Home இலங்கை அதிகார பகிர்வு கிடைக்கும் வரை, பொருளாதார நன்மைகளை பெறாது இருக்க முடியாது….

அதிகார பகிர்வு கிடைக்கும் வரை, பொருளாதார நன்மைகளை பெறாது இருக்க முடியாது….

by admin

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு கிடைக்கும் வரை பொருளாதார தீர்வை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஒத்திவைத்துள்ளனர் என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்து்ளளார். கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தில் கிளிநொச்சி மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் இளைஞர் யுவதிகளை சந்திந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

இந்த நாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு அதிகார பகிர்வு தேவை அது அவசியம் ஆனால் அந்த அதிகார பகிர்வு கிடைக்கும் வரை நாம் பொருளாதார நன்மைகளை பெறாது இருக்க முடியாது. கூட்டமைப்பு அதிகார பகிர்வை கோருகிறது எமது கூட்டணியும் அதிகார பகிர்வை கோருகிறது. ஆனால் வேறுபாடு என்னவெனில் நாங்கள் மக்களுக்கு மிகவும் தேவையான பொருளாதார நன்மைகளையும் பெற்றுக்கொண்டு அதிகார பகிர்வை கோருகின்றோம்.

ஆனால் கூட்டமைப்பு அவ்வாறல்ல, எனவேதான் நான் வடக்கு கிழக்கிற்கு அடிக்கடி வந்து செல்கின்றேன் எனத் தெரிவித்த அமைச்சர் நாட்டில் தற்போது யுத்தம் இல்லை ஆனால் யுத்தத்தம் ஏற்பட்டதற்கான காரணங்கள் அப்படியே இருந்துகொண்டுதான் இருக்கின்றது. யுத்தம் இல்லை என்பதால் சமாதானம் ஏற்பட்டுவிடாது சமாதானம் ஏற்படவேண்டும் என்றால் சமத்துவம் இருக்க வேண்டும்.எனவே அந்தப் பணிகளைதான் தற்போது அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது எனத் தெரிவித்த அவர்தமிழ் பேசும் முஸ்லிம் மக்களின் தலைவர்கள் அரசாங்கத்தை உருவாக்கிவிட்டு வெளியிலிருந்து வேடிக்கை பார்க்கவில்லை அவர்கள் உள்ளே வந்த பதிவிகளை பெற்று தங்கள் மக்களுக்கு சேவையாற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.அவ்வாறே மலையகத்திலும் இடம்பெற்றுள்ளது. ஆனால் துரதிஸ்ட்டவசமாக வடக்கு கிழக்கு மக்கள் பிரதிநிதிகள் அரசியல் தீர்வை பெறுவதற்காக அதுவரைக்கும் பொருளாதார தீர்வை பெறுவதனை ஒத்திவைத்துள்ளார்கள். அரசியல் தீர்வு வரும் போது வரும் அதனை வர வைப்போம் ஆனால் அதுவரை பொறுத்திருக்காது வாழ்வாதார உதவிகளை, உட்கட்டமைப்பு வசதிகளை வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

நான் கிளிநொச்சியில் வந்து வாக்கு கேட்கப்போவதில்லை ஆனாலும் இங்கே எனது உறவுகள், எனது இரத்தம், எனது இனம் இருக்கிறது எனவே அந்த இரத்த உறவை எவரும் பிரிக்க முடியாது பிரிக்க விடமாட்டேன். என்றும் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட சம்மேளனத் தலைவர் செல்வகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கொழும்பு மாநாகர சபை உறுப்பினர் பாஸ்கரா, சுரேஸ் மற்றும் பூநகரி பிரதேச சபை உறுப்பினர் போசன் பெருமளவு இனைஞர் யுவதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

கிளிநொச்சி இளைஞர்களுக்கு ஒரு கோடி ரூபா – அமைச்சர் மனோகணேசன்

கிளிநொச்சி மாவட்ட இளைஞர் யுவதிகளின் மேம்பாடு கருதி அவர்களின் தனது அமைச்சின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து ஒரு கோடி ரூபாவினை வழங்குவதாக தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்து்ளளார்.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தில் கிளிநொச்சி மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் இளைஞர் யுவதிகளை சந்திந்த போதே அவர் இவ்வாறு உறுதியளித்துள்ளார். தனது அமைச்சின் நிதி ஒதுக்கீடு மூலம் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் யுவதிகளின் மேம்பாட்டிற்காக ஒரு கோடி ரூபாவினை ஒதுக்கீடு செய்வதாகவும், இதற்கான திட்டமிடல்கள் மற்றும் முன்மொழிவுகளை அதிகாரிகள் ஊடாக அமைச்சுக்கு அனுப்பி வைக்குமாறும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More