Home இலங்கை ஐந்து ஈஸ்வரங்களையும் புனித பிரதேசங்களாக பிரகடனப்படுத்த வேண்டும்

ஐந்து ஈஸ்வரங்களையும் புனித பிரதேசங்களாக பிரகடனப்படுத்த வேண்டும்

by admin
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையில் உள்ள ஐந்து ஈஸ்வரங்களையும் புனித பிரதேசங்களாக பிரகடனப்படுத்த வேண்டும் என வடக்கு மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.  வடக்கு மாகாண சபையின் 133 ஆவது அமர்வு கைதடியில் அமைந்துள்ள மாகாணசபை சபா மண்டபத்தில் ,அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
அதன் போது. உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குறித்த விடயம் தொடர்பாக பிரேரணையொன்றை  முன்மொழிந்தார். குறித்த பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் உள்ள ஐந்து ஈஸ்வரங்களான திருகோணமலை திருகோணேஸ்வரம், மன்னார் திருக்கேதீஸ்வரம், சிலாபம் முன்னேஸ்வரம்,  மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம், யாழ்ப்பாணம் கீரிமலை நகுலேஸ்வரம் ஆகிய ஆலய பிரதேசங்களை புனித பிரதேசங்களாக பிரகடனப்படுத்த வேண்டும் என்ற தேவை எழுந்துள்ளது.
திருகோணமலை சேரூவில பௌத்த ஆலய பிரதேசம் இலங்கை அரசினால் புனித பிரதேசமாக அண்மையில் பிரதமரினால் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.  அண்மையில் மன்னார் மடு மாதா ஆலய பிரதேசத்தை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தமைக்காக இலங்கை அரசுக்கு வடக்கு மாகாண சபை நன்றி தெரிவிக்க விரும்புகிறது.
திருகோணமலை திருக்கோனேஸ்வரம் புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்ற இந்துக்களின் கோரிக்கை கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக புறக்கணிக்கப்பட்டு வருவதையும் சுட்டிக்காட்டுவதோடு மேற்குறிக்கப்பட்ட ஐந்து ஆலயங்களின் பிரதேசங்களை புனித பிரதேசங்களாக பிரகடனப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என அரசிடம் கோரிக்கை முன்வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதனையடுத்து குறித்த பிரேரணை சபையில் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

Spread the love
 
 
      

Related News

1 comment

Logeswaran October 5, 2018 - 12:22 am

நல்ல தீர்மானம்

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More