Home இலங்கை மண்டைதீவில் கடற்படை முகாம் அமைப்பதற்காக காணி சுவீகரிக்க காணி அளவீடு

மண்டைதீவில் கடற்படை முகாம் அமைப்பதற்காக காணி சுவீகரிக்க காணி அளவீடு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மண்டைதீவில் கடற்படை முகாம் அமைப்பதற்காக காணி சுவீகரிக்க காணி அளவீடு செய்யும் பணிகள் நாளைய தினம் வியாழக்கிழமை மேற்கொள்ளப்படும் என நிலஅளவை திணைக்களம் அறிவித்துள்ளது.

யாழ்.வேலணை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள கடற்படை முகாமுக்கு நிரந்தரமாக காணியினை சுவீகரிக்கும் நோக்குடன் காணி அளவீடு மேற்கொள்ளப்படவுள்ளது.

குறித்த காணிகள் 11 தனியாருக்கு சொந்தமான 18 ஏக்கர் 1 நூட் 10 பேர்ச்சஸ் காணிகளை கையகப்படுத்தவே நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

காணி சுவீகரிப்பு சட்டத்தின் கீழ் நாளைய தினம் 11ஆம் திகதி காலை 9 மணி தொடக்கம் அடுத்துவரும் நாட்களில் குறித்த காணிகளை சுவீகரிக்கும் நோக்குடன் அளவீடு செய்வதற்காக காணிகளுக்குள் பிரவேசிக்க வுள்ளேன் என அதன் காணி உரிமையார்களுக்கு அரச நிலஅளவையாளர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

அதேவேளை கடந்த திங்கட்கிழமை யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் , இந்த காணிகள் சுவீகரிப்பு தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டது.
அதன் போது ஒருங்கிணைப்பு குழுவின் இணை தலைவரும் , பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா , எமக்கு தெரியாமல் ஒரு காணியையும் கையகப்படுத்த முடியாது. ஒரு துண்டு காணியை கூட பாதுகாப்பு தரப்பினருக்கு விட்டுக்கொடுக்க முடியாது. அது தொடர்பில் உரிய தரப்பினருடன் பேசுகிறேன் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related Articles

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.