Home இலங்கை கார்த்திகையில் மரநடுகை தேசத்தை மாத்திரமல்ல தமிழ்த்தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச்செய்யும்…

கார்த்திகையில் மரநடுகை தேசத்தை மாத்திரமல்ல தமிழ்த்தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச்செய்யும்…

by admin

வருடத்தில் எத்தனையோ நாட்களில் நாம் பொங்கி அமுது உண்ணுகின்றோம். ஆனால், இயற்கையைப் போற்றி வழிபடுகின்ற தைப்பொங்கலே தமிழர்களின் தேசியப் பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. அதேபோன்று, வருடம் பூராவும் மரங்களை நடுகைசெய்ய இயலுமெனினும் கார்த்திகை மாத மரநடுகையே தமிழர்களின் தேசிய அடையாளத்துடன் கூடியதாகும். கார்த்திகையில் மரங்களை நடுகைசெய்தல் தேசத்தைக் குளிரச்செய்யும் சூழலியற்செயல் மாத்திரம் அல்ல் அது தமிழ்த்தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச்செய்கின்ற ஒரு தேசியச்செயற்பாடும் ஆகும். என்று தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் விவசாய அமைச்சருமான பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண மரநடுகை மாதம் தொடர்பாக பொ. ஐங்கரநேசன் ஊடகங்களுக்கு இன்று (01.11.2019) அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையின் முழுவிபரம் வருமாறு;

வடக்கு மாகாணசபை 2014 ஆம் ஆண்டு நிறைவேற்றிய தீர்மானத்துக்கு அமைவாக ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் வடமாகாண மரநடுகை மாதமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தமிழ்மக்கள் இம்மாதத்தில் மரநடுகையை ஒரு வழமையான சூழல் பேண் நடவடிக்கையாக அல்லாமல், உணர்வெழுச்சியுடன் கூடிய ஒரு தமிழ்த் தேசியச் செயற்பாடாகக் கொண்டாடவேண்டியது அவசியம் ஆகும்.

இன்று உலகளாவிய ரீதியில் பூமியின் வெப்பநிலை அதிகரித்துக் காலநிலையில் பாதகமான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. கடும் வறட்சி, காலம் தப்பிய பெருமழை, வேகமெடுக்கும் சூறாவளிகள் என்று காலநிலை மாற்றத்தின் விளைவுகளை நாமும் தற்போது அனுபவிக்கத் தொடங்கியுள்ளோம். இதனால், எமது எதிர்கால சந்ததியினரின் இருப்பை உத்தரவாதப்படுத்துவதற்கு, வெப்பநிலை அதிகரிப்புக்குக் காரணமான வளியில் அதிகரித்துச் செல்லும் கரியமிலவாயுவை உறிஞ்சி அகற்றுவதற்கு மரங்களின் நடுகையை ஒரு பேரியக்கமாக முன்னெடுக்கவேண்டிய கட்டாயநிலைக்கு நாம் இன்று தள்ளப்பட்டுள்ளோம்.

மரநடுகையைப் பெருமளவில் மேற்கொள்வதற்குக் ‘கார்’ என்று மழையின் பெயரைத் தன் பெயரில் கொண்ட கார்த்திகை மாதமே மிகப்பொருத்தமான மாதமாகும். இம்மாதப் பகுதியிலேயே வடக்கு கூடுதலான மழை வீழ்ச்சியைப் பெறுகின்றது. இந்தப் புவியியற் காரணிக்கும் அப்பால் ஈழத்தமிழர்களின் வாழ்வியலில் கார்த்திகை மாதம் தனித்தவமான இன்னுமொரு சிறப்பினைக்கொண்டுள்ளது. இம்மாதத்திலேயே மண்ணுக்காக மரணித்த வீர மறவர்களைக் கூட்டாக நினைவிற்கொள்ளும் நாள் அடங்குகிறது. மரவழிபாட்டைத் தமது தொல்வழிபாட்டு முறையாகக்கொண்ட தமிழர்கள் இறந்தவர்களின் நினைவாக மரங்களை நடுகைசெய்து, அவற்றை உயிருள்ள நினைவுச்சின்னங்களாகப் போற்றிய பண்பாட்டு மரபையும் கொண்டிருக்கின்றனர்.

தேசியம் என்பது ஒர் வெற்று அரசியற் சொல்லாடல் அல்ல் இது ஒரு இனத்தின் வாழ்புலம் மொழி வரலாறு பண்பாடு மத நம்பிக்கைகள் ஆகிய ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்ட கூறுகளின் திரட்சியான ஒரு வாழ்க்கை முறையாகும். அந்த வகையில், கார்த்திகைமாத மரநடுகை என்பது சூழலியல் நோக்கிலும் தமிழ்த்தேசிய நோக்கிலும் மிகவும் பொருத்தப்பாடான ஒன்றாகும்.

வருடத்தில் எத்தனையோ நாட்களில் நாம் பொங்கி அமுது உண்ணுகின்றோம். ஆனால், இயற்கையைப் போற்றி வழிபடுகின்ற தைப்பொங்கலே தமிழர்களின் தேசியப் பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. அதேபோன்று, வருடம் பூராவும் மரங்களை நடுகைசெய்ய இயலுமெனினும் கார்த்திகை மாத மரநடுகையே தமிழர்களின் தேசிய அடையாளத்துடன் கூடியதாகும். கார்த்திகையில் மரங்களை நடுகைசெய்தல் தேசத்தைக் குளிரச்செய்யும் சூழலியற்செயல் மாத்திரம் அல்ல் அது தமிழ்த்தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச்செய்கின்ற ஒரு தேசியச்செயற்பாடும் ஆகும். எனவே, இப்புனித கார்த்திகையில் ஆளுக்கொரு மரம் நடுவோம். நாளுக்கொரு வரம் பெறுவோம்.

-இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More