Home இலங்கை மகிந்தவும் கோத்தாபயவுமே பிரகீத்தைக் கடத்தினர் என்பதை எந்த இடத்திலும் கூறுவேன்!

மகிந்தவும் கோத்தாபயவுமே பிரகீத்தைக் கடத்தினர் என்பதை எந்த இடத்திலும் கூறுவேன்!

by admin

சந்தியா எக்னெலிகொட..

பிரகீத்தைக் கடத்தியவர்கள் மகிந்தவும், கோத்தாபயவுமே என்பதை எந்த இடத்திலும், எந்தத் தருணத்திலும் நான் உறுதியாக கூறுவேன் என அவரது மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்தார்.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் கடத்தலுக்குக் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஞானசாரரின் விடுதலை குறித்து தெளிவுபடுத்துமாறு வலியுறுத்தி சந்தியா நேற்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதிக்குக் கடிதமொன்றைக் கையளித்தார். அதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

சுதந்திர தினத்தில் ஞானசாரரை, ஜனாதிபதி விடுவிக்கவுள்ளார் என ஊடகங்களில் பரவலாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன. இது தொடர்பாகச் சட்டமா அதிபர், ஜனாதிபதி, புத்தசாசன அமைச்சர் ஆகியோருக்கு அறிவித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிரகீத் வழக்கில் சாட்சியாளர் மட்டுமின்றிப் பாதிக்கப்பட்டவரும் தானே எனக் குறிப்பிட்ட அவர் சாட்சியாளர்களையும், பாதிக்கப்பட்டவர்களையும் பாதுகாக்கும் நடவடிக்கையின் கீழ் தனக்கு இதுபற்றித் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதமொன்றைக் கையளித்துள்ளதாகவும் அதன் பிரதிகளை நீதி அமைச்சு, சாட்சியாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கும் அலுவலக அதிகாரிகள் ஆகியோருக்கு வழங்கியுள்ளதாகவும் கூறினார்.

பிரகீத்தைக் கிரிதலவுக்குக் கடத்திச் சென்று அப்போது ஜனாதிபதி வேட்பாளராக இருந்த சரத் பொன்சேகாவுடனான தொடர்பு என்னவென்று வினவியுள்ளதாகவும் தேர்தல் பிரசாரம் தொடர்பாக வினவியுள்ளனர். இதனடிப்படையில் மஹிந்த மற்றும் கோத்தாபய ஆகியோரே பிரகீத்தைக் கடத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதும் அவரது கடத்தலுக்கு ஒரு காரணம் என்றும் இதனால், தமக்கு ஆதரவான ஊடகவியலாளர்களைப் பயன்படுத்திப் போலியான செய்திகளை பரப்பவேண்டாம் என மஹிந்த மற்றும் கோத்தாபயவைத் தாழ்மையுடன் கோருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, பிரகீத்தைக் கடத்தியவர்கள் மஹிந்தவும், கோத்தாபயவுமே என்பதை எந்த இடத்திலும், எந்தத் தருணத்திலும் உறுதியாகக் கூறு தயாராக இருப்பதாகவும் சந்தியா எக்னெலிகொட மேலும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More