Home இலங்கை இராணுவ முறைப்பாட்டுக்கு அமையவே பெட்டிக் கடைக்கு தடை – காவல்துறை – மறுக்கிறது கேப்பாபுலவு இராணுவம்…..

இராணுவ முறைப்பாட்டுக்கு அமையவே பெட்டிக் கடைக்கு தடை – காவல்துறை – மறுக்கிறது கேப்பாபுலவு இராணுவம்…..

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…


முல்லைத்தீவு கேப்பாபுலவு இராணுவ முகாம் முன்பாக சிறிய எரிபொருள் விற்பனை நிலையத்தினை நடத்தி வந்த கேப்பாபுலவு பகுதியை சேர்ந்த ஒருவரின் கடையை குறித்த இடத்தில் நடத்த முடியாது என தெரிவித்து முள்ளியவளை காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவது, முல்லைத்தீவு கேப்பாபுலவு பகுதியில் அண்மையில் மீள்குடியேற்றப்பட்டு தங்களின் வாழ்வாதாரத்திற்காக ஒரு சிறு எண்ணெய் கடை ஒன்றினை வைத்து நடத்தி வந்த குடும்பத்தினை கடையினை மூடுமாறு முள்ளிவளை காவல்துறையினர் அறிவித்துள்ளதாக கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

கேப்பாபுலவில் படைத்தலைமையம் அமைந்துள்ள இடத்திற்கு முன்னால் அண்மையில் இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட தமது நிலத்தில் மீள்குடியேறிய குடும்பம் ஒன்றே இவ்வாறு சிறு பெட்டிக்கடையாக எண்ணெய் கடை ஒன்றினை வைத்து நடத்தி வந்துள்ளார்கள்.இந்நிலையில் படையினரின் முகாமிற்கு இது பாதுகாப்பு இல்லை எனவும் இந்த கடை இந்தப்பகுதியில் இருப்பதால் இராணுவத்துக்கு இது ஆபத்தாக அமையும் என தெரிவித்து முள்ளியவளை காவல்துறையினர் குறித்த கடையை மூடுமாறு அறிவித்தல் விடுத்துள்ளதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார் .


இராணுவம் தமக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் இராணுவத்துக்கு பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தினாலேயே குறித்த கடையை நடத்த வேண்டாம் என தாம் உத்தரவிடுவதாக முள்ளியவளை காவல்துறையினர் தமக்கு தெரிவித்ததாக கடையின் உரிமையாளர் தெரிவித்தார்.தமது காணிகளை அத்துமீறி பிடித்துவைத்துள்ள இராணுவம் அந்த நிலங்களில் உள்ள தமது வாழ்வாதாரங்களை வருமானங்களை தம்மை பெற விடாது தாமே அனுபவித்துவரும் நிலையில் அண்மையில் விடுவிக்கப்பட்ட தமக்குரிய நிலத்தில் கடன்களை பெற்று சிறியமுதலீட்டை செய்து இந்த வியாபார நிலையத்தினை நடாத்திவரும் நிலையில் இராணுவத்தின் ஏவலில் காவல்துறையினர் தமது நடவடிக்கைக்கு தடைபோட்டிருப்பது வேதனை அளிப்பதாக கடையின் உரிமையாளர் தெரிவித்தார்.

இராணுவம் தமது நிலங்களை விடுவித்து விட்டதாக கூறிக்கொண்டு விடுவித்த எமது நிலங்களில் நாம் சுதந்திரமாக தொழில்செய்ய தடைவிதிப்பதாக கடையின் உரிமையாளர் மேலும் தெரிவித்தார்.இராணுவம் தமக்குரிய தமது நிலங்களை விட்டு வெளியேறினால் இந்த அவலநிலை தமக்கு இருக்காது என மேலும் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவரை தொடர்புகொண்ட முல்லைத்தீவு பாதுகாப்புபடைத்தலைமையக இராணுவ ஊடக அதிகாரி குறித்த உத்தரவை தாம் வழங்கவில்லை எனவும் அவர்கள் அந்த இடத்தில் கடை நடத்துவதில் தமக்கு எந்தவித பிரச்சினைகளும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.இச்சம்பவம் தொடர்பில் முள்ளியவளை காவல்துறையினரை தொடர்பு கொண்டு கேட்டபோது குறித்த எண்ணெய்க்கடை நடத்துவதற்கு அங்கு அவர்கள் அனுமதி எடுக்கவில்லை எனவும் அவ்வாறு எண்ணெய்க்கடை நடத்துவதற்கு அனுமதி கொடுக்கப்படுவது இல்லை எனவும் அனுமதி இல்லாதநிலையில் குறித்த கடையினை மூடுமாறு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

காவல்துறையினர் இவ்வாறுகூறியிருக்கும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல நூறுக்கணக்கான எரிபொருள் விற்பனை நிலையங்கள் இவ்வாறு பல வருடங்களாக இயங்கிவருகின்றதோடு அந்த வியாபார நடவடிக்கைகளுக்கு எவரும் இதுவரையில் தடை விதிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More