Home இலங்கை வாள்வீச்சு – கொள்ளை – தாக்குதல் – தென்மராட்சி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்…

வாள்வீச்சு – கொள்ளை – தாக்குதல் – தென்மராட்சி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…


தென்மராட்சியின் சாவகச்சேரி மற்றும் மீசாலை பகுதிகளில் உள்ள நான்கு வீடுகளுக்குள் வாள்களுடன் நுழைந்து கொள்ளையர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டனர்.  நேற்று செவ்வாய்க் கிழமை இரவு 11.30 முதல் நேற்று அதிகாலை 1 ஒரு மணிவரை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.  சாவகச்சேரி டச் வீதியில் மடத்தடி பகுதியில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி ஒருவரின் வீட்டுக்குள் இரவு 11.30 மணியளவில் இரண்டு மோட்டார்ச் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் கொண்ட கொள்ளையர்கள் வாள்களை கொண்டு அச்சுறுத்தி மூதாட்டியை தாக்கி காயப்படுத்தி அவர் அணிந்திருந்த தோடுகளை அபகரித்துச் சென்றுள்ளனர்.

அதன்பின் சங்கத்தானையில் உள்ள வீட்டுக்குள் நுழைந்து குடும்பஸ்தர் ஒருவரை வாளால் வெட்டிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இதையடுத்து அதிகாலை ஒரு மணியளவில் மீசாலை மேற்கில் உள்ள வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் வீட்டு விறாந்தையில் உறங்கிக்கொண்டிருந்த குடும்பஸ்த்தரை வாளால் வெட்டியதோடு வீட்டுக்கதவினை உடைத்து தங்கச் சங்கிலி மற்றும் இரண்டு காப்புகளையும கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர். அதன்பின் மீசாலையில் உள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டுக்குள்ளும் நுழைந்துள்ளனர். இதன்போது அங்கிருந்தவர்கள் விழித்து கூக்குரல் எழுப்பியதையடுத்து கொள்ளையர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.

இரண்டு மோட்டார்ச் சைக்கிள்களில் சென்ற நான்கு பேர் கொண்ட கொள்ளையர்களே நான்கு வீடுகளுக்குள்ளும் அடுத்தடுத்து நுழைந்திருக்கூடும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த கொள்ளையர்களின் தாக்குதல்களில் பெண்ணொருவர் உட்பட மூன்று பேர் காயமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றனர். சங்கத்தானையை சேர்ந்த மாணிக்கம் சிவராசா வயது 55, மீசாலை மேற்கைச் சேர்ந்த சின்னையா சுப்பிரமணியம் வயது 53 மற்றும் டச்வீதியை சேர்ந்த மூதாட்டி ஒருவருமே காயமடைந்து சிகிச்சை பெறுகின்றனர்.

இக் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.  இதே நேரம் நேற்று பகல் 11 மணியளவில் சாவகச்சேரி பெருங்குளம் சந்தியில் மோட்டார்ச் சைக்கிளில் சென்றவர்கள் வீதியில் சென்ற பெண்ணின் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவங்களால் தென்மராட்சி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More