காணமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளைத் தேடி தொடர்ந்து போராடி வந்த தந்தையர் இருவர் மரணமடைந்துள்ளனர். முல்லைத்தீவு -முள்ளியவளைப் பகுதியைச் சேர்ந்த இரண்டு தந்தையர்களே இவ்வாறு மரணமடைந்துள்ளனர். முள்ளியவளை நாவற்காடுப் பகுதியைச் சேர்ந்த இரண்டு மாவீரர்களின் தந்தையான 69 வயதுடைய  வெள்ளையன் அழகன்  என்பவர் நேற்று முன்தினம் (10.11.19) திடீர் மரணமடைந்துள்ளார்.

இவரது மகளான அழகன் கலைச்செல்வி முள்ளிவாய்க்காலில், படையினரின் கட்டுப்பாட்டில்வைத்துக் காணாமல் ஆக்கப்பட்டார். தனது காணமல் ஆக்கப்பட்ட மகளைத் தேடி போராடி வந்தநிலையில் நோயினால் பீடிக்கப்பட்டிருந்த நிலையிலேயே திடீர் மரணமடைந்துள்ளார்.

அதேவேளை நேற்றையதினம் (11.11.19) 3ஆம் வட்டாரம், முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த, ஒரு மாவீரரின் தந்தையான பரமசாமி-சிறீஸ்கந்தராசா என்பவர் மாரடைப்புக் காரணமாக மரணமடைந்துள்ளார்.

இவரது மகனான, சிறீஸந்தராசா – யுகேன் என்பவர் இராணுவச் சோதனைச் சாவடியில்வைத்துக் காணாமல் ஆக்கப்பட்டிருந்தார். இவ்வாறு காணாமல ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவந்த சிறீஸ்கந்தராசா இவ்வாறு நேற்று மரணமடைந்துள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாக இடம்பெற்றுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது போராட்த்தில், இதுவரை 55ற்கும் மேற்பட்ட காணமல் ஆக்கப்பட்டோரது பெற்றோர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.