Home இலங்கை “துரோகிகள்” என அழைத்தவர்களுடன் தான், எமது கட்சியினர் கூட்டு வைத்துள்ளனர்…

“துரோகிகள்” என அழைத்தவர்களுடன் தான், எமது கட்சியினர் கூட்டு வைத்துள்ளனர்…

by admin

வாரத்துக்கொரு கேள்வி – 02.09.2018


வாரத்துக்கொரு கேள்வியாகத் தொடங்கிய இந்தத் தொடர் தற்போது பல கேள்விகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. எனவே இவ்வாரம் நான்கு கேள்விகள் கவனத்திற்கு எடுக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு –

1. கேள்வி – நீங்கள் கௌரவ சம்பந்தன் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில் கோரப்பட்டதற்கு மாறாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, கௌரவ சிவசக்தி ஆனந்தன் அவர்கள் தவிர்ந்த, பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஜனாதிபதியின் செயலணி கூட்டத்தில் கலந்துள்ளார்களே. அது பற்றி உங்கள் கருத்தென்ன?

பதில் – எனக்கு சந்தோஷந்தான்.

கேள்வி – அது எப்படி?

பதில் – எனக்கு மட்டுந் தரப்பட்ட ஒரு அரசியல் மற்றும் பொருளாதார விருத்தி சம்பந்தமான சலுகையை நான் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டேன் என்று தெரிகின்றது. இதன் போது எமது அரசியல் கருத்து வேறுபாடுகள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. எதனைக் கூறச் சிரமப்பட்டேனோ அதனை இந்த நிகழ்வு தெட்டத் தெளிவாக்கிவிட்டது.

முன்னர் அரசாங்கம் தருவதை ஏற்று எங்கள் இடங்களை நாங்கள் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று சில தமிழ்க் கட்சித் தலைவர்கள் கூறிய போது அதனை எதிர்த்தவர்கள் எமது கட்சியினர் தான். அவர்களைத் துரோகிகள் என்று அழைத்தவர்களும் அவர்கள் தான். அந்தத் ‘துரோகி’களுடன் தான் இப்போது எமது கட்சியினர் உள்ளூராட்சி சபைகள் பலவற்றில் கூட்டு வைத்துள்ளனர்.

பொருளாதார விருத்தியே எமக்குத் தற்போது வேண்டும் என்ற கருத்திருந்திருந்தால் நாங்கள் மற்றவர்கள் அரசாங்கத்தின் ஊடாகப் பொருளாதார விருத்தியைப் பெறுவதை தடை செய்திருக்கக்கூடாது. துரோகிகள் என்று அவர்களை அடையாளப்படுத்தியிருக்கக்கூடாது. மாகாணசபை கலைய இரண்டு மாதங்கள் உண்டு. பாராளுமன்றம் கலைய 2 வருடங்கள் உண்டு. இந் நிலையில் செயலணியை நியமித்து செயலாற்ற முன்வந்திருப்பது அரசியல் காரணங்களுக்காக என்று தெரிகிறது. அதே போல் அதில் சேர்ந்து செயலாற்ற எம்மவர்கள் முன்வந்திருப்பதும் அரசியல் காரணங்களுக்காகத்தான் என்று தெரிகிறது. என்னைப் பொறுத்த வரையில் கட்சி அரசியல் ஒரு பொருட்டல்ல. எவ்வளவு வேகமாக ஒரு அரசியல் தீர்வைப் பெற்றுத் தரமுடியும் என்பதே எனது கரிசனை. நாங்கள் யாவரும் ஒன்றிணைந்து இராணுவத்தினருடன் சேர்ந்த தெற்கத்தையப் பெரும்பான்மையினரின் செயலணி ஒரு அரசியல் செயல்பாடே என்று கூறி எமக்கு அரசியல் தீர்வே தற்போது முக்கியமென்ற கருத்தை முன்வைத்திருந்தால் தமிழ் மக்களின் அரசியல் பலமற்ற நிலையும் தமிழ் மக்களின் உரித்துக்களை வழங்க அரசாங்கம் பின்னிற்கும் பாங்கும் வெளிக் கொண்டு வரப்பட்டிருப்பன. உலக நாடுகளில் இதை எடுத்துக்காட்டியிருக்கலாம். தற்போது தம்மைத் தாழ்த்தி என்னை ஏற்றி விட்டிருக்கின்றார்கள் எனது கட்சியினர்.

எமது கொள்கை ரீதியான வேறுபாடுகள் வெளிக் கொண்டுவரப்பட்டுள்ளன. உடனே அரசியல் தீர்வு அவசியம் என்று கூறிய எனது வாசகம் கௌரவ சம்பந்தன் அவர்கள் இந்த வருட முடிவுக்கு முன்னர் அரசியல் தீர்வு என்று கூறியதன் பிரதிபலிப்பேயாகும். இப்போது அரசியல் தீர்வும் கிடைக்கப்போவதில்லை. பொருளாதார விருத்தியும் எம்மவர் கைவசம் இருக்கப் போவதுமில்லை. செயலணியின் 46 பேரே காய்களை நகர்த்துவார்கள்.

