Home உலகம் 293 கோடி லாபம் பெறும் நிறுவனத்திடம், வெறும் 2 கோடி பெற்ற மாகாணசபை..

293 கோடி லாபம் பெறும் நிறுவனத்திடம், வெறும் 2 கோடி பெற்ற மாகாணசபை..

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..


வடமாகாணசபையின் பங்களிப்புடன் கிளிநொச்சி- பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள யூலிப்பவர், பீற்றாபவர் நிறுவனங்களின் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் தொடர்பில் வடமாகாணசபையில் கடுமையான விவாதம் இடம்பெற்றுள்ளது.

வடமாகாணசபையின் 130வது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போதே மேற்படி விடயம் தொடர்பில் விவாதம் இடம்பெற்றுள்ளது.

மேற்படி விவாதத்தில் கலந்து கொண்டு எதிர்கட்சி தலைவர் சி.தவராசா கூறுகையில்,

2014ம் ஆண்டு யுலிப்பவர், பீற்றாபவர் ஆகிய நிறுவனங்கள் பளை பிரதேசத்தில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் ஒன்றை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் ஒன்றை வடமாகாண சபையுடன் செய்துள்ளது.

இது தொடர்பாக அப்போது நான் சபையில் உரையாற்றும்போது குறித்த ஒப்பந்தம் வெளிப்படைத்தன்மையுடன் செய்யப்படவில்லை. என்பதை சுட்டிக்காட்டியதுடன் வெளிப்படைத் தன்மையுடன் செய்யப்பட்டிருந்தால் வணிக நிறுவனங்களுக்குரிய சமூக கடப்பாட்டு நிதியை பெற்றிருக்கலாம். என கூறியிருக்கிறேன்.

மேலும் முன்னாள் பேரவை செயலக செயலாளர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட இயலாது. அவருக்கு அதற்கான அதிகாரம் இல்லை. என்பதையும் கூறியிருந்தேன்.

ஆனால் வடமாகாணசபை சட்டத்தின்படி அவர் கையொப்பமிடலாம். அங்கு வடமாகாணசபை செயலாளர் என்றே குறிப்பிடப்பட்டிருக்கின்றது. என கூறினார்கள். ஆனால் மாகாணசபை நிறைவேற்று செயற்பாடுகள் தொடர்பாக  பிரதம செயலாளரே கையொப்பமிடவேண்டும். அதனை முதலமைச்சர் அறிந்திருக்கவில்லை.

மேலும் வடமாகாணசபை சட்டம் என ஒருசட்டம் இலங்கையில் எங்கும் இல்லை. பின்னர் அந்த ஒப்பந்தத்தில் கொள்கைரீதியான மாற்றங்களை செய்யாமல் அப்போதிருந்த ஆளுநர்  அந்த ஒப்பந்தத்தை மீள்வரைபு செய்தார். இந் நிலையில் 2016ம் ஆண்டு கண்காய்வு அறிக்கையில் நான் முன்னர் கூறியதற்கும் மேலதிகமாக சில தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது குறித்த காற்றாலை மின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து  வடமாகாணசபை வணிக நிறுவனங்களுக்கான சமூக கடப்பாட்டு நிதியாக 20 வருடங்களுக்கு 430 மில்லியன் ரூபாய் நிதியை பெறுகிறது. அதாவது முதல் 10 வருடங்களுக்கு 10 மில்லியன் ரூபாய் நிதியும், அடுத்த 10 வருடங்களுக்கு 23 மில்லியன் ரூபாய் நிதியும் கொடுக்கப்படுகிறது.

இந்நிலையில் குறித்த காற்றாலை மின் உற்பத்தி நிறுவனம் 2 வருடங்கள் மின்சார சபைக்கு மின்சாரத்தை வழங்கியமைக்காக 2933.8 மில்லியன் ரூபாய் நிதியை பெற்றுள்ளது. அதாவது 293 கோடி ருபாயை பெற்றுள்ளது. இதனுடன் ஒப்பிடுகையில் மாகாணசபைக்கு கிடைக்கும் நிதி அற்பமானது. இதற்கு மேலாக கணக்காய்வு அறிக்கையில் குறித்த நிறுவனங்களுடன் மாகாணசபை செய்துள்ள ஒப்பந்தத்தில் பிரதம செயலாளர் கையொப்பமிட்டிருக்கவில்லை. காற்றாலை அமைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள காணி நோக்கம் குறிப்பிடப்பட்டு காணி ஆணையாளரிடமிருந்து அனுமதி பெறவில்லை.

இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட முன்னர் மாகாணசபையின் அனுமதி பெறப்படவில்லை. மாகாணசபையின் பெயர் அல்லது அது சார்பாக கையொப்பமிட்ட ஒப்பந்தத்திற்கு சபை அனுமதி பெறப்படவில்லை. என்பன போன்ற சில அவதானங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவை ஒரு பக்கம் இருக்க வடமாகாணசபையில் இருந்து இந்த ஒப்பந்தத்தை செய்த முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் மற்றும் அப்போதைய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் போன்றவர்கள் இந்த நிறுவனம் ஆரம்பிக்க முன்னர் அவர்களிடமிருந்து சாத்தியகூற்று  அறிக்கையினை பெற்றிருக்கவேண்டும். அதனடிப்படையில் அவர்களது மூலதனம், உற்பத்தி செலவு, உற்பத்தி செய்யப்படும் மின் வலுவின் அளவு, அதன் மூலம் கிடைக்கும் வருமானம் ஆகியவற்றை கணித்திருக்கலாம்.

அதன்படி வணிக நிறுவனங்களுக்கான சமூக கடப்பாட்டு நிதியை நிர்ணயம் செய்திருக்கவேண்டும். முன்னாள் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குறிப்பிட்டதைபோல் மின்சார சபையிடமும், சுற்றுசூழல் அதிகாரசபையிடமும் அவர்கள் அங்கீகாரம் பெற்றிருந்தார்கள் எனவே தங்களால் எதுவும் செய்ய முடியாமல்போனது என்றால் எதற்காக அவசர.. அவசரமாக இரவில் முதலமைச்சருடைய வீட்டில் வைத்து ஒப்பந்தத்தை செய்து அதில் பேரவை செயலகத்தின் செயலாளரை கையொப்பமிட செய்தீர்கள்?

மேலும் 19.12.2014ம் திகதி அமர்வில் ஐங்கரநேசன் உரையாற்றும்போது காற்றாலை மின் உற்பத்தி நிறுவனங்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் ஊடாக முதலமைச்சர் அ ந்த காற்றாலைகளை அமைப்பதற்கான காணியை 20 வருடங்களுக்கு வழங்கியுள்ளார். எனக்கூறியுள்ளார்.

குறித்த காற்றாலை மின் உற்பத்தி நிறுவனம் எல்லா அனுமதிகளையும் பெற்றுக்கொண்டே இங்கு வந்தது என்றால் எதற்காக நீங்கள் காணி கொடுத்தீர்கள்? மேலும் ஐங்கரநேசன் அப்போது உரையாற்றுகையில் சில இடங்களை நாங்கள் கொஞ்சம் அமைதியாகச் செய்யவேண்டிய தேவை உள்ளது என கூறினீர்கள். உண்மைதான் நீங்கள் எல்லாவற்றையும் மிக இரகசியமாகவே செய்துள்ளீர்கள். நாங்கள் அதனை ஏற்றுக் கொள்கிறோம் என்றார்.

தொடர்ந்து மாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன் உரையாற்றுகையில், மாகாணசபை உருவாக்கப்பட்ட சில மாதங்களில் பளையில் ஒரு காற்றாலை மின் உற்பத்தி நிலையம் உருவாக்க முயற்சிக்கப்படுகிறது. அதற்காக தென்னிலங்கையில் இருந்து வந்தவர்களுக்கு எங்களுடைய அதிகாரிகள் கண்ணை மூடிக்கொண்டு கையொப்பமிடுகிறார்கள் என எனக்கு தகவல் கிடைத்தது. அதனை நான் முதலமைச்சருடைய கவனத்திற்கு கொண்டு சென்றபோது அது தொடர்பாக நிபுணர்களின் கருத்துக்களை பெறுமாறு முதலமைச்சர் எனக்கு கூறினார்.

அதற்கமைய நான் சில நிபுணர்களை அணுகி கருத்துக்களை பெற்றுக் கொண்டிருந்த நிலையில் மூவர்ணப்படங்களுடன் அப்போதைய அமைச்சர் ஐங்கரநேசனின் செய்தி ஊடகங்களில் வந்திருந்தது.  அந்த செய்தி வடமாகாணத்திற்கு வரும் பாரிய முதலீட்டை அமைச்சர் ஐங்கரநேசன் பார்வையிட்டார் என அந்த செய்தி அமைந்திருந்தது.

