Home இலங்கை யாழ் நிதி நிறுவனம் ஒன்றில் பாரிய நிதிமோசடி – முகாமையாளர் கைது…

யாழ் நிதி நிறுவனம் ஒன்றில் பாரிய நிதிமோசடி – முகாமையாளர் கைது…

by admin

யாழ்ப்பாணத்தில் இயங்கும் நிதி நிறுவனம் ஒன்றால் தனிநபர் ஒருவருக்கு சுமார் 11 கோடி ரூபா பணம் நகை அடகுக் கணக்கில் காட்டி நகை பெறப்படாமல் வழங்கப்பட்டுள்ளது. நிதி நிறுவனத்தின் முகாமைத்துவம் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் பெரும் நிதி மோசடிகள் காவற்துறை விசாரணைப் பிரிவால், அந்த நிறுவனத்தின் யாழ்ப்பாணக் கிளை முகாமையாளர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் நகரில் நீண்டகாலமாக இயங்கி வரும் நிதி நிறுவனம் ஒன்றால், மாதகலைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு சுமார் 10 கோடி ரூபா பணம் மீற்றர் வட்டிக் கணக்கில் மோசடியாக வழங்கப்பட்டுள்ளது.

அதனை நிதி நிறுவனத்தின் முகாமையாளர், அடகுப் பிரிவு உத்தியோகத்தர்கள் இணைந்து தங்க நகை அடகு மீதான முற்பணம் என கணக்குக் காட்டியுள்ளனர். எனினும் நிதி நிறுவனத்தின் கணக்காய்வுப் பிரிவு மேற்கொண்ட விசாரணையில் வர்த்தகருக்கு வழங்கப்பட்ட முற்பணத்துக்கு உரிய நகைகள் அடகுப் பிரிவிடம் இருக்கவில்லை. அதுதொடர்பில் கணக்காய்வுப் பிரிவால், நிதி நிறுவன முகாமைத்துவத்துக்கு அறிக்கையிடப்பட்டது. சுமார் 6 மாதங்கள் இந்தப் பணம் தனிநபர் ஒருவருக்கு எந்தப் பொறுப்பும் பெறப்படாமல் மோசடியாக வட்டிக்கு வழங்கப்பட்டுள்ளது என்று கணக்காய்வுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

அதுதொடர்பில் உரிய பணம் மற்றும் வட்டி அடங்கலாக சுமார் 11 கோடி ரூபா பணத்தை வர்த்தகரிடமிருந்து மீள அறவீடு செய்யுமாறு யாழ்ப்பாணக் கிளை முகாமையாளருக்கு நிதி நிறுவனத்தின் முகாமைத்துவம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

எனினும் உரிய காலத்துக்குள் பணம் மற்றும் வட்டியை மீள அறவீடு செய்வதற்கு கிளை முகாமையாளர் தவறிவிட்டதால், அவருக்கு எதிராக கொழும்பு பெரும் நிதி மோசடிகள் பொலிஸ் விசாரணைப் பிரிவுக்கு நிதி நிறுவனத்தின் முகாமைத்துவம் முறைப்பாடு வழங்கியது. அதனடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பெரும் நிதி மோசடிகள் காவற்துறை விசாரணைப் பிரிவு, யாழ்ப்பாணக் கிளை முகாமையாளரைக் கைது செய்தது. முகாமையாளரிடம் விசாரணைகளை முன்னெடுத்த காவற்துறையினர் , அவரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கடந்த புதன்கிழமை முற்படுத்தினர்.

சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிமன்றம், இந்த மோசடி வழக்குடன் தொடர்புடைய நிதி நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட சிலரிடம் விசாரணைகளை முன்னெடுக்க அனுமதியளித்தது.

இந்த நிலையில் அந்த நிதி நிறுவனத்தின் அடகுப் பிரிவில் பணியாற்றிய இரண்டு பெண்கள் உத்தியோகத்தர்கள் மற்றும் ஓர் ஆண் உத்தியோகத்தரிடம் பெரும் நிதி மோசடிகள் காவற்துறை விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அத்துடன், மோசடியாகப் பணத்தைப் பெற்ற மாதகல் வர்த்தகர் தலைமறைவாகி உள்ளார் என்றும் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, இந்த மோசடியால் நிதி நிறுவனத்துக்கே சுமார் 11 கோடி ரூபா நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வாடிக்கையாளர்களுக்கு எந்தவொரு நிதி இழப்பும் ஏற்படவில்லை என்று அந்த நிறுவனத்தின் முகாமைத்துவம் சுட்டிக்காட்டியுள்ளது. #நிதிமோசடி

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More