Home இலங்கை குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றவாளி ஆக்கப்பட்டவர்கள் அரசியல் கைதிகளே…

குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றவாளி ஆக்கப்பட்டவர்கள் அரசியல் கைதிகளே…

by admin

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கடிதங்களை எழுதியும், நேரில் கூறியும் களைத்துப் போயிருப்பதாகவும், ஆனால் ஆக்கபூர்வமாக ஒன்றும் இன்றுவரை நடக்கவில்லை எனவும் வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.  தமிழ் அரசியல் கைதிகளின் தொடர்ச்சியான உணவு தவிர்ப்பு போராட்டம் குறித்தும், அவர்களுடைய விடுதலை குறித்தும், அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பு மற்றும் பொது அமைப்புக்கள் நேற்று (11.10.18) முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

இந்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து கூறிய முதலமைச்சர்
“தமிழ் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பாக ஜனாதிபதிக்கு பல கடிதங்களை எழுதியிருக்கின்றேன். பல சந்தர்ப்பங்களில் நேரடியாக பேசியிருக்கின்றேன். மீண்டும் மீண்டும் அதனை செய்து இப்போது நான் களைத்து போயிருக்கின்றேன். ஜனாதிபதியும் நடவடிக்கைகளை எடுப்பதாக மீண்டும் மீண்டும் கூறியபோதும் ஒரு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளாரே தவிர அரசியல் கைதிகள் விடயத்தில் ஒரு முழுமையான தீர்வினை காணவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை “அண்மையில் நீதி அமைச்சர் தலதா அத்துகோரல அரசியல் கைதிகள் இந்த நாட்டில் இல்லை என கூறியிருக்கின்றார். அவருடைய கருத்து மிக தவறானது. இன்று சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் அரசியல் காரணங்களுக்காக பயங்கரவாத தடைச்சட்டம் என்ற பிரத்தியேக சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் ஆக்கப்பட்டுள்ளனர். ஆனால் அந்த சட்டத்தின் கீழ் அவர்களை குற்றவாளிகள் ஆக்க முடியாது. குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களை வைத்து கைதுகள், வழக்குகள் நடாத்தப்பட்டிருக்கின்றன. குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை மட்டும் வைத்து குற்றவாளிகள் ஆக்க இயலாது. இதனை நான் உச்ச நீதிமன்றில் பல காலங்களுக்கு முன்னரே கூறியுள்ளேன். ஆனால் இங்கு அதுதான் நடந்திருக்கின்றது. குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றவாளி ஆக்கப்பட்டிருக்கின்றார்கள். சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார்கள். இது சட்டத்திற்கு புறம்பானது.

இவ்வாறான நிலையில் சட்டம் ஒழுங்கு அமைச்சர் அரசியல் கைதிகளே இல்லை என கூற இயலாது. அரசியல் காரணங்களுக்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். வழக்கமான சட்டத்திற்கு மாறான பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுகள் இடம்பெற்றுள்ளன. சிலர் குற்றவாளிகள் ஆக்கப்பட்டுள்ளனர். ஆகவே இவர்கள் அரசியல் கைதிகள் தான். அதனை எவரும் மறுக்க இயலாது” என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More