Home இலங்கை யாழ் நகர ஆயுத மீட்பு வழக்கு ஒத்திவைப்பு – சந்தேக நபர் விளக்க மறியலில்….

யாழ் நகர ஆயுத மீட்பு வழக்கு ஒத்திவைப்பு – சந்தேக நபர் விளக்க மறியலில்….

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

புளொட் அமைப்பின் முன்னாள் உறுப்பினரின் வீட்டில் மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பான விவரம் அடங்கிய பட்டியல் 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவால் நாகர்கோவில் முகாமிலிருந்து காணாமற்போய்விட்டது. அதுதொடர்பில் இராணுவ மத்திய ஆயுத வழங்கல் பிரிவிடமும் விவரம் இல்லை. எனவே காவற்துறையினரால் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ள ஆயுதங்களின் சான்றுப்பொருள் பட்டியலை வழங்க மன்று அனுமதியளிக்க வேண்டும். அதன் ஊடாக ஆயுதங்கள் தொடர்பான விவரத்தை கண்டறிய முடியும்” என யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இராணுவம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி விண்ணப்பம் செய்தார்.

“புளொட்டின் முன்னாள் உறுப்பினரின் வீட்டில் மீட்கப்பட்ட ஆயுதங்கள் இராணுவத்தினருக்கு 1998ஆம் ஆண்டு வழங்கப்பட்டவை. அவை காணாமற்போயிருந்தன” என இராணுவத் தலைமையகம் அறிவித்திருந்த நிலையில் இராணுவம் சார்பில் இன்று இந்த விண்ணப்பம் நீதிமன்றில் முன்வைக்கப்பட்டது.

புளொட்டின் முன்னாள் உறுப்பினரான மானிப்பாயைச் சேரந்த 55 வயதுடைய சிவகுமார்  என்பவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்தார். அந்த வீட்டில் முன்னர் புளொட்டின் அலுவலகம் இருந்தது. அந்த வீட்டின் உரிமையாளர் வெளிநாட்டில் உள்ளார். அங்கிருந்து வெளியேற புளொட்டின் முன்னாள் உறுப்பினர் மறுப்புத் தெரிவித்து வந்தார்.

வீட்டு உரிமையாளர் தனது சட்டத்தரணி ஊடாக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார். நீதிமன்றின் கட்டளையின் அடிப்படையில் கடந்த டிசெம்பர் 19ஆம் திகதி அந்த வீட்டிலிருந்தவரை வெளியேற்ற யாழ். மாவட்ட நீதிமன்றப் பதிவாளருடன் யாழ்ப்பாணம்காவற்துறையினர் சென்றனர். அங்குள்ள பொருள்களை வெளியேற்றும் பணியில் காவற்துறையினர் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த அலுமாரி ஒன்றுக்குள் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் காணப்பட்டன.

பயன்படுத்தத்தக்க ஏகே47 துப்பாக்கி ஒன்று, அதற்குப் பயன்படுத்தப்படும் கோல்ட்ஸர் 2, ரவைகள் 396, கைத்துப்பாக்கி ஒன்று, அதற்குப் பயன்படுத்தும் மகஸின்கள் 3, வோக்கிகள் 2 மற்றும் 2 வாள்கள் மீட்கப்பட்டன.

அதனையடுத்து புளொட்டின் முன்னாள் உறுப்பினர் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கட்டளையில் இன்றுவரை தொடர்ச்சியாக சுமார் 8 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சந்தேகநபர் இன்று (3.09.18) திட்கட்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். யாழ்ப்பாணம் நீதிமன்ற பதில் நீதிவான் கனரட்ணம் கேசவன் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

இராணுவத்தின் சார்பில் சட்டத்தரணி ஒருவர் முன்னிலையாகி மன்றின் அனுமதியுடன் விண்ணப்பம் ஒன்றை முன்வைத்தார் “புளொட்டின் முன்னாள் உறுப்பினரின் வீட்டில் மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பான விவரம் அடங்கிய பட்டியல் 2004ஆம் ஆண்டு டிசெம்பர் 26ஆம் திகதி ஏற்பட்ட சுனாமி பேரழிவால் நாகர்கோவில் முகாமிலிருந்து காணாமற்போய்விட்டது.

அதுதொடர்பில் இராணுவ மத்திய ஆயுத வழங்கல் பிரிவிடமும் விவரம் இல்லை. எனவே காவற்துறையினரால் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ள ஆயுதங்களின் சான்றுப்பொருள் பட்டியலின் பிரதியை வழங்க மன்று அனுமதியளிக்க வேண்டும். அதன் ஊடாக ஆயுதங்கள் தொடர்பான விவரத்தை கண்டறிந்து நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்க முடியும்.

இராணுவ சட்டத்தரணியின் விண்ணப்பத்தை ஆராய்ந்த பதில் நீதிவான், “இந்த நீதிமன்றின் நீதிவானின் அனுமதி இந்த விண்ணப்பத்துக்கு அவசியம். அடுத்த தவணையின் போது, இந்த விண்ணப்பம் தொடர்பில் நீதிவான் கட்டளை வழங்குவார்” என்று உத்தரவிட்டு வழக்கை வரும் 17ஆம் திகதிவரை ஒத்திவைத்தார். அன்றுவரை சந்தேகநபரான புளொட் முன்னாள் உறுப்பினரின் விளக்கமறியல் மன்றினால் நீடிக்கப்பட்டது.

இராணுவத்தால் நீதிமன்றுக்கு
முன்னர் அறிவிக்கப்பட்ட கடிதம்
1998ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 4ஆம் திகதி இராணுவத்தின் காலாற்படைக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி மற்றும் ரவைகள் காணாமற்போயிருந்தன. அந்த ஆயுதங்களே தற்போது மீட்கப்பட்டுள்ளன. அவை சந்தேகநபர் வசம் சென்றமை தொடர்பில் இராணுவத்துக்கு தெரியாது” என இராணுவத் தலைமையகம் யாழ்ப்பாணம் காவற்துறையினருக்கு கடிதம் அனுப்பிவைத்துள்ளது.

இந்தக் கடிதத்தின் பிரதியுடன், காவற்துறையினர் கடந்த பெப்ரெவரி 26ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிமன்றில் இந்த வழக்கில் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர்.  அதனை வழக்கேட்டில் இணைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சி.சதீஸ்தரன் உத்தரவிட்டிருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More