Home இலங்கை சிதம்பரப்பிள்ளை சங்கரப்பிள்ளையால், 80 லட்சம் பெறுமதியான காணி உப பிரதேச செயலகத்திற்கு அன்பளிப்பு…

சிதம்பரப்பிள்ளை சங்கரப்பிள்ளையால், 80 லட்சம் பெறுமதியான காணி உப பிரதேச செயலகத்திற்கு அன்பளிப்பு…

by admin

இயக்கச்சியில் உப பிரதேச செயலக வளாகத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டது – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

இயக்கச்சியில் ஆயுர்வேத நிலையம், நூலகம், உப பிரதேச சபை ஆகியவற்றை உள்ளடக்கிய கட்டிடத்தொகுதிக்கான அடிக்கல் சமூக ஆர்வலர் ச.விக்கினேஸ்வரனால் நேற்று (01.08.18) நாட்டி வைக்கப்பட்டது.

சிதம்பரப்பிள்ளை சங்கரப்பிள்ளை என்பவரது விருப்பத்துக்கிணங்க, இந்த வளாகத்தில் மக்களுக்கான சேவை சிறப்பாக நடைபெற வேண்டும் என எண்பது லட்சம் ரூபாய் பெறுமதியான காணியை பிரதேச சபைக்கு அவரது குடும்பத்தினர் அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.

இயக்கச்சியில் ஏ9 வீதியோரத்தில் இந்தக் காணி அமைந்துள்ளது. இந்தக் காணியில் முன்பு முள்ளிப்பற்று கிராம சபை (vilage council) இயங்கி வந்தது. அப்பொழுது இன்றைய வடமராட்சி கிழக்குப் பகுதியான செம்பியன்பற்று, மருதங்கேணி, தாளையடி, ஆழியவளை, உடுத்துறை, வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, கேவில், வண்ணாங்குளம், சுண்டிக்குளம், புல்லாவெளி, முள்ளியான், பெரிய பச்சிலைப்பள்ளி உள்ளிட்ட பிரதேசங்களோடு இயக்கச்சி, முகாவில், சங்கத்தார் வயல், கொற்றாண்டார் குளம், கோயில்வயல் ஆகிய பிரதேசங்களும் இந்தக் கிராமசபையின் நிர்வாகத்தின் கீழ் இருந்தன. பின்னர் வடமராட்சி கிழக்கு தனியாகப் பிரிக்கப்பட்ட பிறகு இது பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபைக்குட்பட்டு முள்ளிப்பற்று உப செயலகமாகியுள்ளது.

ஆனால், யுத்தத்தின் காரணமாக இந்த இடத்தில் இயங்கிய கிராமசபைக் கட்டிடம் (உப செயலகம்) பொது நூலகம், தபால் நிலையம் அனைத்தும் முற்றாகவே அழிந்து விட்டன.
யுத்தத்திற்குப் பிறகு முன்னெடுக்கப்பட்ட வீதி அபிவிருத்திப் பணியில் உப செயலகம் இயங்கிய காணியில் ஒரு பகுதி நெடுஞ்சாலைகள் சபைக்குரியதாகி விட்டது.

இந்த நிலையில் மேலதிக காணியை ஒதுக்கி புதிய செயலக வளாகத்துக்கென வழங்கப்பட்டுள்ளது. கூடவே சமூக ஆர்வலர் சங்கரப்பிள்ளை விக்கினேஸ்வரனால் அடிக்கல்லும் நாட்டி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் ப. அரியரத்தினம், பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், கிளிநொச்சி மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் பிரபாகரன், பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் செயலாளர், தவிசாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்.

மாகாண சபையினுடைய குறித்தொதுக்கப்பட்ட நிதியிலிருந்தும், பிரதேச சபை நிதியிலிருந்தும் ஏழு மில்லியன் ரூபாய் செலவில் இந்தக் கட்டிடத் தொகுதி அமைக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More