Home இலங்கை சிறையிலுள்ள மகனுக்கு கஞ்சா கொண்டு சென்ற தாய்க்கு விளக்கமறியல்

சிறையிலுள்ள மகனுக்கு கஞ்சா கொண்டு சென்ற தாய்க்கு விளக்கமறியல்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தனது மகனுக்கு வழங்க எனக் கொண்டு சென்ற உணவுப் பொதியில் கஞ்சா போதைப்பொருளை மறைத்துக் கொண்டு சென்றார் என்ற குற்றச்சாட்டில் தாயார் ஒருவர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரை சந்திக்க அவரது தாயாருக்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் அவரிடம் இருந்த இரண்டு உணவுப்பொதிகளைச் சோதனையிட்ட போது ஒன்றிலிருந்து சுமார் 100 கிராம் கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் காவல்துறையினரிடம்; ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவரை காவல்துறையினர் கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தினர்.

‘சந்தேகநபர் தனது மகனுக்கு சாப்பாடு எடுத்துச் சென்றார். அந்தவேளை, அங்கு வந்த ஒருவர் தனது உறவினர் தடுப்பில் இருப்பதாகவும் அவருக்கு சாப்பாடு வழங்கவேண்டும் தன்னிடம் அடையாள அட்டையில்லாதால் அனுமதி கிடைக்காது என்று தெரிவித்ததனால் தனது உறவினருக்கான உணவுப் பொதியையும் சந்தேகநபரிடம் வழங்கி அதனை சேர்ப்பிக்குமாறு கேட்டார்.

அதனால் அவரது நிலையறிந்து சந்தேகநபர் அந்த உணவுப் பொதியையும் எடுத்துச் சென்ற போதே அதற்குள் கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டு சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டார். எனவே சந்தேகநபரை பிணையில் விடுவிக்கவேண்டும்’ என்று வயோதிப தாயார் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சமர்ப்பணம் செய்தார்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர்; விசாரணைகளை முடிவுறுத்த சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும் எனச் சுட்டிக்காட்டிய மன்று, சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More