Home இலங்கை நீதிமன்றிலிருந்து தப்பி சென்ற சந்தேக நபர் கைது

நீதிமன்றிலிருந்து தப்பி சென்ற சந்தேக நபர் கைது

by admin

குளோபல் தமிழ்ச செய்தியாளர்


காவல்துறையினர் , சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களுக்கு முறையான தகவல்களை வழங்காததால் , சந்தேக நபர் ஒருவர் நீதிமன்றில் இருந்து தப்பி சென்ற நிலையில் மீண்டும் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டார்.

ஹெரோயின் போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் குடும்பஸ்தர் ஒருவரை நேற்று கைது செய்த யாழ்ப்பாண காவல்துறையினர் இன்றைய தினம் நீதிமன்றுக்கு அழைத்து வந்திருந்தனர்.

தம்மால் அழைத்து வரப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றில் சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களிடம் காவல்துறையினர் பாரப்படுத்தி விட்டு மன்றினுள் சென்று இருந்தனர்.

அந்நிலையில் குறித்த சந்தேக நபரின் பிறிதொரு வழக்கினை விசாரணைக்கு எடுக்க கோரி அவரது சட்டத்தரணி நகர்த்தல் பத்திரத்தை தாக்கல் செய்திருந்தார். அதன் அடிப்படையில் அந்த வழக்கு யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி.போல் எடுத்துக்கொள்ளப்பட்ட போது , சந்தேகநபர் அவ்வழக்கில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

அதனை அடுத்து குறித்த நபர் எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாது நீதிமன்றை விட்டு வெளியேறி தப்பி சென்றுள்ளார்.

அதன் பின்னர் ஹெரோயின் உடமையில் வைத்திருந்தமை தொடர்பிலான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேக நபரை மன்றில் அழைத்த போது சந்தேக நபர் நீதிமன்றை விட்டு தப்பி சென்றமை தெரியவந்துள்ளது.

அதன் பின்னர் சுதாகரித்த காவல்துறையினர் குறித்த விடயத்தை நீதிவானின் கவனத்திற்கு கொண்டு சென்று பிடியாணை உத்தரவினை பெற்று சந்தேகநபரை காவல்துறையினர் அவரது வீட்டில் வைத்து கைது செய்து மீண்டும் மாலை நீதிமன்றில் முற்படுத்தினார்கள்.

அதன் போது காவல்துறையினர் குறித்த சந்தேகபர் 21 கிராம் ஹெரோயின் போதை பொருளை உடமையில் வைத்திருக்கையில் அரியாலை பூம்புகார் பகுதியில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்ததாகவும் , அவரிடம் மீட்கபட்ட போதை பொருளின் பெறுமதி சுமார் 2 இலட்ச ரூபாய் எனவும் தெரிவித்தனர்.

அத்துடன் குறித்த சந்தேக நபரும் , அவருடைய மூத்த சகோதரனும் ஹெரோயின் போதை பொருள் விற்பனை செய்பவர்கள் எனவும் , அவர்களின் பின்னணியில் உள்ளவர்களை கைது செய்த ஏதுவாக குறித்த சந்தேக நபரை 14 நாட்களுக்கு பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என மன்றில் விண்ணப்பம் செய்தனர்.

காவல்துறையினரின் விண்ணப்பத்தை ஆராய்ந்த நீதிவான் 7 நாட்களுக்கு சந்தேகநபரை தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More