வலையமைப்பு மூலமாக ‘1990’ எனும் இலக்கத்தை அழைத்து பெற்றுக் கொள்ளக்கூடிய இந்தக் கட்டணமற்ற இலவச நோயாளர் காவு வண்டிச் சேவை, இலங்கையில் இந்திய வீட்டுத் திட்டத்திற்கு பின்னரான ஒரு பெரிய நன்கொடை செயற்றிட்டமாகும். அதன் சொந்தத் தெரிவுகள் மற்றும் முன்னுரிமைகளின் அடிப்படையில் இலங்கையுடனான இருதரப்பு பங்குடமையை மேலும் வலுப்படுத்துவதற்கு இந்தியா தொடர்ந்தும் பற்றுறுதி கொண்டதாக உள்ளது.


கொழும்பு
21 ஜூலை 2018

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More