இலங்கை பிரதான செய்திகள்

காணி – காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படாது – மகாநாயக்கர்களிடம் ஐதேக :

மாகாண சபைகளுக்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரம் வழங்கப்படாது என மல்வத்தை, அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நேற்று கண்டியில், மல்வத்தை, அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து புதிய அரசியலமைப்புக்கான யோசனைகள் தொடர்பில் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது பாராளுமன்றத்தில், அரசியலமைப்புக்கான வரைவை அரசாங்கம் சமர்ப்பிக்கவில்லை என்றும்,வழிநடத்தல் குழுவின் யோசனைகள் தொடர்பான அறிக்கையே விவாதிப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி விளக்கமளித்துள்ளது.

அத்துடன் எதிர்க்கட்சியினர் கூறுவது போன்று இது அரசியலமைப்புக்கான வரைவு அல்ல என அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல மகாநாயக்கர்களிடம் தெரிவித்துள்ள அதேவேளை புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கான முன்னுரிமை பாதுகாக்கப்படும் என அமைச்சர் தயா கமகே உறுதியளித்துள்ளார்.

மேலும், புதிய அரசியலமைப்பில் மாகாணசபைகளுக்கு காணி, காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படாது என அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் மகாநாயக்கர்களிடம் வாக்குறுதியளித்துள்ளார்.

எனினும் தற்போது, புதிய அரசியல் அமைப்பை கொண்டுவருவதைவிட தேர்தலை நடத்துவதே நல்லது என்று மல்வத்தை பீடத்தின் மகாநாயக்கரான வண. திப்பொட்டுவாவே சிறி சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அரசியலமைப்பு உருவாக்கத்துக்குப் பின்னால் இருப்பவர்களுக்கு நாட்டை பிளவுபடுத்தும் எண்ணம் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கரான வண. வரகாகொட சிறி ஞானரத்ன மகாநாயக்க தேரரையும் ஐதேக குழுவினர் சந்தித்தனர். இந்தச் சந்திப்புத் தொடர்பாக அஸ்கிரிய பீடம் ஊடகங்களுக்கு எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. இதில், அமைச்சர்கள் லக்கி ஜயவர்த்தன, பாலித ரங்கே பண்டார, ஐதேக மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திசநாயக்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.