Home இலங்கை ‘வடக்கு மீனவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நிரந்தரப் பொறிமுறை வேண்டும்’

‘வடக்கு மீனவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நிரந்தரப் பொறிமுறை வேண்டும்’

by admin


தென்னிலங்கை மற்றும் இந்திய மீனவர்களால், வட பகுதி மீனவர்களுக்குத் தொடர்ச்சியாக இழைக்கப்பட்டு வரும் அநியாங்களைக் கட்டுப்படுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ள கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அதற்கென நிரந்தரப் பொறிமுறை ஒன்றை ஏற்படுத்த வேண்டுமென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியுள்ளார்.

“கடந்த மூன்று தசாப்த காலமாக யுத்தத்தின் பிடிக்குள் வாழ்ந்து, கடலில் சுயாதீனமாகத் தமது தொழிலை மேற்கொள்ள முடியாதிருந்த மீனவர்கள், யுத்த காலத்தில் கடற்படையினரினதும் ஆயுததாரிகளினதும் கெடுபிடிக்குள் பல்வேறு அபாயங்களின் மத்தியில் தமது தொழிலை மேற்கொண்டு வந்தனர்” எனக் குறிப்பிட்டுள்ள அமைச்சர் ரிஷாட், “குறிப்பிட்ட கடல் எல்லைக்கு அப்பால் சென்று தொழில் செய்ய முடியாத வகையில், பாதுகாப்புப் படையினரின் கடல் எல்லைச் சட்டங்கள் தடுத்தன” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“யுத்தம் முடிவுற்ற பின்னரும், இந்த அநியாயங்கள் இப்போது வேறுவடிவில் வந்து சேர்ந்துள்ளன. வட மாகாணத்தின் கடல் வளத்தை வேறு மாவட்ட மீனவர்களும் தென்னிலங்கை மீனவர்களும் சட்டவிரோதமான முறையில் சூறையாடிச் செல்வதை, இந்த மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதி என்ற வகையில், நாம் கண்டிப்பதுடன், எமது கவலையையும் தெரிவிக்கின்றோம்” என்றும் தெரிவித்துள்ளார்.

“வடக்கு மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் பல தடவை மீன்பிடித் துறைக்குப் பொறுப்பான அமைச்சரிடம் நாம் முறையிட்டுள்ள போதும், காத்திரமான நடவடிக்கைகள் எதுவுமே மேற்கொள்ளப்படவில்லை. மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டங்களிலும் ஏகமனதாக முடிவுகள் இது தொடர்பில் எடுக்கப்பட்டு, அதனை நடைமுறைப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ள போதும், அவர்களும் ஓரவஞ்சனையாகவே செயற்படுவதாகத் தெரிகிறது” தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாள்களுக்கு முன்னர், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா, முல்லைத்தீவுக்கு விஜயம் செய்திருந்த போது, இந்தப் பிரச்சினை எடுத்துக்கூறப்பட்டது.

இப்போது தென்னிலங்கை மீனவர்களால், நாயாறு மீன்வாடிகள் எரித்து நாசமாக்கப்பட்டு, அப்பாவி மீனவர்களுக்கு துன்பம் நேர்ந்துள்ளது. எனவே, நாசகாரச் செயலில் ஈடுபட்டவர்களின் மீது சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறும், இந்தப் பிரச்சினை மீண்டும் தொடராத வண்ணம் நிரந்தரப் பொறிமுறை ஒன்றை உருவாக்குமாறும் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, இவ்வாறான சம்பவங்கள் இனங்களுக்கிடையிலான நல்லுறவை சீர்குலைக்கும் எனப் காவற்துறை மா அதிபரின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ள அவர், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கெதிராக சட்டரீதியிலான நடவடிக்கையை எடுக்குமாறு கோரியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More