ஆனால் ஜனாதிபதிக்கு நான் எழுதிய கடிதத்தில் நீங்கள் உங்கள் ஒருதலைப்பட்சமான பொருளாதார விருத்திகளை உங்களுக்கு வேண்டுமென்றால் செய்து கொண்டு போங்கள். ஆனால் என்னை அதற்குள் உள்நுழைக்காதீர்கள் என்றே கூறியிருந்தேன். பொருளாதாரப் பயன்களைக் காட்டி எமது அரசியல் தீர்வைத் தாமதப்படுத்துவதே அரசின் எண்ணம். அத்துடன் பொருளாதார ரீதியாக நாங்கள் வடக்குக் கிழக்கைக் கவனித்து வருகின்றோம் என்று ஜெனிவாவில் அரசாங்கம் கூற இந்த செயலணியைப் பாவித்து வருகின்றது என்பதை எமது பாராளுமன்ற அங்கத்தவர்கள் உணராதிருப்பது விந்தையாக உள்ளது.

முதற்கூட்டத்திலேயே அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் முழுப் பூசணிக்காயை சோற்றில் புதைக்கப் பார்த்தார். அதனால்த்தான் அன்றே விபரங்கள் எடுத்து அடுத்த நாள் தினக்குரலில் சிங்கள குடியேற்றம் உண்மையில் நடந்துள்ளதென்பதை அனுமதிப் பத்திரமொன்றைப் பிரசுரித்ததால் தெட்டத் தெளிவாக எடுத்துக்காட்டினேன்.தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் என்னை உதாசீனம் செய்திருப்பினும் காணிகள் சம்பந்தமான கௌரவ சம்பந்தன் அவர்களின் கூற்றை ஜனாதிபதிக்கு மெய்ப்பிக்கவே இந்த உடன் நடவடிக்கையை எடுத்தேன்.

நான் செயலணியில் பங்குபற்றினாலும் இரண்டு அல்லது மூன்று கூட்டங்களுக்கு மேல் பங்குபற்ற முடியாது. ஆகவே அரசியல் ரீதியாக எமது கட்சிக்குள்ளேயே எமது சிந்தனைகள் எவ்வாறு அமைகின்றன என்று கணிக்க இந்த விடயம் அனுசரணையாக அமைந்துள்ளது. அந்த அளவில் எனக்கு மகிழ்ச்சியே.

2. கேள்வி – ஆகஸ்ட் 30ந் திகதிய மகாணசபை கூட்டத்தில் கலந்து கொள்ளாது உங்கள் அமைச்சில் பதவி வகிக்கும் ஒரு அலுவலரின் திருமணத்திற்குச் சென்றீர்கள் என்பதைக் குற்றமாகக் காட்ட சிலர் முனைந்துள்ளார்கள். உங்கள் கருத்து?

பதில் – திருமணம் என்பது வாழ்க்கையில் அதுவும் தமிழர்கள் மத்தியில் பொதுவாக ஒரு முறையே வரும். மாகாணசபைக் கூட்டம் ஒரு மாதத்திற்கு இரு முறை வரும். இதை உணராதவர்கள் குற்றம் சாட்டுகின்றார்கள் போலும்!

3. கேள்வி – பளை காற்றாலை விடயம் சம்பந்தமான உங்கள் அலட்சியத்தால் வடக்கு மாகாணசபைக்குப் பெரும் நிதியிழப்பு என்று கூறப்பட்டுள்ளது. இது சரியா?

பதில் – முற்றிலுந் தவறானது. மத்திய அரசின் முதலீட்டுச் சபைக்குச் சொந்தமான திட்டந்தான் இந்தக் காற்றாலைத்திட்டம். நாம் பதவிக்கு வர முன்னரே உரிய அனுமதிகளைப் பெற்றே அவர்கள் தமது திட்டத்தைச் செயல்ப்படுத்தினார்கள். எம்முடன் உடன்பாடு வைத்துக் கொண்டது Corporate Social Responsibility என்ற வகையில். சமூகப் பயன்பாட்டுக்காக ஒரு நிறுவனந் தன் விருப்பார்ந்தவாறு கொடுக்க முன்வரும் தொகையே ஊளுசு என்ற கொடை. அதை அவர்கள் தரலாம் தராமல் விடலாம். அதில் நிதியிழப்பு எவ்வாறு ஏற்படக் கூடும்? எம்மால் உடன்பட்ட இருபது இலட்சமும் எமக்குக் கொடையாளியால் தரப்படும் தன்னிச்சையான நிதியே. அந்தத் தொகையைக் அதிகரிக்க வேண்டுமானால் நாம் ஒரு வேண்டுகோள் விடுக்கலாம். அவர்கள் அதைப் பரிசீலித்துத் தமது கருத்தைத் தெரியப்படுத்தலாம். இது பேரம் பேசவேண்டிய தொகையல்ல. விருப்புடன் எமக்கு வழங்கப்படும் கொடை. இதனால் எமக்கு நிதி கிடைத்ததே ஒளிய நிதியிழப்பு ஏதும் ஏற்படவில்லை. அரசியலுக்காக ஆர்ப்பரிக்கப்படும் அவச் சொற்களே இவை. அத்துடன் நாம் பதவியேற்ற காலத்து விடயங்கள் இத்தனை வருடங்களின் பின் தற்போது எழுப்பப்படுகின்றன என்றால் அதன் அர்த்தம் என்ன? அலட்டிக் கொள்ளாதீர்கள். அப்படித்தான் அவர்கள்!

