Home இலங்கை ஓமந்தைப் போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்குமாறு கோரிக்கை..

ஓமந்தைப் போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்குமாறு கோரிக்கை..

by admin

வடக்கு-கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களையும் உள்ளடக்கி,   எதிர்வரும் 30 ஆம் திகதி ஓமந்தையில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரையும் ஆதரவு வழங்குமாறு மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் சங்கத்தின் தலைவி மனுவல் உதையச்சந்திரா கோரிக்கை விடுத்துள்ளார்.
மன்னாரில் இன்று செவ்வாய்க்கிழமை (27) மதியம் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இந்த வேண்டு கோளை விடுத்துள்ளார்.

“எதிர்வரும் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கு மாகணங்களைச் சேர்ந்த காணமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இணைந்து ஓமந்தையில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளோம். வடக்கு-கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களையும் உள்ளடக்கி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 5 மாவட்ட மக்கள் ஓமந்தையிலும் 3 மாவட்ட மக்கள் கல்முனையிலும் குறித்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர். வட மாகாணத்தைச் சேர்ந்த காணமால் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் இணைந்து ஓமந்தையில் குறித்த போராட்டத்தை முன்னெடுப்பதற்கான காரணம் என்ன என்றால் கடைசி யுத்தத்தின் போது ஓமந்தையில் வைத்தே காணாமல் ஆக்கப்பட்ட அதிகலவான எமது பிள்ளைகளை குடும்பம் குடும்பமாகவும்,கொத்துக் கொத்தாகவும் இராணுவத்திடம் கையளித்தோம். அதன் அடிப்படையிலே ஓமந்தையில் ஐந்து மாவட்டத்தைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் சங்கத்தினரும் இணைந்து குறித்த போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம்.”

“எங்களுடைய போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு நாங்கள் பகிரங்க அழைப்பு விடுத்தோம். குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்களையும் ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம். கடந்த முறையும் அவர்கள் எங்களுக்கு ஆதரவை வழங்கி இருந்தார்கள். மேலும் அரச சார்பற்ற மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டு வருகின்ற அனைத்து அமைப்புக்களிடமும் ஆதரவை கோரி நிற்கின்றோம்.”

“மன்னார் மாவட்டத்தில் அனைத்து அமைப்புக்களிடமும் ஆதரவை கோரியுள்ளோம். அனைத்து அமைப்புக்களும் எமக்கு ஆதரவை வழங்கியுள்ளது.ஆனால் ஒரு அமைப்பு தன்னிச்சையாக செயற்படுகின்றது.அவர்களிடமும் நாங்கள் காணாமல் போன உறவுகளுக்காக எம்முடன் இணைந்து செயற்பட வேண்டு கோள் விடுத்துள்ளோம். எதிர்வரும் 30 ஆம் திகதி மன்னாரில் குறித்த அமைப்பு தன்னிச்சையாக முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு எம்முடன் இணைந்து கைகோர்க்க வேண்டு கோள் விடுத்துள்ளோம். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாங்கள் போராட்டத்தை முன்னெடுக்கின்ற போது, அமைப்புக்கள் தன்னிச்சையாக செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அமைப்புக்கள் எமக்கு பின்னால் நின்று உதவி செய்ய வேண்டும். பணத்திற்காக போராட்டங்களை முன்னெடுப்பதாக இருந்தால் சம்பளத்திற்காகவே நீங்கள் வேளை செய்வதாக இருங்கள்.”

“காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக போராட்டங்களை முன்னெடுப்பதாக இருந்தால் இப்படி செய்யாதீர்கள்.மன்னார் மாவட்டத்தில் இருந்து காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை போராட்டத்திற்காக நாங்கள் ஓமந்தைக்கு அழைத்துச் செல்கின்ற போது மன்னாரில் இன்னும் ஓர் ஆர்ப்பாட்டம் எதற்கு? எமது அம்மாக்களை பந்தாடதீர்கள்.ஏற்கனவே கதைத்து தீர்மானம் எடுக்கப்பட்டதன் பின்னபே ஓமந்தையில் போராட்டத்தை மன்னெடுக்க தீர்மானித்தோம். எங்களுக்கு ஆதரவு வழங்காது விட்டாலும் பரவாக இல்லை இடையூராக இருக்க வேண்டாம்.” என தெரிவித்தார்.

இதே வேளை மன்னாரில் அமைக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் தொடர்பில் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் வழங்கிய மனுவல் உதையச்சந்திரா,,,,

மன்னாரில் அமைக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் கண் துடைப்பிற்காகவே திறக்கப்பட்டுள்ளது.காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடித்தருவோம் என்பதற்காக குறித்த அலுவலகம் திறக்கப்படவில்லை. அதற்காகவே திறந்திருந்தால் கடந்த 4 மாதத்தில் எவ்வளவு திட்டங்கள் இடம் பெற்றிருக்கும்.எதுவும் இடம் பெற்றிருந்தால் கூற முடியும் எங்களுக்கு உண்மையாக வேளை செய்வதற்காகவே திறக்கப்பட்டது என்று. மாறாக அரசாங்கத்தை காப்பற்றுவதற்காக ஓ.எம்.பி அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.எங்கள் பிள்ளைகளை கண்டு பிடிப்பதற்காக திறக்கப் படவில்லை.என அவர் மேலும் தெரிவித்தார். எதிர்வரும் 30 ஆம் திகதி ஓமந்தையில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்குமாறு மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் சங்கத்தின் தலைவி மனுவல் உதையச்சந்திரா கோரியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More