Home இலங்கை பாரிய குற்றமிழைத்தவர்கள், சுதந்திரமாக உள்ளனர் 60 தமிழ் அரசியல் கைதிகளை தடுத்து வைப்பதில் என்ன பயன்?

பாரிய குற்றமிழைத்தவர்கள், சுதந்திரமாக உள்ளனர் 60 தமிழ் அரசியல் கைதிகளை தடுத்து வைப்பதில் என்ன பயன்?

by admin


தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு பொது மன்னிப்பளித்து, இந்த நாடு தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, எதிர்காலத்தைச் சுபீட்சமாக்குவதற்கான ஐந்து யோசனைகளை, ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க முன்வைத்துள்ளார்.

ஜாதிக்க ஹெல உறுமய கட்சியின் அலுவலகத்தில், நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் குறித்த ஐந்து யோசனைகளையும் முன்வைத்துள்ளார்.

யுத்தத்துக்குள் மறைந்துகொண்டு, தங்களது தனிப்பட்ட தேவைகளுக்காகப் பல்வேறு குற்றங்களை இழைத்தவர்களுக்கு எதிராக, கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனத் தெரிவித்த அவர் சமாதானத்தையும் சகவாழ்வையும் கட்டியெழுப்புவதற்கான ஒரே வழி, மன்னிப்பளிப்பதாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் மற்றும் தனிப்பட்ட நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட குற்றங்கள், சட்ட மா அதிபர் திணைக்களத்தால், தனித்தனியே கண்டறியப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்த அவர் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தோல்வியடைந்து,  10 வருடங்கள் பூர்த்தியாகின்ற போதிலும், அதனால் ஏற்பட்ட சட்டப் பிரச்சினைகள், சமூகப் பிரச்சினைகள் மற்றும் சர்வதேசப் பிரச்சினைகளுக்கு, இதுவரை தீர்வு காணப்படவில்லை எனவும் அவை ஒன்றோடொன்று பிணைந்த வகையில், வேறு தோற்றத்துடன் கூடிய வேறு பிரச்சினைகளாக உருவெடுத்துள்ளதாவும் தெரிவித்துள்ளார்

ஆயுதம் ஏந்தியவர்களில் 12 ஆயிரம் பேர், புனர்வாழ்வு பெற்று, சமூகத்தோடு இணைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 60 பேரில் சிலருக்கு எதிராக, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் சிலருக்கு எதிராக, வழக்குத் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ள சம்பிக்க ரணவக்க, யுத்த காலத்தோடு தொடர்புபட்ட சில சம்பவங்களுக்குக் காரணமானபாதுகாப்புப் படையைச் சேர்ந்த சிலருக்கு எதிராகவும், வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு தண்டனைகளையும் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

அதேபோன்று, யுத்தத்துடன் தொடர்புபடாத வேறு குற்றங்கள் தொடர்பிலும் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பிலும், பாதுகாப்புப் படையினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இவ்வாறான சம்பவங்களால், பாதுகாப்புப் படையிலும் சமூகத்திலும், தேசிய மற்றும் சர்வதேச ரீதியிலும், நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சர்வதேசத்தின் கூற்றுக்கிணங்க, சட்டம் முறையாகக் கடைபிடிக்கப்படுமாயின், புனர்வாழ்வளித்து விடுவிக்கப்பட்ட அனைவரையும் கைதுசெய்ய நேரிடும். காரணம், அவர்களுக்குப் புனர்வாழ்வளிக்கவோ அல்லது விடுவிக்கவோ, முன்னாள் ஜனாதிபதியால், எந்தவொரு அமைச்சரவைப் பத்திரமோ அல்லது ஒழுங்குப் பத்திரமோ கொண்டுவரப்படவில்லை. அதனால், தேசிய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் சட்டவிரோத அமைப்பாகக் காணப்படும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களைக் கைதுசெய்ய நேரிடும்.

விசேடமாக, புலிகள் இயக்கத்தின் முதன்நிலைத் தலைவர்களான ராம், நகுலன், கே.பி போன்றவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், இன்று சுதந்திரமாக உள்ளனர். அண்மைக் காலமாக, பலர் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர். ஆனால், மேற்கண்ட புலி உறுப்பினர்களுக்கு எதிராக, சட்டம் தன் கடமையைச் செய்யவில்லை. அதனால், சட்டம் அனைவருக்கும் ஒரே விதத்தில் கடமையைச் செய்யுமாயின், இவர்கள் விடயத்திலும் அதையே செய்திருக்க வேண்டும்.

