Home இலங்கை சுன்னாகத்தில் குழுவொன்றினால் தாக்கப்பட்ட குடும்பத்தலைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

சுன்னாகத்தில் குழுவொன்றினால் தாக்கப்பட்ட குடும்பத்தலைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

by admin


சுன்னாகம் பகுதியில் ஒரு வாரத்துக்கு முன்பு குழு ஒன்றால் தாக்கப்பட்ட குடும்பத்தலைவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை மதியம் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உடுவில் அம்பலவாணர் வீதி, நாகம்மாள் லேனைச் சேர்ந்த நடேசு ரதீஸ்குமார் (வயது-25) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

குடும்பத்தலைவர் கடந்த திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் உடுவிலிருந்து சுன்னாகம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தார். அவரை கே.கே.எஸ். வீதி, தொட்டி ஆலடி எரிபொருள் நிலையத்துக்கு அண்மையில் மூவர் கொண்ட குழு இடைமறித்தது. அவர் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தியது.

குடும்பத்தலைவரின் தலையில் கொட்டானால் தாக்குதல் நடத்தப்பட்டதால் அவர் நிலத்தில் சரிந்து வீழ்ந்தார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த குடும்பத்தலைவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பயனின்றி திங்கட்கிழமை மதியம் உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிவானின் விசாரணைகளை அடுத்து சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உள்படுத்த உத்தரவிடப்பட்டது.

அதேவேளை ‘இரு தரப்புகளுக்கு இடையில் முரண்பாடு ஏற்பட்டு தாக்குதல் நடத்தப்பட்ட போது, எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அண்மையாக காவல்துறையினர் நின்றிருந்தனர். எனினும் தாக்குதலைத் தடுக்கவுமில்லை, தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்யவுமில்லை.

சம்பவம் இடம்பெற்று ஒருவாரம் நிறைவடைந்த போதும் தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்படவில்லை. தற்போது குடும்பத்தலைவர் உயிரிழந்த பின்னர் அவரது வீட்டுக்கு காவல்துறையினர் பாதுகாப்பு வழங்குவதாக அங்கு கூடியிருக்கும் உறவினர்களையும் ஊரவர்களையும் ஒன்றுகூடுவதைத் தடுக்கின்றனர்.

சுன்னாகம் கல்லாகட்டுவனைச் சேர்ந்தவர்களே தாக்குதல் நடத்தினார்கள்.’ என உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, உயிரிழந்தவரின் வீட்டுக்கும் தாக்குதல் நடைபெற்ற தொட்டி ஆலடி எரிபொருள் நிலையப் பகுதியிலும் காவல்துறைப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகள் இடம்பெறுகிறது. இந்த மோதல் தீவிரமடைவதைத் தடுக்க உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

#சுன்னாகம் #குடும்பத்தலைவர் #உயிரிழப்பு

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More