Home இலங்கை ஸ்மார்ட் லாம்ப் போல் கோபுரங்கள் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு

ஸ்மார்ட் லாம்ப் போல் கோபுரங்கள் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு

by admin

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் லாம்ப் போல் (Smart Lamp Pule)  கோபுரங்கள் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில்  தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனுவில் பிரதிவாதிகளான மாநகர முதல்வர், மாநகர ஆணையாளர் மற்றும் மாநகர சபை சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாவார் என்று மன்றுக்கு இன்று அறிவிக்கப்பட்டது.

அத்துடன், நான்காவது பிரதிவாதியான இடொக்கோ (Edotco Services Lanka (pvt)LTD ) நிறுவனம் சார்பில் எவரும் இன்றைய தினம் மன்றில் முன்னிலையாகததால், அந்த நிறுவனத்துக்கு மன்றின் ஊடாக அறிவித்தல் அனுப்புமாறு மனுதாரருக்கு உத்தரவிட்ட மேல் நீதிமன்றம் மனு மீதான விசாரணையை வரும் ஓகஸ்ட் 28ஆம் திகதிவரை ஒத்திவைத்தது.
யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட் லாம்ப் போல் (Smart Lamp Pule)  கோபுரங்கள் அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில்  நீதிப் பேராணை மனு தாக்கல் செய்யப்பட்டது.
யாழ்ப்பாணம் நவாந்துறை வடக்கைச் சேர்ந்த செல்லப்பர் பத்மநாதன் என்ற 34 வயதுடையவர் இந்த மனுவை தனது சட்டத்தரணி  ரிஷிகேசனி சத்தியநாதன் ஊடாக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் கடந்த வாரம் சமர்பித்தார்.
யாழ்ப்பாணம் மாநகர சபை முதலாவது பிரதிவாதியாகவும் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இரண்டாவது பிரதிவாதியாகவும் யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளர் மூன்றாவது பிரதிவாதியாகவும் Edotco Services Lanka (pvt)LTD  நான்காவது பிரதிவாதியாகவும் இணைக்கப்பட்டுள்ளனர்.
இந்த மனு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. மனுதாரரின்  சட்டத்தரணி ரிஷிகேசனி சத்தியநாதனின் ஏற்பாட்டில்   சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன்  மன்றில் முன்னிலையானார்.
 யாழ்ப்பாணம் மாநகர சபை, மாநகர ஆணையாளர் மற்றும் மாநகர முதல்வர் சார்பில் சட்டத்தரணி இராஜரட்ணம் முன்னிலையானார். மனுதாரரின் சட்டத்தரணி மன்றில் இடைக்காலக் கட்டளை கோரி சமர்ப்பணம் செய்தார். எதிர்மனுதாரர்கள் மூவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணியும் சமர்ப்பணம் செய்தார்.
எனினும் நான்காவது எதிர்மனுதாரரான இடொக்கோ (Edotco Services Lanka (pvt)LTD ) நிறுவனம் சார்பில் எவரும் இன்றைய தினம் மன்றில் முன்னிலையாகததால் இடைக்காலக் கட்டளை தொடர்பான விண்ணப்பத்தை மன்று ஆராய்வதை ஒத்திவைத்தது.
அத்துடன், நான்காவது பிரதிவாதிக்கு மன்றின் ஊடாக அறிவித்தல் வழங்க மனுதாரருக்கும் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது. மனு மீதான விசாரணைகள் வரும் ஓகஸ்ட் 28ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மனுவில் கோரப்பட்ட நிவாரணங்கள் மனுவில் ஸமார்ட் லாம் கம்பங்களை நடுவதற்கு முன்னர் 6 உறுப்பினர்களைக்  கொண்ட குழுவை நியமித்து அவற்றை நடுவதற்கு ஆராய்ந்து அறிக்கை இடுவதன் அடிப்படையில் தொடர் நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்று சபையில் தீர்மானிக்கப்பட்டது.

 எனினும் அத்தகைய எந்தவொரு குழுவையும் நியமிக்காது  மாநகர முதல்வர், தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் கம்பங்களை நடுவதற்கு உடன்படிக்கை ஒன்றைச் செய்துள்ளார்.

அத்துடன், நகர அபிவிருத்தி அதிகார சபையின் 11.08.2008ஆம் திகதிய 21ஆம் இலக்க சுற்றறிக்கையின் பிரகாரம் தொலைத்தொடர்பு கோபுரங்களை அமைப்பது தொடர்பில் உள்ளூராட்சி மன்றங்கள் திட்டமிடல் குழு ஒன்றை நியமிக்கவேண்டும். அந்தத் திட்டமிடல் குழு தீர்மானங்களை எடுக்கவேண்டும். அந்தச் சுற்றறிக்கையை மீறி ஸ்மார்ட் லாம்ப் போல் கம்பங்கள் நடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

எனவே யாழ்ப்பாணம் மாநகர முதல்வரும் Edotco Services Lanka (pvt)LTD நிறுவனமும் 2019.05.15ஆம் திகதி செய்துகொண்ட சட்டவரம்பை மீறிய உடன்படிக்கையை ரத்துச் செய்யும் உறுதிகேள் நீதிப்பேராணை கட்டளை.

Edotco Services Lanka (pvt)LTD  நிறுவனத்தால் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுவரும் சட்டவிரோத கோபுரங்களை தொடர்ந்தும் அமைக்கக் கூடாது தடைவிதிக்கும் தலையீட்டு நீதிப் பேராணை கட்டளை.

Edotco Services Lanka (pvt)LTD நிறுவனத்தால் அமைக்கப்படும் கோபுரங்களில் 5ஜி தொழிநுட்பத்தைப் பொருத்த Edotco Services Lanka (pvt)LTD நிறுவனம் அனுமதி வழங்க்கக் கூடாது என்ற தலையீட்டு நீதிப் பேராணைக் கட்டளை.

Edotco Services Lanka (pvt)LTD நிறுவனம் இதுவரை அமைத்த கோபுரங்களை அகற்ற யாழ்ப்பாணம் மாநகர சபை, மாநகர முதல்வர் மற்றும் மாநகர ஆணையாளர் ஆகியோருக்கு உத்தரவிடும் ஆணையீட்டு நீதிப்பேராணைக் கட்டளை.

மாநகர முதல்வருக்கும் Edotco Services Lanka (pvt)LTD  நிறுவனத்துக்கும் இடையிலான உடன்படிக்கையை இடைநிறுத்தி வைப்பதற்கான இடைக்காலக் கட்டளை.

Edotco Services Lanka (pvt)LTD  நிறுவனத்தால் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுவரும் சட்டவிரோத கோபுரங்களை தொடர்ந்தும் அமைப்பதை இடைநிறுத்த இடைக்காலக் கட்டளை.

Edotco Services Lanka (pvt)LTD நிறுவனத்தால் அமைக்கப்படும் கோபுரங்களில் 5ஜி தொழிநுட்பத்தைப் பொருத்த Edotco Services Lanka (pvt)LTD நிறுவனம் அனுமதி வழங்குவதை இடைநிறுத்தும் இடைக்காலக் கட்டளை
ஆகிய நிவாரங்களை மனுதாரர் மனுவில் கோரியுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.  #யாழ் மாநகர சபை  #ஸ்மார்ட் லாம்ப்  #கோபுரங்கள் #தடை  #ஒத்திவைப்பு

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More