இதேவேளை, சில உள்நாட்டு தமிழ் அரசியல்வாதிகளும் சரி, வெளிநாட்டு அரசியல்வாதிகளும் சரி, எல்ரிரிக்கு தண்டனை வழங்க முடியாதென்றும் ஆனால், பாதுகாப்புப் படையினருக்கு தண்டனை வழங்க வேண்டுமென்றும் கூறுகின்றனர். காணாமற்போனோர் அமைப்புகளை உருவாக்கி, போராட்டங்களை நடத்துகின்றனர்.

உண்மையில், இந்தப் பிரச்சினையை நாம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். இதை வைத்துக்கொண்டு, மேலும் பல தசாப்தங்களை இல்லாது செய்துகொள்ள முடியாது. இந்த நாட்டில், விடுதலைப்புலிகள் மட்டும் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. மாறாக, ஜே.வி.பியினரும், இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் தான். இறுதியில் அரசாங்கத்தால், மன்னிப்பு வழங்கப்பட்டதுடன் அவர்களும், தமது தவறைப் புரிந்து ஏற்றுக்கொண்டனர்.

அந்த வகையில், இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர, ஐந்து யோசனையை முன்வைக்க விரும்புவதாகக் கூறிய அமைச்சர் ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான, சட்ட மா அதிபர் திணைக்களத்தோடு இணைந்த சட்டத்துறை வல்லுநர்களைக் கொண்டு, கைதாகியுள்ள விடுதலைப்புலிகள் பாதுகாப்புப் படையினர் மற்றும் ஏனைய குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை, அவர்களது குற்றங்களின் அடிப்படையில் வகைப்படுத்த nவேண்டும்.

இவ்வாறு வகைப்படுத்திக் கொண்டவர்களில், யுத்த இலக்குகளைக் கொண்டு செயற்பட்ட பாதுகாப்புத் தரப்பினர், படையினருக்கு ஒத்தாசை வழங்கிய தமிழ் அமைப்புகளின் உறுப்பினர்களை, பொது மன்னிப்பின் பேரில் விடுவிக்க வேண்டுமென்பதோடு, அவர்கள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, தற்போது சிறையிலுள்ள விடுதலைப்புலி உறுப்பினர்களில், யுத்த இலக்குகளைக் கொண்டு செயற்பட்டவர்களுக்கும், பொதுமன்னிப்பு வழங்குவதோடு, அவர்கள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

அவர்கள் சுமார் 60 பேர் மாத்திரம் தான் உள்ளனர். இந்தப் 12,600 பேரையும் விட, பாரிய குற்றங்களைச் செய்தவர்கள், சுதந்திரமாகத் தற்போது வெளியில் தான் உள்ளனர். இதனால், பல தசாப்தங்களாக அவர்களைத் தடுத்து வைத்திருப்பதில், எந்தவொரு பயனும் இல்லை. இதனால், பாதுகாப்புப் படையினரோடு சேர்த்து, மேற்படி 60 பேரையும் விடுவிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளர்.

மேலும் , சிறுவர் கடத்தல், சிறுவர் மற்றும் பெண்கள் மீதான வன்புணர்வு, மனிதப் படுகொலை போன்ற குற்றச்செயல்களோடு தொடர்புடையவர்களுக்கு, கடுமையான தண்டனை வழங்கி, அந்தப் பிரச்சினைகளை அத்தோடு முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். இவற்றைப் தொடர்வதால், எந்தப் பயனும் இல்லை.

பொது மன்னிப்பை வழங்கி, இந்த நாட்டை ஒன்றிணைக்க வேண்டிய காலம் கனிந்துள்ளது. இது தொடர்பில், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, தமிழ்க் கட்சி, முஸ்லிம் கட்சி, உள்நாட்டு, வெளிநாட்டுத் தரப்பினர் என, அனைவரும் ஓர் இணக்கப்பாட்டுக்கு வந்து நடவடிக்கை எடுத்ததன் பின்னர், இந்த விவகாரம் தொடர்பில் பேசவேண்டிய தேவை ஏற்படாது.
அதன் பின், தமிழ்க் கூட்டமைப்பு, சிங்களக் கூட்டமைப்பு, முஸ்லிம் கூட்டமைப்பென, யுத்தம் பற்றி எவரும் பேசாமல், நாட்டினதும் நாட்டு மக்களினதும் எதிர்காலத்தை நிர்மாணிப்பதற்கான பணிகளை நோக்கி, நாம் அனைவரும் நகர முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More