Home இலங்கை மன்னாரில் மீட்கப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகளில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட முறிவுகள் – 5 சிறுபிள்ளைகளினது (வீடியோ இணைப்பு )

மன்னாரில் மீட்கப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகளில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட முறிவுகள் – 5 சிறுபிள்ளைகளினது (வீடியோ இணைப்பு )

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மன்னார் ‘சதொச’விற்பனை நிலைய வளாகத்தில் இன்று வியாழக்கிழமை (26) 42 ஆவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த மனித புதைகுழி அகழ்வின் போது, மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் பலவற்றில் கூரிய ஆயுதத்தால் பலமாக தாக்கப்பட்டமையால் ஏற்படும் முறிவுகளை காணக்கூடியதாக இருப்பதாக அகழ்வில் ஈடுபட்ட நிபுணர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

எனினும் தற்போது வரை மீட்கப்பட்டுள்ள எந்தவொரு மனித எலும்புக்கூடுகளிலும் துப்பாக்கிச்சூட்டுக் காயங்கள் எதுவும் காணப்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். -அகழ்வு பணிகளை தொடர்ந்து இன்று(26) அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர். -மேலும் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளில் 5 சிறு பிள்ளைகளின் எலும்புக்கூடுகளும் காணப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

-இதே வேளை குறித்த புதைகுழியில் காணப்பட்ட எலும்புக்கூடுகளை பொறுத்த மட்டில், உடல்கள் ஒழுங்கற்ற வகையில் அவசர அவசரமாக புதைக்கப்பட்டுள்ளமை ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த சடலங்கள் எக் காலப்பகுதியில் புதைக்கப்பட்டது என்பது தொடர்பில் இதுவரையில் கண்டரியப்படவில்லை என அவர் தெரிவித்தார்.

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள ‘சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று வியாழக்கிழமை (26) 42 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்றைய அகழ்வு பணிகளின் போது கோமகம பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பௌத்த பிக்குகளும் இணைந்து அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மன்னார் நீதவான ரி.ஜே.பிரபாகரன் மேற்பார்வையில் குறித்த அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது.

விசேட சட்ட வைத்திய அதிகாரி டபிள்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஐபக்ஸ விடுமுறையில் சென்றுள்ள நிலையில் அவருக்கு பதிலாக குருநாகல் சட்ட வைத்திய அதிகாரி அஜித் திஸநாயக்க தலைமையில் களனி பல்கலைக்கழக பேராசிரியர் ராஜசோம தேவாவின் குழுவினரும் இணைந்து அகழ்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்களுடன் இணைந்து கோமகம பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பௌத்த பிக்குகளும் இணைந்து குறித்த அகழ்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது வரைக்கும் 32 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதோடு, அடையாளம் காணப்பட்டுள்ள 52 மனித எலும்புக்கூடுகளை மீட்கும் பணி இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More