Home இலங்கை ஆயுள் முடியும் வேளை, மாகாணத்திற்கான பூ, மரம், பறவை விலங்கு தெரிவு செய்ய குழு ….

ஆயுள் முடியும் வேளை, மாகாணத்திற்கான பூ, மரம், பறவை விலங்கு தெரிவு செய்ய குழு ….

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

வடமாகாணத்திற்கான பூ , மரம் , விலங்கு , பறவை என்பவற்றை தெரிவு செய்யவதற்கு வடமாகாண சபையினால் குழு ஒன்று அமைக்கபட்டு உள்ளது. வடமாகாண சபையின் 130ஆவது அமர்வு நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதன் போது ஆளும் கட்சி உறுப்பினர் பொ. ஐங்கரநேசன் ஒவ்வொரு மாகாண அரசும் தங்களுக்கான பூ , மரம் , பறவை, விலங்கு என்பவற்றை தெரிவு செய்துள்ளனர்.

வடமாகாண சபை உருவாக முதல் வடக்கு மாகாணத்திற்கு என மரமாக மருத மரமும் , பூவாக வெண் தாமரையும் , பறவையாக புலுணியும் , விலங்காக ஆண் மானும் தெரிவு செய்யப்பட்டு உள்ளன. இவை மாகாணத்தின் சிறப்புக்களை பிரதி பலிப்பதாக இல்லை. எனவே மாகாண சபை உறுப்பினர்கள் , துறை சார் அறிஞர்கள் , பொதுமக்கள் ஆகியோரின் கருத்துக்களை உள்வாங்கி அவற்றை மீளாய்வுக்கு உட்படுத்தி , தேவை ஏற்படின் அவற்றை மாற்றம் செய்து , வடமாகாணத்தின் பாரம்பரியத்தை பறைச்சாற்றும் விதமாக பழம் ஒன்றினையும் தெரிவு செய்ய வேண்டும் என தீர்மானத்தை முன் மொழிந்தார்.

அதன் போது கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சி. தவராசா , இதனை சபையில் தீர்மானமாக நிறைவேற்றி பயனில்லை. மாகாண சபையால் அங்கிகரீக்கபட்டு, அரசிதழாக (வர்த்தமானி) வெளியிடப்பட வேண்டும். என தெரிவித்தார். அதனை ஏற்றுக்கொண்ட அவைத்தலைவர் , சி.வீ.கே.சிவஞானம் வடமாகாணத்திற்கான பறவை , மரம் , விலங்கு , பூ , பழம் என்பவற்றை தெரிவு செய்வதற்கு தன்னுடன் , ஆளும் கட்சி உறுப்பினர்களான சபா. குகதாஸ் , பொ. ஐங்கரநேசன் , த. குருகுலராஜா பா. அரியரட்ணம் , எதிர்கட்சி உறுப்பினர்களான அலிக்கான் சரிப் மற்றும் ஜெயதிலக ஆகியோரை உள்ளடக்கி குழு ஒன்றினை அமைத்துள்ளார். அதேவேளை வடமாகாண சபையின் ஆயுள் காலம் இன்னும் இரண்டு மாதங்களில் முடிவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More