Home இலங்கை கௌதாரிமுனையை காப்பாற்றுமாறு பொது மக்கள் அவசர கோரிக்கை

கௌதாரிமுனையை காப்பாற்றுமாறு பொது மக்கள் அவசர கோரிக்கை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவில் உள்ள கௌதாரிமுனை பிரதேசத்தில் மீண்டும் மணல் அகழ்வு இடம்பெறுவதனால் கிராமத்தை அழிவிலிருந்து காப்பாற்றுமாறு பொது மக்கள் அவசர கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

பூநகரியில் அமைந்துள்ள கௌதாரிமுனை பிரதேசம் இயற்கை எழில் மிகுந்த பிரதேசம். இங்குள்ள மணல் மேடுகள் மக்களை கவரக் கூடிய சுற்றுலாத்துறைக்கு உரியதாக காணப்படுகிறது. வடக்கில் உள்ள சுற்றுலாப் பிரதேசங்களில் ஒன்றாக காணப்படும் கௌதாரிமுனையின் சிறப்பே அங்குள்ள மணல் மேடுகள் ஆகும்.

ஆனால் 2009 க்கு பின் அங்குள்ள மணல் மேடுகளிலிருந்து மணல் அகழப்பட்டு வெளியிடங்களுக்கு பெருமளவில் எடுத்துச் செல்லப்பட்டு வந்த நிலையில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் தலைமையில் கடந்த வருடம் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஒன்றில் கௌதாரி முனையிலிருந்து மணல் அகழ்வது முற்றாக தடைச்செய்யப்பட்டிருந்து.

ஆனால் கடந்த சில மாதங்களுக்காக மீண்டும் கௌதாரிமுனையிலிருந்து மணல் அகழப்பட்டு வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது என பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். கிராமத்தில் உள்ள பொது மக்கள் தங்களின் உறுதி காணிகளில் இருந்து கூட மணல் அகழ்வது தடை செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் மணல் அகழ்வு இடம்பெறுகிறது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சகோதரின் பெயரில் அனுமதி பெறப்பட்டு மணல் அகழ்வு இடம்பெறுகிறது எனவும் நாளாந்தம் ரிப்பர்களி்ல் அதிகளவு மணல் எடுத்துச் செல்லப்படுகிறது எனவும் கவலை தெரிவிக்கும் பொது மக்கள் இதற்கான அனுமதியை மத்திய சுற்றுச் சூழல் அமைச்சு வழங்கியிருக்கிறது எனவும் தெரிவித்துள்ளனர்.

கௌதாரிமுனையின் சிறப்பே இங்குள்ள மணல் மேடுகள்தான் அதுவும் அழிக்கப்பட்டுவிட்டால் எமது கிராமத்தை எவரும் திரும்பி பார்க்க மாட்டார்கள். அத்தோடு கடல் நீர் கிராமத்திற்குள் உட்புகும் ஆபத்தும் ஏற்படும். இந்த மணல் வளம் மீண்டும் உருவாகும் வளம் அல்ல எனவும் கடந்த காலங்களில் அகழப்பட்ட இடங்களில் இன்றும் வெறுமையாக பற்றைகள் வளர்ந்து காணப்படுகிறது எனவும் தெரிவிக்கின்றனர்.

எனவே கௌதாரிமுனையை ஆபத்திலிருந்து பாதுகாக்க உதவுமாறு பொது மக்கள் அவசர கோரிக்கையினையை அரசியல் மற்றும் அதிகார தரப்பினர்களிடம் விடுத்துள்ளனர்.

#கௌதாரிமுனை  #காப்பாற்றுமாறு #பொதுமக்கள்  #அவசரகோரிக்கை #kowtharimunai

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More