Home இந்தியா இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி, நம்பி நாராயணனுக்கு 50 லட்சம் ந‌ஷ்டஈடு…

இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி, நம்பி நாராயணனுக்கு 50 லட்சம் ந‌ஷ்டஈடு…

by admin

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் ந‌ஷ்டஈடு வழங்கும்படி கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘இஸ்ரோ’வில் விஞ்ஞானியாக பணியாற்றிய, 74 வயதுடைய நம்பி நாராயணன் 1994-ல் இஸ்ரோவின் விண்வெளித் திட்டங்கள் குறித்த ரகசியங்களை வெளிநாடுகளுக்கு பரிமாற்றம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி கேரள மாநில காவற்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது நம்பி நாராயணன் காவற்துறையினரால் சித்ரவதை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. அப்போது நம்பி நாராயணன் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று கூறி அவரை வழக்கில் இருந்து சி.பி.ஐ. விடுவித்தது. மேலும் கேரள காவற்துறை அதிகாரிகள் சட்டவிரோதமாக அவரை கைது செய்ததாகவும் கூறியது.

இந்த நிலையில் தன்னை தேவையின்றி கைது செய்து, சித்ரவதைக்கும், மன உளைச்சலுக்கும் உள்ளாக்கிய காவற்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நம்பி நாராயணன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், காவற்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தேவையில்லை என்று உத்தரவிட்டது.

இதை எதிர்த்து 1998-ல் நம்பி நாராயணன் உச்ச நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ந‌ஷ்ட ஈடாக 1 லட்சம் வழங்க கேரள அரசுக்கு உத்தரவிட்டது. இதேபோல் தேசிய மனித உரிமைகள் கமிஷன் 2001-ல் 10 லட்சம் ரூபாய் ந‌ஷ்ட ஈடு வழங்கும்படி உத்தரவு பிறப்பித்தது.

இதற்கிடையே, இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் ‘‘நம்பி நாராயணன் கைது செய்யப்பட்டது, தேவையற்றது. அவர் கடுமையாக சித்ரவதை செய்யப்பட்டு மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார். எனவே அவருக்கு ந‌ஷ்டஈடாக கேரள அரசு ரூ.50 லட்சத்தை 8 வாரத்துக்குள் வழங்கவேண்டும்’’ என உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும் இந்த வழக்கில் கேரள காவற்துறையின் பங்கு பற்றி விசாரிக்க உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை குழுவையும் அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை நம்பி நாராயணன் வரவேற்றுள்ளார்.

இந்த உத்தரவு மிகவும் மகிழ்ச்சி தருகிறது. எனினும், கேரள காவற்துறை பற்றி விசாரிக்க அமைக்கப்பட்ட குழு குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரணையை நடத்தி முடிக்க காலவரையறை நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More