Home இலங்கை சுவிஸ் குமார் தப்பிய வழக்கு – தலைமறைவானவர் இன்றி வழக்கை தொடரமுடியுமா?

சுவிஸ் குமார் தப்பிய வழக்கு – தலைமறைவானவர் இன்றி வழக்கை தொடரமுடியுமா?

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் பிரதான குற்றவாளியாக காணப்பட்ட சுவிஸ் குமார் தப்பி செல்வதற்கு உதவியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் தலைமறைவாக உள்ள இரண்டாம் சந்தேக நபர் இன்றி வழகக்கினை மேற்கொண்டு நடத்த முடியுமா? என்பது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையை பெறுமாறு குற்றபுலனாய்வு பிரிவினருக்கு ஊர்காவற்துறை நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் பிரதான குற்றவாளியாக காணப்பட்ட சுவிஸ் குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் தப்பி செல்ல உதவினார்கள் எனும் குற்றசாட்டில் அக்கால பகுதியில் வடமாகாண சிரேஸ்ட பிரதி காவற்துறை மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் அக்கால பகுதயில் யாழ்.காவல் நிலையத்தில் கடமையாற்றிய உப காவற்துறை பரிசோதகர் எஸ். ஸ்ரீகஜன் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய குற்றபுலனாய்வு பிரிவினர் தனி ஒரு வழக்கினை ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்தனர்.

அதனை அடுத்து வடமாகாண சிரேஸ்ட பிரதி காவற்துறை மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்கவை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். அதேவேளை உப பொலிஸ் பரிசோதகர் எஸ். ஸ்ரீகஜன் தலைமறைவானார்.

அந்நிலையில் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை குறித்த வழக்கு நீதிவான் அ. ஜூட்சன் முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்டது.

இதன்போது லலித் ஜெயசிங்க சார்பில் சட்டத்தரணிகளான சுபாஸ்கரன் மற்றும் வசீமுள் அக்ரம் ஆகியோருடன் சிரேஸ்ட சட்டத்தரணி துஷித் ஜோன்தாஷன் முன்னிலையாகியிருந்தார். அதே போன்று குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரியும் மன்றில் முன்னிலையாகிருந்தனர்.

அதேவேளை மன்றில் முன்னிலையான குற்றப்புலனாய்வு அதிகாரி, குறித்த வழக்கில் இரண்டாவது சந்தேகநபரை கைது செய்வது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மன்றுக்கு அறிவித்தார்.

இதனையடுத்து குறித்த குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரி மன்றுக்கு தெரிவித்தமை தொடர்பாக ஆட்சேபனை தெரிவித்த சட்டத்தரணி துஷித் ஜோன்தாசன், குறித்த வழக்கு விசாரணை முடிவடைந்து சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவு கடந்த தவனை மன்றுக்கு தெரிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது இரண்டாவது சந்தேகநபரை கைது செய்ய வேண்டும் என கூறுகின்றனர். எனவே இரண்டாவது சந்தேகநபர் இல்லாமல் வழக்கினை நடாத்த முடியுமா என்பது தொடர்பாகவும் மன்று ஆராய வேண்டும் என மன்றில் கோரினார்.

அதையடுத்து, குறித்த வழக்கில் இரண்டாவது சந்தேகநபர் இன்றி வழக்கை நடாத்துவது தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறும் குற்றப்புலனாய்வு பிரிவிக்கு நீதிவான் கட்டளையிட்டார். அத்துடன் வழக்கு விசாரணையை எதிர்வரும் தை மாதம் 30ஆம் திகதி வரை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More