Home இந்தியா திரைப்பட இயக்குனர் மகேந்திரன் காலமானார்…

திரைப்பட இயக்குனர் மகேந்திரன் காலமானார்…

by admin

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் மகேந்திரன் காலமானார். 79 வயதான அவர் சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மகேந்திரன், சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் அவரது ருவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

கதை, வசனம் எழுத எம்.ஜி.ஆரால் திரைத்துறைக்கு அழைத்துவரப்பட்ட மகேந்திரன் முள்ளும் மலரும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். உதிரிப்பூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, மெட்டி, நண்டு, ஆகிய படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் அரவிந்த் சாமி நடிப்பில் உருவான சாசனம்.

புகழ்பெற்ற கதைகளை தனது திரைப்படம் மூலம் மற்றொரு புதிய தளத்திற்கு கொண்டு சென்ற மகேந்திரன், பெரும் கவனம் பெறாத கதைகளையும் தனது திரைமொழி மூலம் மிகச் சிறந்த படைப்பாக மாற்றியுள்ளார்.

தனது படங்கள் மூலம் பல்வேறு நடிகர்களை திரைத்துறைக்கு அறிமுகப்படுத்திய மகேந்திரன் சமீபகாலமாக நடிகராகவும் வலம் வந்துகொண்டிருந்தார். தெறி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த அவர் பேட்ட படத்தில் ரஜினிகாந்துடன் நடித்திருந்தார். மேலும் விஜய்சேதுபதியுடன் சீதக்காதி படத்தில் நீதிபதி கதாபாத்திரத்திலும் நடித்தார்.

சிறுநீரக பிரச்சினை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த மகேந்திரன் கடந்த வாரம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயது மூப்பு காரணமாக அவரது உடல் டயாலசிஸ் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. இந்நிலையில் இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. தமிழ் சினிமாவின் மூத்த கலைஞனுக்கு திரையுலகம் தனது அஞ்சலியை செலுத்திவருகிறது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More