Home இலங்கை யாழ். தேர்தல் மாவட்டத்தின் ஆசனங்கள் குறையுமா?

யாழ். தேர்தல் மாவட்டத்தின் ஆசனங்கள் குறையுமா?

by admin


வலிகாமம் வடக்கில் மீளக்குடியமர அனுமதிக்கப்படாத 21 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த வெளிநாட்டில் உள்ள மக்களை வாக்காளர்களாகப் பதிவு செய்வதற்கான வாய்ப்பு இருந்தும், அது தொடர்பில் மக்களை அறிவுறுத்த தமிழ் அரசியல்வாதிகள் தவறியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் 30 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்படி வாக்களர்களின் பெயர்கள் நீக்கப்பட்டால், யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை இரண்டால் குறைவடையும் என தெரிவிக்கப்படுகின்றது.

வலி. வடக்கில் மீளக்குடியமர அனுமதிக்கப்படாத பிரதேசங்கள் கடந்த காலங்களில் மீளாய்வுகளின் போது, மீளாய்வுக்குட்படுத்தபடுவதில்லை. இந்த ஆண்டும் மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டாம் என்று யாழ். மாவட்ட தேர்தல்கள் திணைக்களத்தால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

இருப்பினும், அந்தப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எங்கிருந்தாலும் அவர்களைப் பதிவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.  நகுலேஸ்வரம் (ஜே/226), காங்கேசன்துறை (ஜே/233), காங்கேசன்துறை மத்தி (ஜே/234), காங்கேசன்துறை தெற்கு (ஜே/235), கட்டுவன் (ஜே/238), தென்மயிலை (ஜே/240), வருத்தலைவிளான் (ஜே/241), குரும்பசிட்டி (ஜே/242), குரும்பசிட்டி கிழக்கு (ஜே/243), வசாவிளான் கிழக்கு (ஜே/244), வசாவிளான் மேற்கு (ஜே/245), மயிலிட்டி வடக்கு (ஜே/246), தையிட்டி வடக்கு (ஜே/249), தையிட்டி மேற்கு (ஜே/250), மயிலிட்டித்துறை வடக்கு (ஜே/251), பலாலி தெற்கு (ஜே/252), பலாலி கிழக்கு (ஜே/253), பலாலி வடக்கு (ஜே/254) ஆகிய கிராம அலுவலர் பிரிவுகள் பகுதியாக விடுவிக்கப்படவில்லை.

மயிலிட்டி தெற்கு (ஜே/248), பலாலி வடமேல் (ஜே/255), பலாலி மேற்கு (ஜே/256) ஆகிய கிராம அலுவலர் பிரிவுகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை.  இந்தக் கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் எங்கு வசித்து வந்தாலும் சிறப்பு விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கவேண்டும். இது தொடர்பான விண்ணப்பப் படிவங்கள் கிராம அலுவலர்கள் அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த வெளிநாட்டில் வசிப்பவர்கள் இங்குள்ள தமது உறவினர்கள் ஊடாக பதிவுகளை மேற்கொள்ள முடியும்.  இவற்றை மக்களுக்கு தெளிவுபடுத்தி அறிவிக்குமாறு மாவட்டத்தின் அனைத்து அரசியல் வாதிகளுக்கும் தேர்தல்கள் திணைக்களம் தெரியப்படுத்தியும் அது தொடர்பில் அவர்கள் அக்கறை அற்று இருப்பதாக குற்றம் சுமத்தப்படுகின்றது. கடந்த நாடாளுமன்றத் தேர்தல், மாகாணசபைத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஆகியவற்றில் போட்டியிட்ட சகல வேட்பாளர்களுக்கும் இது தொடர்பான விளக்கக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More