Home இலங்கை சுதந்திர தினத்திலாவது தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் :

சுதந்திர தினத்திலாவது தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் :

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

தமிழ் மக்களின் உரிமையையும்,வேண்டுகோளையும் அரசு மதித்து பல ஆண்டுகளாக அடிமைகளாக உரிமை இழந்து சிறைவாசம் அனுபவித்து வரும் தமிழ் அரசியல் கைதிகளை இலங்கையின் சுதந்திர தினத்திலாவது விடுதலை செய்யப்பட வேண்டும் என மன்னார் பிரஜைகள் குழு அரசிடம் வேண்டு கோள் விடுத்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக மன்னார் பிரஜைகள் குழு இன்று (01) விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்து தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்தை அங்கீகரிக்குமாறு தமிழ் மக்களின் அரசியல் கைதிகளின் குடும்ப உறவுகள், உரிமைசார் போராட்டம் முன்னெடுப்பாளர்கள் எனவும் அனைத்து தமிழ் மக்கள் சார்பாக மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு அரசை மிகவும் வினையமாக கேட்டு;க்கொள்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளது.

நீதி, உண்மை, மனித உரிமைகள், உரிமை மீறல், உறவுகளைத் தேடல், புதை குழிகளை தோண்டுதல்,எலும்புகளை இனம் காணல் இப்படியாக தமிழரின் உரிமைப் போராட்ட அலகுகள் பரவலாக விரிந்து செல்கின்ற இந்த கால கட்டத்தில் தமிழ் அரசியல் கைதிகளின் உரிமைகள் மறுக்கப்பட்டு அவர்களது பொன்னான வாழ்வு சிறையில் வீணடிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கையில் பொருளின்றி, பிடிப்பின்றி, குடும்பம், பிள்ளைகள், உறவுகள் என்ற உணர்வின்றி, நடைப்பிணங்களாக நான்கு சுவருக்குள் அடிமைகளாக எந்த வித உரிமையும் இன்றி உயிர் வாழும் தமிழ் அரசியல் கைதிகளை இந்த வருட சுதந்திர தினத்திலாவது அவர்களை விடுதலை செய்து சுதந்திரமாக நடமாட அனுமதிக்க வேண்டும்.

அவர்களின் இல்லங்களிலும், தமிழ் மக்களின் உள்ளங்களிலும் ஒளியேற்றுமாறு நாட்டுத்தலைவரையும்,நல்லாட்சி அரசையும், நீதித்துறையையும் ஆணித்தரமாக கேட்டு நிற்கின்றோம்.

நாட்டின் நீண்டகால போராட்ட வரலாற்றில் தொடர்ந்து பல்வேறு நிலைகளில் மக்களின் உரிமைக்காக சகல வேறு பாடுகளையும் தாண்டி பயணித்துக் கொண்டிருக்கும் மன்னார் பிரஜைகள் குழு இந்த வேண்டுகோளை தமிழ் மக்கள், அரசியல் கைதிகள் இவர்கள் சார்பாக அரசையும், நாட்டுத்தலைவரையும், நீதித் துறைசார் வல்லுநர்களையும், நீதி வழங்கி தமிழரின் உரிமை வாழ்வை கௌரவிக்குமாறு வற்புறுத்தி நிற்கின்றது.  தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம்.

அவர்களின் நல் வாழ்க்கைக்காக, குடும்பங்களின் ஓருங்கிணைப்புக்காக, உரிமை வாழ்வுக்காக அவர்களின் விடுதலைக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More