Home இலங்கை யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிநீக்கப்பட்டுள்ளார்

யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிநீக்கப்பட்டுள்ளார்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இ. விக்னேஸ்வரனை அந்தப் பதவியிலிருந்து ஜனாதிபதி விலக்கியிருக்கிறார்.

கடந்த மாதம் 30 ஆம் திகதியில் இருந்து அமலுக்கு வரும் வகையில், 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்துக்கு அமைவாக ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்களைப் பாவித்து, பேராசிரியர் இ. விக்னேஸ்வரன் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் துணைவேந்தர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கடிதம் மூலம் அறிவித்துள்ளார். எனினும் பேராசிரியர் இ. விக்னேஸ்வரனைப் பதவியில் இருந்து நீக்கியமைக்கான காரணங்கள் எதுவும் கடிதத்தில் குறிப்பிடப்படவில்லை.

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இ. வின்னேஸ்வரனுக்கு முகவரியிடப்பட்டு, கடந்த மாதம் 30 ஆம் திகதி கடிதம் தயாரிக்கப்பட்டிருக்கின்ற போதிலும், நேற்று மே மாதம் 5 ஆம் திகதி பின்னிரவே தொலைநகல் மூலம் யாழ். பல்கலைக்கழகத்துக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவில் அதிக வாக்குகளைப் பெற்று முதலாவதாகப் பரிந்துரைக்கப்பட்ட பேராசிரியர் எஸ். சறீசற்குணராஜா அல்லது யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் செல்வி வசந்தி அரசரட்ணம் ஆகிய இருவரில் ஒருவரை யாழ்ப்பாண புதிய துணைவேந்தர் தெரிவு செய்யப்படும் வரை பல்கலைக்கழகத்தின் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தராக நியமிப்பதற்கான பரசீலனைகள் இடம்பெற்றுவருவதாக அறியவருகின்றது.

இதேவேளை, காரணமேதுமின்றி பேராசிரியர் இ. விக்னேஸ்வரன் துணைவேந்தர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பான அறிவித்தலை மீளப் பெறச் செய்யும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#ViceChancellor #jaffnaunversity #vickneswaran

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More