Home இலங்கை முஸ்லீம் பிரபாகரன் ஒருவரை உருவாக்கி நாட்டை நாசமாக்க வேண்டாம் – முல்லைத்தீவில் மைத்திரி

முஸ்லீம் பிரபாகரன் ஒருவரை உருவாக்கி நாட்டை நாசமாக்க வேண்டாம் – முல்லைத்தீவில் மைத்திரி

by admin

வடக்கில் பிரபாகரன் ஒருவர் உருவாகி நாட்டை நாசமாக்கியதைப் போல முஸ்லிம் பிரபாகரன் ஒருவரை உருவாக்க வேண்டாம்  என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் நடைபெற்ற நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய வேலைத்திட்டத்தின் 4ஆம் கட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த ஜனாதிபதி தேர்தலில் நூற்றுக்கு 80 வீதமான முல்லைத்தீவு மக்கள் தமக்கு வாக்களித்துள்ளதாகவும் நாட்டை ஆண்ட ஆறு ஜனாதிபதிமாரில் தாமே அதிகளவில் முல்லைத்தீவுக்கு விஜயம் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் முல்லைத்தீவின் வறுமை நிலைமையை இல்லாமலாக்க அனைவரும் செயற்படவேண்டும் என்றும் இன மத குல பேதங்களால் பிரிந்துள்ள நாட்டை மேம்படுத்த ஒன்றுபட வேண்டும் என்றும் அவர் கூறினார். போரில் பலரின் காணி உறுதிகள் அழிந்துள்ளமையை அறிந்துள்ளதாகவும் அதனால் வங்கிக் கடன் கூட எடுக்க முடியாத நிலைமை உள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், இந்த விடயம் குறித்து அமைச்சரவையில் பேசி நிவாரணம் கொடுப்பதாகவும் தெரிவித்தார்.

நாடு ஒன்றாக இருக்கவேண்டுமானால் மகா சங்கத்தினர் ஒன்றாக இருக்க வேண்டும் என்றும் தேர்தலை இலக்கு வைத்து செயற்படக்கூடாது என்றும் அடிப்படைவாதம் எமக்கு தேவையில்லை என்றும் கூறினார். இதேவேளை, அண்மைய தாக்குதலின் பின்னர் நாட்டு பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் தீவிரவாதிகளின் நோக்கம் மக்களை கொல்வது மாத்திரமல்ல என்றும் அவர்களின் நோக்கம் ஈடேற இடமளிக்க கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கில் ஒரு பிரபாகரன் உருவானது போல முஸ்லிம் பிரபாகரன் ஒருவரை உருவாக்கவேண்டாம் என்றும் அண்மைய தாக்குதல் முஸ்லிம் பிரபாகரனை உருவாக்கும் நோக்கத்திலேயே நடந்தது என்றும் இனவாதத்தை விதைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்றும் வலியுறுத்தினார்.

முல்லைத்தீவில் வனவளம் நன்றாக உள்ளதாக குறிப்பிட்ட அவர், மரக்காலைகளை புதிதாக பதிய கூடாது என்று தாம் கூறியமைக்கு சவப்பெட்டிகளை எவ்வாறு செய்வர் என்று யாரோ கேள்வி எழுப்பியுள்ளதாகவும் குறிப்பிட்டார். சவப்பெட்டிகள் சவச்சாலைகளில்தான் செய்யப்படுகின்றது என்றும் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் அமைச்சர்களான தயா கமகே மற்றும் கயந்த கருணாதிலக, வடக்கு ஆளுநர் சுரேன் இராகவன், பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ சுமந்திரன் ,சிவமோகன், காதர் மஸ்தான் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

#முஸ்லீம் #பிரபாகரன் #நாசமாக்க வேண்டாம் #முல்லைத்தீவில் #மைத்திரிபால சிறிசேன

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More