இங்கே நான் கேட்பது மின்சாரசபையின் கீழ் உள்ள பல கம்பனிகள் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்க தயாராக இருந்தார்கள். அதுவும் இந்த யூலிப்பவர், பீற்றாப்பவர் ஆகிய நிறுவனங்கள் மின்சாரத்திற்கு அறவீடு செய்யும் நிதியிலும் பார்க்க மிக குறைவான நிதியில் செய்ய தயாராக இருந்தார்கள். அப்படி இருக்கையில் எந்த கேள்வி கோரலும் இல்லாமல்  தனியே இந்த நிறுவனத்திற்கு மட்டும் கொடுக்கப்பட்டது எப்படி? மிகப்பெரியளவில் வருமானம் பெறும் நிறுவனத்திடமிருந்து எமது மக்களுக்குக்கிடைத்த நன்மைகள் என்ன? என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து மாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மின் கருத்து கூறுகையில், வெளிப்படை தன்மை பற்றி பேசும்போது கண்காய்வு அறிக்கையை இந்த சபையில் எடுக்கவேண்டாம். என முதலமைச்சர் எமக்கும் சபைக்கும் கடிதம் எழுதியதை நாங்கள் ஆட்சேபிக்கிறோம்.  ஐங்கரசேன் எனக்கும் சக உறுப்பினர் எஸ்.சுகிர்தனுக்கும் கூறினார் 2 பெட்டிகள் நிறைய காசு கொண்டுவந்தார்கள் அப்பன் என. அதேபோல் 40 மில்லியன் ரூபாய் செலுத்தி தனது மகளை எப்படி வெளிநாட்டில் படிக்கவைத்தார்? அதற்கெல்லாம் ஆதாரங்கள் உள்ளன என்றார்.

இதனை மறுதலித்த மாகாணசபை உறுப்பினர் ஐங்கரநேசன் நாங்கள் ஒன்றும் பிச்சைக்காரர்கள் அல்ல. என்னுடைய மகளை எங்கே படிக்கவைக்கவேண்டும் என்பதை நான் தீர்மானிப்பேன்.  அதை குறித்து கவலைப்படவேண்டாம். நான் எப்படி பணம் செலுத்தினேன் என்பதற்கான ஆதாரம் இருக்கிறது என்றால் அதனை இப்போதே வெளிப்படுத்துங்கள். மேலும் 2 பெட்டி நிறைய காசு கொண்டுவந்தார்கள் என நான் எப்போதும் எங்கேயும் கூறவில்லை என்றார்.

தொடர்ந்தும் உறுப்பினர் அஸ்மின் உரையாற்றுகையில், தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னர் வேட்பாளர்கள் தங்கள் சொத்து விபரங்களை வெளியிடவேண்டும். பின்னர் ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் தங்கள் சொத்து விபரங்கள் குறித்து வெளிப்படுத்தவேண்டும். இந்த இடத்தில் நான் கேட்கிறேன் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் உறுப்பினர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் தங்கள் சொத்து விபரங்களை வெளியிடவேண்டும் என கூறினார்.

தொடர்ந்து ஐங்கரநேசன் உரையாற்றும்போது தென்னிலங்கையில்  சகல அனுமதிகளையும் பெற்று வந்தவர்கள் அவர்கள் விரும்பும் நிதியையே தருவார்கள். அதனை நாங்கள் கட்டாயப்படுத்த முடியவில்லை. ஏற்கனவே தென்னிலங்கையில் இருந்து ச கல அனுமதிகளையும் பெற்றுக் கொண்டுவந்து வடக்கில் தொழிற்சாலைகளை உருவாக்கியவர்கள் வடமாகாண மக்களுக்கு கொடுத்த வணிக நிறுவனங்களுக்கான சமூக கடப்பாட்டு நிதி எவ்வளவு என்பதை பார்க்கவேண்டும் என கூறினார்.

தொடர்ந்து எதிர்கட்சி தலைவர் சி.தவராசா கூறுகையில் தென்னிலங்கையில் அனுமதி பெற்றார்கள் என்றால்  எதற்காக காணிகளை வழங்கினீர்கள்? என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறுகையில், 2 வருடத்தில் 293 கோடி ரூபாய் மிகை லாபம் பெறும் நிறுவனத்திடமிருந்து 2 கோடி ருபாயை வருடம் ஒன்றுக்கு பெறுவது பிழை. வணிக நிறுவனங்களுக்கான சமூக கடப்பாட்டு நிதி என்பது அந்த நிறுவனங்களின் இலாபத்தில் இருந்து ஒரு விகிதாரசத்தை பெறவேண்டுமே தவிர அவர்கள் கொடுப்பதை பெறுவதல்ல என்றார்.

தொடர்ந்து இந்த விடயம் தொடர்பாக விவசாய அமைச்சின் கருத்து பெறவேண்டும் என உறுப்பினர் ஐங்கரநேசன் கேட்டுக் கொண்டதற்கு இணங்கவும், முதலமைச்சருடைய வேண்டுகோளுக்கு இணங்கவும் இந்த விடயம் அடுத்த சபை அமர்வில் எடுத்துக்  கொள்ளப்படவுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More