4. கேள்வி – அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் அவர்கள் வடமாகாண அமைச்சர்கள் சம்பந்தமாக எழுந்திருக்கும் சட்டப்பிரச்சனையை ஒரு நிமிடத்தில் தீர்க்க முடியும் என்று கூறியுள்ளாரே. அது எப்படி?

பதில் – கௌரவ அவைத்தலைவர் என்ன கருத்தில் அவ்வாறு சொன்னாரோ தெரியாது. ஆனால் அவர் கூறுவது போல் ஒரு நிமிடத்தில் இந்தச் சிக்கலைத் தீர்க்கலாம். கௌரவ ஆளுநர் அவர்கள் சென்ற வருடம் ஆகஸ்ட் மாதத்தில் நான் கௌரவ டெனீஸ்வரன் அவர்களை பதவி நீக்கம் செய்த விடயத்தை அப்பொழுதிருந்து நடைமுறைக்கு வரும் விதத்தில் (சுநவசழளிநஉவiஎநடல) இலங்கை வர்த்தமானியில் பிரசுரிக்க இந்தச் சிக்கல் தீரும். உரியவாறு கையெழுத்திட்டு கடிதம் அனுப்பினால் அது சிக்கலைத் தீர்க்கும். கையெழுத்திட ஒரு நிமிடம் தேவையில்லை.

பலர் தற்போதிருக்கும் ஐந்து அமைச்சர்களில் ஒருவரை நீக்குமாறு நான் சிபார்சு செய்ய வேண்டும் என்றும் அவர் இடத்தில் கௌரவ டெனீஸ்வரன் வர வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றார்கள். அது நடைமுறைச் சாத்தியம் அற்றது. காரணம் ஒரு அமைச்சரைப் பதவி இறக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கு இல்லை என்று தெளிவாக மேன்முறையீட்டு நீதிமன்றம் கூறியுள்ளது. ஆகவே நான் எந்த ஒரு பதவி இறக்கமும் செய்ய முடியாது. ஏற்கனவே சிபார்சு செய்தாகிவிட்டது. அதை வலுப்படுத்த ஆளுநர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அவர் தான்தோன்றித்தனமாக ஒரு அமைச்சரை நீக்கி கௌரவ டெனீஸ்வரனை உள் ஏற்றால் குறித்த அமைச்சர் நீதிமன்றம் செல்வார். தான் உரியவாறு ஆளுநரால் நியமிக்கப்பட்டவர் என்ற ரீதியில் ஆளுநர் தம்மை நீக்க முடியாது என்று வாதாடுவார். மேலும் முதலமைச்சரின் சிபார்சு இன்றி தம்மை அவர் பதவி நீக்கம் செய்ய முடியாது என்று வாதாடுவார்.

ஆகவே இதற்கு ஒரே வழி 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலமைச்சர் பதவி நீக்கம் செய்த கௌரவ டெனீஸ்வரனின் பதவி நீக்கம் பற்றி அப்பொழுதிருந்து வலுவேற்கும் விதத்தில் வர்த்தமானியில் பிரசுரிப்பதுதான். ஆனால் அதனை ஆளுநர் செய்கின்றார் இல்லை. கௌரவ டெனீஸ்வரன் அவர்கள் தம் சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தீர்மானமொன்றைப் பெற்றவுடன் அவருக்கு தொலைபேசி மூலம் உடனே பாராட்டுக்களைத் தெரிவித்தவர் கௌரவ ஆளுநரே. ஏதோ காரணத்திற்கு மேற் கூறப்பட்டவாறு பிரசுரிக்க அவர் தயங்குகின்றார். தயங்காது வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கு உடனே நடவடிக்கை எடுத்தால் ஒரு நிமிடம் போகாது குறித்த கையெழுத்து வைக்க!

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More