இலங்கை பிரதான செய்திகள்

இறுதிப் போரில் இராணுவத்தினரும் போர்க்குற்றங்களைப் புரிந்தனர்!

இலங்கையின் இறுதிக்கட்டப் போரின்போது இராணுவத்தினர் போர்க்குற்றங்களைப் புரிந்துள்ளனர் என்பதை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் ஏற்றுக்கொண்டுள்ளார். அத்துடன் இறுதிப் போரின்போது இரு தரப்புக்களும் போர்க்குற்றங்களை இழைத்துள்ளார்கள் என்று சந்திரிகா குறிப்பிட்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இதே கருத்தை வெளியிட்டிருந்தார். போர் நிறைவடைந்த பின்னர் ஒரு தரப்பு மற்றைய தரப்பு மீது குற்றம் சுமத்தி வருவதாகவும் சந்திரிக்கா குறிப்பிட்டுள்ளார்.

போர்க் குற்றச்சாட்டுக்களை இராணுவத்தினர் இழைத்துள்ளார்கள் என்பதை முன்னாள் இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவே ஒத்துக் கொண்டுள்ளதாக கூறிய சந்திரிகா, போர் வெற்றிக்குப் பிரதான பங்கு அவருடையது. எந்த விசாரணைக்கும் தயார் என்று கூறியதையும் நினைவுபடுத்தியுள்ளார்.

எனினும் ராஜபக்ச குடும்பத்தினர் போர் வெற்றியை தமக்காகக் கொண்டாடுவதாகவும் நாட்டில் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டாலும், சர்வதேச சமூகத்தினால், சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உண்மை நிலையைக் கண்டறியவேண்டும் என்றும் தெரிவித்தார்.

அதற்காக போர் வெற்றியை பெற்றுத் தந்த இராணுவத்தினரை நீதிமன்றக் கூண்டில் ஏற்றுமாறு சொல்லவில்லை என்றும் எனினும் உயிரிழந்த விடுதலைப் புலிப் போராளிகளுக்கு புத்துயிர் கொடுக்குமாறும் சொல்லவில்லை என்றும் அவர் கூறினார்.

இரு தரப்புச் சண்டையிலும் பாதிக்கப்பட்டவர்கள் மக்கள் என்ற வகையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கவேண்டும் என்றும் நாட்டின் நலன் கருதி – நாட்டின் ஒற்றுமை கருதி இதனை செய்வது அவசியம் என்றும் அவர் சந்திரிகா மேலும் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

1 Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  • தமிழர்களின் உரிமைப் போராட்டத்தையும் சுதந்திரப் போராட்டத்தையும் பயங்கரவாதம் என்றும் அது இல்லாதொழிக்கப்பட்டது என்றும் தமிழ் இனத்தை அழிப்பதில் பெரும் பங்காற்றிய சந்திரிகா கூறுகின்றார்.

    கொடூர குற்றங்களை செய்த ஆயுதப் படைகளை நீதிமன்றக் கூண்டில் ஏற்றாது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கவேண்டும் என்றும் சொல்லுகின்றார்.

    ஐ.நா. மனித உரிமைகள் பேரவையையும் மற்றும் தமிழர்களையும் ஏமாற்ற மற்றும் தமிழ் இனத்தை அழித்தவர்களை பாதுகாக்க கூறியது போல் தென்படுகின்றது.

    இத்துடன் கொலைகாரன் ராஜபக்ச குடும்பத்தினரை பழிவாங்கும் நோக்குடனும் செயல்படுவது போல் தெரிகிறது.