Home இலங்கை தனித்தனியாக போராடி களைத்து விட்டோம் – கிளிநொச்சி போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குங்கள்…

தனித்தனியாக போராடி களைத்து விட்டோம் – கிளிநொச்சி போராட்டத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குங்கள்…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் உங்களுக்கும் உறவுகள்.நாங்கள் தனித்தனியாக போராடி களைத்து விட்டோம்.எனவே அனைவரும் இணைந்து கிளிநொச்சியில் எதிர்வரும் 25 ஆம் திகதி வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுக்கவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட மக்களும், வர்த்தகர்களும் பூரண ஆதரவை வழங்க வேண்டும் என மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதையச்சந்திரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,

-மன்னார் மாவட்டம் உள்ளடங்களாக வடக்கு-கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இணைந்து எதிர்வரும் திங்கட்கிழமை (25) கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளோம்.

குறித்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கு மன்னார் மாவட்ட மக்களும்,வர்த்தகர்கள்,அரசியல் பிரதி நிதிகள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

இத்தனை வருடங்களாக நாங்கள் தனித்தனியாகவே ஆர்ப்பாட்டங்களையும்,போராட்டங்களையும் முன்னெடுத்து வந்தோம். எனினும் தற்போது பொது அமைப்புக்கள், மக்கள், வர்த்தகர்கள்,அரசியல் பிரதி நிதிகள் அனைவரிடமும் நாங்கள் கேட்டு நிற்கின்றறோம் காணாமல் போனவர்கள் எங்களுடைய உறவுகள் மட்டும் இல்லை.

காணாமல் போன உறவுகள் உங்களுக்கும் உறவுகள்.தனித்தனியாக போராடி நாங்கள் களைத்து விட்டோம்.இன்று இரண்டு வருடங்களாக வவுனியா,கிளிநொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களில் கொட்டில் அமைத்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.அவர்களுக்கு ஆதரவாக மன்னார் மாவட்டம் சார்பாக நாங்களும் இணைந்து கொண்டிருந்தோம்.

இந்த நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தின் இரண்டு வருட நிறைவையும்,ஜெனீவா மனித உரிமைகள் மாநாடு இடம் பெற உள்ள நிலையில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து கால அவகாசம் வழங்கி இருந்தனர்.
எனினும் குறித்த இரண்டு வருடங்களுக்குள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் எங்களுக்கு எந்த வித தகவல்களும் கிடைக்கவில்லை.

நாங்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.தொடர்ந்தும் கால அவகாசம் கொடுக்கப்போகின்றார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது.எனவே அரசியல் பிரதி நிதிகள்,மனித உரிமைகள் அமைப்புக்கள் இணைந்து கால அவகாசத்தை வழங்குவதை நிறுத்துங்கள்.

-காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்களின் உறவுகள்.ஒரு தாய் தனது பிள்ளையை தொலைத்து விட்டு படுகின்ற கஸ்டங்கள் எங்களை போன்ற உறவுகளுக்கே தெரியும்.

-எனவே மன்னார் மவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்களை மூடி எதிர்வரும் 25 ஆம் திகதி கிளிநொச்சியில் இடம் பெறவுள்ள கவனயீர்ப்பு போராட்டத்திற்கு பூரண ஆதரவை வழங்க வேண்டும்.

மேலும் மன்னார் மனித புதைகுழியின் மனித எச்சங்களின் அறிக்கையில் தாமதம் ஏற்பட்டுள்ளமை சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது. கடந்த புதன் கிழமை பரிசோதனை அறிக்கை வெளியிடுவதாக தெரிவிக்கப்பட்ட போதும் வெளியிடப்படவில்லை.எனினும் குறித்த அறிக்கை அனுப்பி வைக்க தற்போது கால அவகாசம் கோரியுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த மனித புதைகுழியில் தற்போது வரை தோண்ட தோண்ட மனித எலும்புக்கூடுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.காலம் கடங்தாலும் அவர்களும் எமது உறவுகள்.குறித்த எலும்புக்கூடுகளின் பரிசோதனை தொடர்பில் காலம் தாழ்த்தாது உரிய பதில் கூற வேண்டும்.

காலம் கடந்து செல்கின்ற போது மளுங்கடிக்கப்படும் நிலை ஏற்படும்.என அவர் மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More