Home இலங்கை வட்டுக்கோட்டை கொலை வழக்கு – தகவல் புத்தகத்தை ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவு….

வட்டுக்கோட்டை கொலை வழக்கு – தகவல் புத்தகத்தை ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவு….

by admin

வட்டுக்கோட்டை பிக்னல் மைதானத்தில் இளம் குடும்பத்தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் 6 பேருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை மீதான விசாரணைகள் ஒக்டோபர் 18ஆம் திகதிவரை ஒத்திவைத்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

எதிரிகள் தரப்பால் விண்ணப்பம் செய்யப்பட்டதற்கு அமைய பெரும் குற்ற தகவல் புத்தகங்கள் இரண்டில் இடைச்செருகல்கள், புனைவுகள் இடம்பெற்றுள்ளதா? என்பது தொடர்பில் விளக்கமான பதில்களை அறிக்கை வடிவில் தாமதமின்றி வழங்குமாறு அரச இரசாயனப் பகுப்பாய்வாளருக்கு உத்தரவிட்ட யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் கட்டளையிட்டார்.

அதற்காக பெரும் குற்ற தகவல் புத்தகங்கள் இரண்டும் மன்றின் பொறுப்புக்கு எடுக்கப்பட்டு வட்டுக்கோட்டை காவல் நிலைய உத்தியோகத்தர் ஊடாக சீல் இடப்பட்டு அதனை அரச இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கவும் அதற்கான உரிய அறிவுறுத்தல் கடிதங்களை வழங்கவும் பதிவாளருக்கு அறிவுறுத்தல் வழங்கிய மேல் நீதிமன்றம், இரசாயனப் பகுப்பாய்வு நடவடிக்கைகள் தொடர்பில் சிறப்புக் கவனம் செலுத்தி மிகவிரைவாக ஆய்வறிக்கையை மன்றுக்குப் பெற்றுச் சமர்ப்பிக்குமாறு வட்டுக்கோட்டை காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டது.

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும், யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையில் நடந்த ராஜன் கதிர்காமர் வெற்றிக்கிண்ணத்துக்கான 50 ஓவர்கள் துடுப்பாட்ட போட்டி 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி வட்டுக்கோட்டை பிக்னல் மைதானத்தில் இடம்பெற்றது.

இந்தப் போட்டில் இருதரப்பினருக்கு இடையே முறுகல் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது. கைகலப்பில் யாழ்ப்பாணம் பிரதான வீதியைச் சேர்ந்தவரும் சென்.பற்றிக்ஸ் கல்லூரியின் பழைய மாணவனுமான ஜெயரட்ணம் டினோசன் அமலன் (வயது 24) என்னும் ஒரு பிள்ளையின் தந்தை உயிரிழந்தார்.

சம்பவத்தையடுத்து வட்டுக்கோட்டை காவல்  நிலையத்தில் 9 பேர் வரை சரண்டைந்தனர். மல்லாகம் நீதிமன்றில் சுருக்கமுறையற்ற விசாரணை இடம்பெற்றது. அதனையடுத்து 6 பேருக்கு எதிராக கொலைக் குற்றச்சாட்டின் கீழான குற்றப்பத்திரிகை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் சாட்சியப் பதிவுகள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றின் அப்போதைய நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டன.

எனினும் முதலாம் மற்றும் இரண்டாம் எதிரிகளின் சட்டத்தரணிகளால் இந்த வழக்கை இடைநிறுத்துவதற்கான மனு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது. மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் வழக்கு விசாரணை நடத்த ஆட்சேபனை தெரிவித்தே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு மீதான ஆரம்ப விசாரணையில் மனுதாரர்களின் சட்டத்தரணிகள் முன் வைத்த சமர்ப்பணத்தை முகதளவில் ஏற்றுக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இந்த வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை உத்தரவை 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் 6ஆம் திகதி வழங்கியது.

அந்நிலையில் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றுக்கு மாற்றலாகி வந்த நிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீளப்பெறப்பட்டது.

அதனால் இந்தக் கொலை வழக்கை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபர் திணைக்களம் மீளத் திறந்தது.  அதனடிப்படையில் நேற்று செப்ரெம்பர் 5ஆம் திகதி தொடக்கம் வரும் 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை தொடர் விளக்கத்துக்கு மேல் நீதிமன்றம் திகதியிட்டிருந்தது. நேற்று வியாழக்கிழமை விளக்கத்துக்காக வழக்குக் கூப்பிடப்பட்டது.

அதன் போது, வழக்குத் தொடுனர் சார்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் மன்றில் முன்னிலையானார். முதலாவது எதிரிக்காக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், இரண்டாவது எதிரி சார்பில் நளின் ஏனைய எதிரிகளுக்காக சட்டத்தரணிகள் வி.திருக்குமரன், கே.சுகாஷ் ஆகியோர் முன்னிலையானார்கள்.

எதிரிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், “இந்த வழக்கில் நியாயமான விளக்கம் இடம்பெறவேண்டும். வழக்கின் முதல் ஆதாரமான தகவல் புத்தகத்தில் இடைச்செருகல்கள், புனைவுகள் இடம்பெற்றுள்ளன. அவற்றை விளக்கத்துக்கு முன்னதாக ஆய்வுக்குட்படுத்தப்பட்டு உறுதிப்படுத்தப்படவேண்டும்” என்று விண்ணப்பம் செய்தனர்.

எனினும் வழக்குத் தொடுனர் சார்பில் முன்னிலையான அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன், எதிரிகள் தரப்புச் சட்டத்தரணிகளின் விண்ணப்பத்தை கடுமையாக ஆட்சேபித்ததுடன் நியாயமான விளக்கம் இடம்பெறுவதற்கு மாறான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று மன்றுரைத்தார்.

இந்த நிலையிலேயே இரு தரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்து நியாயமான விளக்கம் இடம்பெறுவதை உறுதி செய்யும் வகையில் எதரிகள் தரப்புச் சட்டத்தரணிகளின் விண்ணப்பத்துக்கு அனுமதியளித்து கட்டளை வழங்கியது.

Mayurappriyan

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More