தியாக தீபம் திலீபனின் கோரிக்கைகளை நிறைவேறவும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து வவுனியாவில் இருந்து ஆரம்பமான நடைபயணத்திற்காக அனைத்து தமிழ் உணர்வாளர்களையும் நாவற்குழி சந்தியில் வியாழக்கிழமை காலை 8 மணிக்கு ஒன்று கூடுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் அழைப்பு விடுத்துள்ளார்.
தியாக தீபம் திலீபனின் கோரிக்கைகள் நினைவேறவும், தமிழ் மக்களின் அபிலாசைகள் வெற்றி பெறவும் அனைத்து சமூக தரப்புக்களையும் ஒன்றினையுமாறும் அவர் கோரியுள்ளார்.
திலீபனின் நினைவு வாரத்தில் நடத்தப்படும் நடைபயணம் இன்று எழுதுமட்டுவாள் பகுதியினை வந்தடைந்த வேளை அங்குவைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
தமிழ் மக்களின் தேசம், இறைமை, சுயநிர்ணைய உரிமை என்பவை அங்ககரிக்கப்பட வேண்டும். தியாக தீபம் திலீபன் வலியுறுத்திய 5 அம்சக் கோரிக்கையின் பௌத்த மயமாக்கல் நிறுத்தப்பட வேண்டும். தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடைபயணம் வவுனியாவில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது.
திலீபனின் நினைவு வாரம் அனுஸ்டிக்கப்பட்டு வரும் காலப்பகுதியில் எமது இளைஞர் அணியினர் இந்த நடைபயணத்தை நடத்துகின்றார்கள்.
இந்த கோரிக்கைகள் வலுபடைவதற்கும், வெற்றிபெறுவதற்கும், திலீபனை நேசிக்கின்ற, அவருடைய உன்னத தியாகங்களை மதிக்கின்ற அனைத்து உணர்வாளர்களும் எம்மோடு கைகோர்க்க வேண்டும் என்று நாம் கோரி நிற்கின்றோம். அனைத்து சமூக தரப்பினர்களும் இந்த நடைபயணத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
நாளை மறுதினம் 26 ஆம் திகதி இறுதி நாள் அன்று நாவற்குழி பகுதியில் இருந்து அந்த நடைபணயத்தை திலீபனின் நினைவு தூபி நோக்கி நகர்த்த உள்ளோம். அன்று காலை 8 மணியளவில் தமிழ் உறவுகள் அனைவரும் ஒன்று கூட வேண்டும்.
அங்கிருந்து புறப்படும் நடைபயணம் காலை 10 மணிக்கு நல்லூர் ஆலய வடக்கு வீதியில் திலீபன் உயிரிழந்த இடத்தினை சென்றடையும்.
வவுனியாவில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட நடைபயணி இன்று (நேற்று) எழுதுமட்டுவாள்வரை வந்தடைந்தது. இதுவரை நாம் ஒவ்வொரு பகுதிகளை கடந்து வருகின்ற போது, ஏராளமான பொது மக்கள் தாமாக முன்வந்து திலீபனுக்கு உணர்வு பூர்வமாக அஞ்சலிகளை செலுத்துகின்றார்கள்.
இது போன்ற பேராதரவினை இறுதிநால நடைபயணத்தின் போதும் தர வேண்டும் என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளுகின்றோம் என்றார்.