Home இலங்கை தொழிலாளர் தற்கொலை – பொறுப்பற்ற வகையில் செயற்பட்ட விடுதி உரிமையாளருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

தொழிலாளர் தற்கொலை – பொறுப்பற்ற வகையில் செயற்பட்ட விடுதி உரிமையாளருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

by admin
விடுதியில் தொழிலாளர் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்த நிலையில் விடுதியின் உரிமையாளர் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டமைக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளியிட்டதுடன், எச்சரிக்கையும் செய்தது.

“விடுதியின் பணியாளர் விடுதிக்குள் தற்கொலை செய்து பிணமாகக் கிடக்கின்றார். அவரின் முதலாளியான நீர் சடலத்தைக் கூடப் பார்க்கச் செல்லவில்லை. என்ன மனிதாபிமான இருக்கின்றது. தொழிலாளர்கள் மீது முதலாளிக்கு அக்கறை அவசியம்.

தொழிலாளி 5 ஆண்டுகள் பணியாற்றினார் என்றும் பிள்ளை போல் பார்த்தாகவும் கூறுகின்றீர். அவர் தற்கொலை செய்தமை தொடர்பில் காவல்துறையினருக்கு உரிய அறிவித்தல் வழங்கலாம் அசண்டையாகச் செயற்பட்டுள்ளீர். இவ்வாறு செயற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது – மனிதாபிமானமற்றது” என்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் கண்டித்தார்.

யாழ்ப்பாணம், திருநெல்வேலியிலுள்ள விடுதி ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை தற்கொலை செய்துகொண்டார். ஹட்டனைச் சேர்ந்த ரி. சிந்துஜயந்த் (வயது -23) என்பவரே தூக்கிலிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

சம்பவம் தொடர்பில் நேற்று பின்னிரவே யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் சம்பவ இடத்துக்குச் சென்று இறப்பு விசாரணைகளை முன்னெடுத்தார்.

பணியாளர் ஒருவர் விடுதிக்குள் தற்கொலை செய்துகொண்டமை தொடர்பில் விடுதியின் உரிமையாளர் காவல்துறை அவசர இலக்கத்துக்கு மாத்திரம் அறிவித்துவிட்டு இருந்துவிட்டார். காவல்நிலையத்துக்கு உரிய அறிவித்தலை வழங்கவில்லை என்று சம்பவ இடத்தில் நடந்த விசாரணையின் போது நீதிவானிடம் காவல்துறையினர்  தெரிவித்தனர்.

அதனால் விடுதி உரிமையாளரை நீதிமன்றில் இன்று முற்படுமாறு உத்தரவிட்ட நீதிவான், பணியாளரின் சடலத்தை ஊடற்கூற்று விசாரணையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.  தற்கொலை செய்த பணியாளர் தொடர்பான இறப்பு விசாரணை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று இடம்பெற்றது.
இதன்போது விடுதியின் உரிமையாளர் மன்றில் வாக்குமூலம் வழங்கினார்.

“தற்கொலை செய்து கொண்ட பணியாளர் 5 ஆண்டுகள் பணியாற்றுகின்றார். அவரைப் பிள்ளை போன்றே வளர்த்தேன். அதனால்தான் அவரின் முடிவை ஏற்க முடியாது சடலத்தைப் பார்வையிட வரவில்லை. எனது வங்கி அட்டை எடுத்து பணம் செலவிடப்பட்டமை தொடர்பில் கண்டித்ததை அடுத்தே அவர் இந்த முடிவுக்கு வந்திருப்பார் என நினைக்கின்றேன்” என்று விடுதியின் உரிமையாளர் மன்றில் வாக்குமூலம் வழங்கினார்.

#தொழிலாளர் #தற்கொலை #விடுதி உரிமையாளருக்கு #எச்சரிக்கை

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More