Home இலங்கை வழிப்பறி – நகைக் கொள்ளையுடன் தொடர்பு – கைதுசெய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல்

வழிப்பறி – நகைக் கொள்ளையுடன் தொடர்பு – கைதுசெய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வந்த வழிப்பறி உள்ளிட்ட நகைக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவருக்கு எதிராக 11 வழக்குகளை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் காவல்துறையினர் தாக்கல் செய்திருந்த நிலையில், நீதிமன்றில் சில சாட்சிகள் நேற்று அடையாளம் காட்டிதனால் அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டது.

யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல இடங்களிலும் அண்மைய நாள்களில் வழிப்பறிகளும் நகைக் கொள்ளைகளும் இடம்பெற்று வந்த நிலையில் இந்தச் சம்பவங்கள் தொடர்பில் யாழ்ப்பாண காவல் நிலைய குற்றத்தடுப்பபு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்திருந்தனர்.

இந்நிலையில் நகைக் கொள்ளைகளுடன் தொடர்புடைய ஒருவரையும் அந்த நகைகளைக் கொள்வனவு செய்த நகை வேலை செய்பவரையும் கடந்த வியாழக்கிழமை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றும் களவாடப்பட்ட, கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் என சந்தேகிக்கப்படும் சுமார் 8 இலட்சம் ரூபா பெறுமதியான பதினைந்து பவுண் நகைகளைம் மீட்கப்பட்டிருந்தனர்.

விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் இருவரையும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் காவல்துறையினர் முற்படுத்தியதுடன் 11 கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் தனித் தனியே வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.

நகைக் கடை உரிமையாளர் சார்பில் முன்னிலையான சிரேஸ்ட சட்டத்தரணி பிணை விண்ணப்பத்தை மன்றில் முன்வைத்தார். எனினும் வழக்கு விசாரணைகளின் போது சாட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நகைக் கடை உரிமையாளருக்கு பிணை வழங்க மறுத்த யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன், சந்தேகநபர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

அத்துடன், கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை அடையாள அணிவகுப்புக்குட்படுத்த முறைப்பாட்டாளர்களை மன்றில் முன்னிலையாகுமாறும் நீதிமன்று உத்தரவிட்டது.

இதனடிப்படையில் சந்தேகநபர்கள் நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி.போல் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர். முதலாவது சந்தேகநபர் அடையாள அணி வகுப்புக்கு முற்படுத்தப்பட்டார். 11 சாட்சிகளில் சிலர் சந்தேகநபரை அடையாளம் காட்டினர்.அதனை அடுத்து குற்றம் சாட்டப்பட்ட நபரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து நகை வேலை செய்வரான சந்தேகநபர் சார்பில் சட்டத்தரணியால் மன்றில் பிணை விண்ணப்பம் செய்யப்பட்டது. அந்த விண்ணப்பத்தை ஆராய்ந்த நீதிவான், 11 வழக்குகளிலும் தலா ஒரு லட்சம் பெறுமதியான 11 பேரின் ஆள்பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More