தாம் அடைக்கலம் வழங்கி வைத்திருந்த காதல் திருமண ஜோடிகளை, தவறாக நடத்தியதாகவும் அவர்களிடமிருந்து பணம் பறித்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டு லவ் கமாண்டோஸ் எனத் தெரிவிக்கப்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் தலைவர் சஞ்சாய் சச்தேவ் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி பெண்கள் ஆணையகம் வழங்கிய முறைப்பாட்டின் பேரில், சஞ்சாய் சச்தேவ் கைது செய்யப்பட்டதுடன் அவர் அடைக்கலம் வழங்கிய 4 ஜோடிகள் மீட்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களின் சாதி மற்றும் மதத்திற்கு வெளியே திருமணம் செய்து கொண்டு, குடும்பத்தினரின் எதிர்ப்பை சம்பாதித்த ஜோடிகளுக்கு பாதுகாப்பான புகலிடம் அளிப்பதற்காக என சச்தேவ்வினால் இந்த லவ் கமாண்டோஸ் குழு உருவாக்கிப்பட்டது. எனினும் தங்களின் விருப்பத்திற்கு மாறாக தாங்கள் தங்கவைக்கப்பட்டிருப்பதாக சில ஜோடிகள் குற்றம்சுமத்தியுள்ளனர்.
இந்தியாவில், ஒரே கிரமத்தில் சாதி, மதம் மீறிய காதல், குடும்பங்களாலும், கிராம பஞ்சாயத்துகளாலும் தடுக்கப்படுகின்ற நிலையில் இந்த பாரம்பரியத்திற்கு எதிராக திருமணம் செய்துகொள்ளும் ஜோடிகள் பல வேளைகளில் ஆணவக் கொலைகள் செய்யப்படும் நிலைமையும் உள்ளதனால் இத்தகைய ஜோடிகளுக்கு நாடு முழுவதும் புகலிடங்கள் அமைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
Add Comment