Home இலங்கை வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் ஒருதலைப் பட்சமான செயற்பாட்டால் மக்கள் பாதிப்பு

வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் ஒருதலைப் பட்சமான செயற்பாட்டால் மக்கள் பாதிப்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


கிளிநொச்சி- பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஜெயபுரம் பகுதி மக்களின் விவசாய காணிகளை துப்பரவு செய்து விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள வனவள பாதுகாப்பு திணைக்களம் தொடர்ச்சியாக  விளைவிப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி ஜெயபுர மக்கள் 1983ஆம் ஆண்டு குறித்த பகுதியில் குடியேற்றப்பட்ட போது அவர்களுடைய வாழ்வாதர செயற்பாடுகளுக்காக அரச காணிகள் வயல் நிலங்களாக வழங்கப்பட்டது.

சில காலங்கள் காணிகளை துப்பரவு செய்து பயிற்செய்கைகளை மேற்கொண்ட போதும் யுத்தம் காரணமாக 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்தியா நோக்கி இடம் பெயர்ந்த காரணத்தினால் தொடர்ச்சியாக அக் காணியில் பயிர்செய்கை செய்ய முடியாத நிலையில் குறித்த காணிகள் பராமரிப்பு இன்றி கைவிடப்பட்டிருந்தது.

அதே நேரத்தில் 2008 ஆம் 2009 ஆம் ஆண்டுகளில் இடம் பெற்ற இறுதி யுத்தத்தின் போது மீண்டும் அப்பகுதியில் இருந்த அனைத்து மக்களும் இடம் பெயர்ந்து வவுனியா நலன்புரி முகாமில் தஞ்சம் அடைந்தனர்.

அதன் பின்னர் 2010 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுற்ற நிலையில் மீண்டும் குறித்த மக்கள் ஜெயபுரம் பகுதியில் மீள் குடியேற்றப்பட்டனர்.

அதன் பின்னர் விவசாய நடவடிக்கைகளுக்காக அரசங்கத்தினால் வழங்கப்பட்ட காணிகளை துப்பரவு செய்வதற்கு முற்பட்ட போது குறித்த காணி அமைந்த பகுதிகளில் கண்ணி வெடிகள் காணப்படுவதனால் குறித்த காணிகளை வழங்க முடியாது என இராணுவம் தெரிவித்தை அடுத்து மக்கள் அக்காணிகள் துப்பரவு செய்யும் பணிகளை இடை நிறுத்தியிருந்தனர்.

அதன் பின்னர் கண்ணி வெடிகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு காணிகள் அனைத்து பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.
இதனை அடுத்து கடந்த வருடம் மீள் குடியேற்றம் மற்றும் புணர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி அமைச்சர் சுவாமிநாதன் அவர்களால் குறித்த காணிகள் அனைத்தும் துப்பரவு செய்வதற்காக 20 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் இடம் பெற்ற நிலையில் வனவள திணைக்கள அதிகாரிகளினால் குறித்த நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டதுடன் குறித்த காணியானது வனவள திணைக்களத்தின் எல்லைக்குள் காணப்படுவதாகவும் எனவே குறித்த காணியை சுத்தப்படுத்தவோ விவசாய நடவடிக்கைகளுக்காகவோ பயன்படுத்த முடியாது என தெரிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து தங்களுக்கு விவசாய செயற்பாடுகளுக்கு வழங்கப்பட்ட குறித்த காணிகளில் தங்களால் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள வனவள திணைக்களம் இடையூராக இருப்பதாகவும் எனவே குறித்த காணிகளை தமக்கு பெற்று தர கோரி மாவட்ட அரசாங்க அதிபர் , பிரதேச செயலாளர் உற்பட்ட பல்வேறு அரச தரப்பினறுக்கு மகஜர் கோரிக்கை அடங்கிய கடிதங்களை வழங்கி வைத்துள்ளனர்.

இருப்பினும் தற்போது குறித்த மக்களுக்கு சொந்தமான காணிகளில் வனவள திணைக்கள அதிகாரிகளின் அனுமதியுடன் வேறு பிரதேச மக்கள் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்வதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

எனவே ஒரு தலைப்பட்சமாக வனவள திணைக்களம் நடந்து கொள்வதாகவும் தங்களுக்கு உரிய காணிகளை விரைவில் பெற்று தருமாறும் ஜெயபுர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதே நேரத்தில் குறித்த மக்களின் காணிகள் வழங்கும் விடயத்தில் அரச திணைக்களங்கள் விரைவில் நடவடிக்களை மேற்கொள்ள வேண்டும் என கோரி மனித உரிமை ஆணைக்குழுவில் யாழ் பிராந்திய அலுவலகத்தில் ஜெயபுர மக்கள் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளதாக அந்த மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More